Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 10

தாம்பத்தியம் - 10

வரதட்சணை என்னும் கொடுமை

பல திருமண உறவுகளும் பாதியில் பாதிக்கபடுவதில் முக்கிய பங்கு வகிப்பது வரதட்சணை என்ற கொடுமைதான்  காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.  சாதாரணமாக இருந்த இந்த பழக்கம் இப்போது கொடுமை படுத்தி வாங்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது.  எதிர்பார்த்ததில் கொஞ்சம் குறைந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகளை கொடுமை படுத்தும் கோரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்த முறை யாரால் ஏற்படுத்தப்பட்டது, ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று விவாதிப்பதை விட இந்த பழக்கம் எந்த அளவு கணவன், மனைவி உறவை கெடுக்கிறது என்று தான் இங்கு பார்க்கவேண்டும்.  

பெற்றோர்களே ஒரு விதத்தில் காரணம்

எந்த மகனும் எனக்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது, அதனால் இந்த தொகை கேளுங்கள் என்று விரும்புவது இல்லை.  தன்மானம் உள்ள எந்த ஆணும் தனக்கு ஒரு விலையை நிர்ணயிப்பதை விரும்பமாட்டான்.  ஆனால் பெற்றோர் செய்யும் தவறு பிள்ளையின் தலையில்...!! 

பெண்ணிற்கு சீதனமாக சில பொருள்களை வாங்கி கொடுப்பது அவர்களின் விருப்பம் ஆனால் இதிலும் தகுதிக்கு மீறி பலவற்றையும் வலிந்து கேட்பது இப்போது சாதாரணமாகி விட்டது.  ஒருவேளை அவர்களின் மகனே ஏன் என்று கேள்வி கேட்டால், " நீ  சும்மா இரு, உனக்கு ஒன்றும் தெரியாது, இது எல்லாம் உன் நல்லதுக்கு தான் " என்று கூறி அவனது வாயை அடைத்து  விடுவார்கள்.  ஆனால் அப்போது அவர்களுக்கே தெரியாது, இப்படி வலுகட்டாயமாக பெண் வீட்டாரிடம் வாங்கிய பொருட்கள் இருக்கும்  தைரியத்தில்  தான் அந்த  பெண் அவர்களின் மகனுடன்  தனிக்குடித்தனம் செல்ல வசதியாக இருக்கும் என்று....??!!

தனிக்குடித்தனம் திட்டமே இந்த பொருட்களை வைத்துதான் உருவாகிறது என்பது பாவம் அவர்கள் அறியமாட்டார்கள்.  ஆக ஒரு குடும்பம் பிளவு பட எவையெல்லாம் துணை புரிகிறது பாருங்கள்.  பல வீட்டிலும் இந்த பொருட்கள் படும் பாடு சொல்லி முடியாது.  பெண் வாழ கொடுக்கப்படும் சீதனம் குடும்பத்தை பிரிக்க துணை புரிவது கொடுமைதான்!!

கௌரவ பிரச்சனை

சில பெண்களையும் சும்மா சொல்லகூடாது, ஒரு கல்யாணம் முடிவு ஆனவுடன் முதலில் மாப்பிள்ளை வீட்டினரை  கேட்பது, " பெண்ணுக்கு  எத்தனை சவரன்  போட போகிறார்களாம் ? " ஒருவேளை கொஞ்சம் கம்மியா  இருந்துவிட்டது என்றால் "இவ்வளவுதானா? உங்க பையன் கை நிறைய சம்பாதிக்கிறான், இந்த வீட்டுக்கு வர அவளுக்கு கொடுத்து வச்சிருக்கணும்" அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி அவர்களை இன்னும் அதிகமாக கேட்க சொல்லி மறைமுகமாக தூண்டுவார்கள். இந்த பையனின் அம்மாவோ அடடா எல்லாம் பேசி முடித்து விட்டோமே கல்யாண நாளும் நெருங்கி விட்டதே என்ன பண்ண என்று பலவாறு யோசித்து குழம்பி விடுவார்கள். 

கடைசியில் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும் சமயம் பெண்ணை பெற்றவர்களை demand செய்வது. மேல கேட்டதை கொடுத்தால் தான் பெண் கழுத்தில் பையன் தாலி கட்டுவான் என்று சொல்லி அன்பாக மிரட்டுவது....?!  இது இன்றும்  சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

ஆனால் இது  எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான கட்டத்தில் பையன் வீட்டார் செயல் படும் விதம் இருக்கிறதே... ரொம்ப கேவலம்!!(யதார்த்ததிற்கும் ஒரு  அளவு இல்லையா என்று நீங்கள் நினைத்தாலும் சொல்லி ஆகவேண்டிய கட்டாயம்  உள்ளது) முதன் முதலாக புதுப்பெண் தன் கணவனை தனிமையில்  சந்திக்கும் அந்த நேரத்தில் அந்த பையனின் வீட்டாரால் தடுக்க படுகிறாள்.  வரவேண்டியவை வரும் வரை சந்திக்க வாய்ப்பில்லை என்று மறைமுகமாக அவளுக்கு அறிவுறுத்த படும்போது அந்த பெண்ணின்  மனநிலையும் அறையின் உள்ளே இருக்கும் ஆணின் மனநிலையும் என்னாகும்...? அப்படி கொடுத்து விட்டுத்தான் கணவனை சந்திக்க வேண்டும் என்றால் இந்த உறவின் புனிதத்திற்கு என்ன அர்த்தம்? சிந்திப்பார்களா இந்த மாதிரியுள்ள  பெற்றவர்கள்?! 

பெற்றவர்களின் இந்த செயலால் தான் அந்த பெண் தனி குடித்தனம் கிளம்பும்போது அந்த கணவனும் மனம் வெறுத்து கிளம்புகிறான். சில ஆண்களுக்கே தனது பெற்றோர்களின் செயல்கள் பிடிக்காமல்தான் வேறு வழி இன்றி பிரிந்து செல்கிறார்கள். பழி என்னவோ வழக்கம்போல் பெண்ணின் மேல் !!

சாபக்கேடான வசைமொழிகள்

வரதட்சணை ஒரு கலாசாரமாக மாறிவிட்டது என்பது போல் தோன்றினாலும் ஆண்கள் நினைத்தால் மாற்றிவிட முடியும் என்பது என் கருத்து. தான் ஒரு விலை பொருளாக மாற்ற படுவதை முடிந்தவரை மாற்றலாம்.  ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது,  சீர்திருத்தம் என்ற பெயரில் சிலர் வரதட்சனை  வாங்க மாட்டேன் என்று சொன்னாலும், இந்த பெண் வீட்டார் படுத்தும் பாடு இருக்கே பாவம்தான் அந்த ஆண்கள். "இவனிடம் ஏதாவது குறை இருக்கும் அதை மறைக்கத்தான் வேண்டாம்னு சொல்றான்" அப்படின்னு தங்களது கற்பனை குதிரையை தட்டிவிட்டு கதை பரப்பி விடுவார்கள்.  

என்னதான் செய்வது என்னவொரு மனிதாபிமானம் அற்ற பேச்சுகள் ? இப்படி பேசினால் எந்த ஆண் தான் முன் வருவான்...? அப்ப திருந்த வேண்டியது இந்த சமுதாயமா ? சமுதாயம் என்பது என்ன? ஆண் பெண் சேர்ந்த நாம்தானே சமுதாயம், அப்படி இருக்க ஆண்கள் குறை சொன்னாலும் பரவாயில்லை, தைரியமாக முன் வரவேண்டும், இளம்பெண்களும் அந்த ஆண்களை முழு மனதாய் வரவேற்க வேண்டும்.  சிறிது சிறிதாக சமுதாய மாற்றம் நிகழும். (கேட்பதற்கு நன்றாகதான் இருக்கிறது , நடக்கணுமே).  எந்த நல்ல மாற்றமும் உடனே நடந்து விடாது.... ஆனால் சிறு உளிதான் மலையை பெயர்க்கிறது என்பதை மனதில் வைத்தால் போதும், நாளைய சமுதாயம் சீராகும்.         

வாங்குபவர்கள் திருந்தும் முன், கொடுப்பவர்கள் முதலில் திருந்த வேண்டும்.

வன்கொடுமை சட்டம் படும் பாடு

கணவன் மனைவி உறவில் பிரிவு ஏற்பட  வரதட்சணை கொடுமை ஒரு காரணமாக இருந்தாலும்,  அதில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்காக போடப்பட்ட ஒரு சட்டம் இதைவிட மோசமாக வேற ரூபத்தில் குடும்பங்களை பந்தாடுகிறது. எதை பெண்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறோமோ அதை சில பெண்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு கணவனையும், அவனது குடும்பதினர்களையும் படுத்தும் பாடு இப்போது அதிகமாகி கொண்டு போகிறது.

சில சின்ன சின்ன, நாலு  சுவற்றுக்குள் முடிய வேண்டிய விசயத்துக்கும் உடனே மகளீர் காவல் நிலையம் போக தொடங்கி விட்டார்கள்.  அப்படி போகும்போது அந்த கணவன் மேல் தவறு இல்லை என்றாலுமே தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. அவனுடன் சேர்ந்து ஒன்று தெரியாத அப்பாவிகளும் தண்டனைக்கு பலி ஆகிறார்கள். சில பெண்களின் செயல்களை ஜீரணிக்கவே முடியாது, ஒன்றும் இல்லாத விசயத்துக்கும் கணவன் மேல் தாறு மாறாக, எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு கற்பனையாக கதை கட்டி புகார் கொடுக்கிறார்கள். சில  பெண்கள் பொய் அதிகம் பேச தொடங்கியதால் ஆண்கள் படும்பாடு மிகவும் வருத்தத்திற்கு உரியது. 

பெண்ணின் பேச்சிற்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது, ஆணின் உண்மைகூட அங்கே எடுபடாமல் போய்விடுகிறது.  ஒரு பெண் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற அளவில் இருந்தால் அப்பாவி ஆண்களின் நிலைமை....??  தாலி கட்டிய கணவன் என்ற உறவிற்க்கே கேவலத்தை ஏற்படுத்தும் சில பெண்களால் மற்ற நல்ல பெண்களுக்கும் அவப்பெயர் தான்.  

கணவன் கிழித்த கோட்டை தாண்டாத பெண்கள் இருக்கும் நம் நாட்டில்தான் இந்த மாதிரி கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மனைவிகளும் இருக்கிறார்கள். ஆண்களை அடக்கி வைக்க வேண்டும் என்று எண்ணியே பல  பெண்கள் உறுதி பூண்டு இருக்கிறார்கள்,  ஆண்கள்  ஒன்றும் இவர்களின் அடிமை இல்லையே, இருந்தும் இந்த மாதிரி சட்டங்களை சொல்லி பயமுறுத்தியே கணவர்களை பலரும் அடக்கி வைத்து இருக்கிறார்கள்.  

இந்த மாதிரி இருக்கும் வீடுகளில் எப்படி நல்ல தாம்பத்தியத்தை எதிர் பார்க்க முடியும்.....??!