தாம்பத்தியம் - 17
முதல்  நாள் இரவில் புதுமண தம்பதியினர்  எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து  கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும். அன்றுதான் உறவு  நடக்கணுமா....?  ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட பின் நடப்பதே  பெரும்பாலும் சரியாக இருக்கும் என்று இதற்கு முந்தைய பதிவில் பகிர்ந்தேன்.   ஆனால் ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால் அதன் பின் விளைவுகள்  கொஞ்சம் அதிர்ச்சி அளிக்ககூடியதாக தான் இருக்கின்றன என்பதையும் மறுக்க  முடியவில்லை.
இன்றைய திருமண முறை
 நம்முடைய  இந்த திருமண முறை  இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில்  இருக்கும் என்ற  நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம் ,  அறிவு சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண்  அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைபடுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒருத்தரை  தேர்ந்தெடுக்க கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது  சந்தேகமே. அந்த  காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன்  மணம்  புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ  முயற்சித்தார்கள் . ஆனால் இப்போது அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால்  தலைமுறையினர் மாறிவிட்டனர். 
தெரிந்த  உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு  தான் வெகு விமரிசையாக  நடந்தேறியது.  திருமணமும் 10 நாளில் பெண் முடிவு செய்யப்பட்டு முதல் நாள்  நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகிய காலத்திற்குள் முடிவு  செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும்  நன்கு படித்தவர்கள்...நல்ல வேலையிலும் இருப்பவர்கள்...இருவரின் முழு  சம்மதத்தின்  படி  தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது...
ஒரே  மகன் என்பதால் திருமணம்  தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு  கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன் தான்  இழுத்து போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம்  முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது.  பின்னர்  இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.....
ஆனால் காலையில்  மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம்  கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல், 'எனக்கு பையனை பிடிக்கவில்லை...அவன்  ஆம்பளையே இல்லை ' ,என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது  பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை  முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதை பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு  விட்டாள்.
முந்தினநாள்  இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும்,  பிரயாண களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார்...நேரமும் அதிகமாகி  விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று  கூறி விட்டு இவள் பதிலுக்கும் கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார்.  ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்து போய் இருக்கிறாள்.  இதுதான் நடந்தது  
இப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி...??!
 (இந்த  விசயத்திற்கு குறை சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள்.  பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி  புரிந்துகொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே  இல்லை ) 
எதிலும் அவசரம்...எங்குதான் போய் முடியும் ...??
குழந்தை  பிறந்த இரண்டரை வயதிலேயே  படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில்  சேர்ப்பது , வேலை தேடுவது என்று எதிலும் அவசரம்...உணவிலும் கூட பாஸ்ட்  புட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....??!   
சீக்கிரமே  அனைத்திலும் தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற  பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்....!!  எதிர்பார்ப்புகள் விரைவாக  நிறைவேறனும் என்ற இன்றைய தலைமுறையினரின்  கட்டுக்கடங்காத வேகம் கடைசியில்  'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த  கல்யாணமும் விரைவாகவே முற்றும் போட கூடிய அளவில்  வந்து நின்றுவிட்டது. 
நான்  சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல  இன்னும்  செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான்  விசயத்தின் தீவிரம் இருக்கிறது. 
ஒரே  நாளில் எப்படித்தான் ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே  புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த  காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில்  கவனிப்போம், அப்புறம்  மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றே  முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..??
பெண்களில்  சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரபடுவதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி   விடுகிறது.  இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது  எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....?!
திருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10 , 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும்...இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இருப்பதை உணரமுடியும்.
தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் 
  ஒரு  மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு  நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய  ஆய்வு முடிவு.  அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை  பெற்றுக்கொள்வதர்க்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும்  இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே. 
ஆனால்  இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து  கொள்வது மிக அவசியமாகிறது. "உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன்  குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை  நாடுங்கள்" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.    
"வேலை  பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல்  வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை  பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்குள் காரணமான  'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட  ஹார்மோன் சுரப்பதை கட்டுபடுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன் தான். இந்த  ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது  என்பது  அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும்  'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை  உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்த்ததாகவும்'  ஆய்வுகள்  கூறுகின்றன.
இந்த  மாதிரியான விசயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி  எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை  தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.
தாம்பத்தியம் தொடரில்  இனி அடுத்து வருவது......
  

 
