Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 14

தாம்பத்தியம் - 14


முன்குறிப்பு

தாம்பத்தியம் பதிவு என்பது சாதாரணமாக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எந்த அளவிற்கு அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கிறது என்றும் அதனால் அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எந்த அளவுக்கு  பாதிக்க படுகிறார்கள் என்பதையும் அலசும் ஒரு பகிர்வு தான்.  ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் வேண்டும் என்றால் முதலில் ஒவ்வொரு குடும்ப அமைப்பும்  சீராக இருக்கவேண்டும்.  பல வன்முறையாளர்கள் தானாக உருவாவது இல்லை, உருவாக்கபடுகிறார்கள்.  அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் அமைப்பு சரியில்லாமல் போய்விடுவதும் அவர்கள் தடம் மாற ஒரு காரணம்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கபோவது இல்லை.
 
எது ஆரம்பம் ?


கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பொதுவாக அடிப்படையில்  சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, சிலர் அதை பெரிது படுத்துகிறார்கள். சிலர் அது இயல்புதானே என்று கண்டுகொள்வதில்லை. முந்தைய பாகத்தில் நான் குறிப்பிட்ட ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பது எல்லாம் குடும்பத்தில் இன்றும் நிலவி கொண்டுதான் இருக்கிறது....ஆனால் வேறு பெயரில்....!!? ஒரு மனைவி, 'எனக்கென்று  இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது..? நான் உன்னைவிட எதில் குறைந்து போய்விட்டேன்' என்று கொடி பிடித்தாலே அது உரிமைகோரும் ஒரு நிலைதானே. இந்த உரிமை கோரலே நீதிமன்றம் வரை  போய் முடிகிறது என்பதை என்னால் அழுத்தமாக சொல்லமுடியும்.

என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களில், பெண் , 'அந்த ஆளை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்' என்றும் அவளின் கணவன்  'ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிர் இருந்தால்,  ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்...? ' என்றும்  ஆலோசனை கேட்க வந்த இடத்திலும் சண்டை போடுவதை பார்க்கும் போது இதை ஆணாதிக்கம், பெண்ணுரிமைக்கு இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சனை என்று தான் எண்ண முடிகிறது.    


வேண்டாமே குடும்பத்தில் ஈகோ

'நான் பெரியவன்' இல்லை 'நான் பெரியவள்' என்ற வாதம் சாதாரண குடும்பம் நடத்த தேவையா ?  மாட்டுவண்டியில் பூட்ட பட்ட இரண்டு மாட்டில்  ஒன்று ஒரு பக்கமாகவும், மற்றொன்று வேறு பக்கமாகவும்  போனால் வண்டி ஓடுவது எவ்வாறு ? குடும்பத்திற்கும்  இது சரியாக பொருந்தும்.  அலுவலகத்தில் சக ஊழியர்  ஏதாவது குறை சொல்லி பேசினால் கூட பரவாயில்லை, 'சொன்னால் சொல்லிட்டு போறாங்க ' என்று பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறோம் ,  ஆனால் சொந்த வீட்டில் அந்த 'விட்டுக் கொடுத்தல்' என்பது  ஏன் இல்லாமல் போய்விடுகிறது .  

இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். என்னிடம் சில பெண்கள் நான் விட்டுகொடுப்பதை  பற்றி சொன்னபோது அவர்கள் என்னிடம் கேட்டதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.  

*   விட்டுக்கொடுத்தல் என்றால் என்ன ?
*   எதை விட்டுக்கொடுக்கணும் ? 
*   எதுக்கு விட்டுக்கொடுக்கணும் ?
*   யார் விட்டுக்கொடுக்கணும் ?
*   எவ்வளவு விட்டுக்கொடுக்கணும் ?
*   விட்டுக்கொடுத்தால்  மறுபடி எப்போது, எப்படி திருப்பி வாங்குவது ?

இந்த கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் , 'உண்மை  என்ன' என்பதை அறியாமல்  தானே இருக்கிறோம் என்றே தோன்றுகிறது . எனக்கு தெரிந்த  பதில்கள் கீழே,   

*  கணவன் கோபமாக பேசும்போது பதிலுக்கு மனைவியும் கோபப்படாமல் பொறுமையை கைக்கொண்டு, தனக்குள் எழும் கோபத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். அதே போல் மனைவியின் கோபத்தின் போது கணவனும் நடந்து கொள்ளவேண்டும். 
     
*  கோபம், ஆத்திரம் , பழி வாங்கும் உணர்ச்சியை, தான் என்ற கர்வத்தை, சில நேரம் சுயமரியாதையை....?!!  (அது பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்தது) எல்லாம் விட்டு கொடுத்தும் கதை நடக்கலேன்னா,  வேற வழியே இல்லை... கடைசியாக விழுந்துவிட வேண்டியதுதான் கையில் அல்லது காலில் ( உங்க விருப்பத்தை பொறுத்தது ) ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும்....??!  ) நமக்கு அரசாங்கத்தில் ஏதாவது காரியம் ஆகணும் என்றால் கை, காலையாவது பிடித்து வேலையை முடிக்கிறோம் அல்லவா..., அப்படி நினைத்து கொள்ள வேண்டியதுதான்.( வேற வழி...?! ) 

*  அப்போதுதான் தாம்பத்தியம் என்ற வண்டி நன்றாக ஓடும். இல்லையென்றால்  தடம் மாறி பெரிய விபத்தைத்தான் சந்திக்க வேண்டியது  இருக்கும்.  

* யார் விட்டுக்கொடுத்தாலும் நல்லதே. முதலில் விட்டுக்கொடுத்தவர்களே வென்றவர்களாக மதிக்கப்படுகிறார்கள் . குடும்பத்தைப் பொறுத்தவரை தோல்வியும்  இன்பமே. கிட்டத்தட்ட வாழ்நாளின் இறுதி மூச்சை  விடும்வரை கூட இருந்தாகக்  கூடிய துணைக்காக பொறுத்து போவதால் பெரிதாக என்ன இழப்பு நேர்ந்து விட  போகிறது? அதனால் இன்பமும், நிம்மதியும் பல மடங்கு அதிகரிக்குமே தவிர இழப்பு ஒன்றும் இல்லை.  

*  விட்டுக்கொடுகிறது என்று முடிவு செய்தபின், அதில் அளவு என்ன வேண்டி இருக்கிறது...?? அரைகுறையாக இல்லாமல் முழு மனதுடன் முழுதாக விட்டு கொடுப்பதே சிறந்தது.

*   நாம் ஒன்றும் நல்ல விசயங்களை விட்டு கொடுக்கவில்லை.... அதை திருப்ப பெற...?!  தீய தன்மைகளான கோபம், ஆத்திரம், வெறுப்பு, எரிச்சல், ஈகோ, பழி உணர்ச்சி, வறட்டு பிடிவாதம்  போன்றவைகளைத்தான் விட்டு கொடுக்கிறோம்.... இவற்றை விடுவதால் உங்கள் மனது தெளிவாகிறது, மன அழுத்தம், இறுக்கம்  குறைகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது, முகம் பிரகாசம்  அடைகிறது . இதை விட வேறு என்ன வேண்டும்...? ஆரோக்கியம் தான் பெருகும், குடும்பமும் சந்தோசம் பெறுகிறது, முக்கியமாக குழந்தைகளுக்கு நிம்மதி கிடைக்கிறது தங்கள் பெற்றோர்களை எண்ணி.....!!

மாற்றி  சொல்வோம்

ஒரு பெண் தன் ஆயுள் முழுக்க தந்தையை, கணவனை , மகனை என்று ஏதாவது ஒரு ஆணை சார்ந்து தான் இருக்கணும் என்று சொல்வாங்க... ஆனால் இனி அப்படி சொல்லாமல் அப்படியே  மாற்றி  சொல்வோமே....!!?  எல்லா ஆண்களுமே தங்களது வாழ்வை கழிக்க தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ ஏதோ ஒரு வடிவில் பெண்ணின் துணை தேவை படுகிறது என்று....!!  ஆண்கள் தங்கள் வாழ்வை நிறைவாய் முடிக்க பெண் அவசியம்.

கணவன் இறந்ததும் ஒரு பெண் சூழ்நிலையை சமாளித்து வாழ்க்கையை நகர்த்திவிடுவாள், ஆனால் திடிரென தன் மனைவியை இழந்த ஆண்களால் அப்படி சமாளிக்க இயலாது, தடுமாறி விடுவார்கள்.

**********************************************************

பின் குறிப்பு

என் மனதை பாதித்த சில விசயங்களையும், தினம் சந்தித்து கொண்டு இருக்கும் சிலரின் குடும்ப பிரச்சனைகளையும், பிறரின் அனுபவங்களையும் இங்கே எழுதுகிறேன். தனிப்பட்ட என் கற்பனை இல்லை, அனைவருக்கும் தெளிவாக புரியும் அளவிற்கே என் எழுத்து நடை இருப்பதாக எண்ணுகிறேன். இதை  ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு என்று இல்லாமல் உங்களுக்கு தெரிந்த அனுபவங்கள் ஏதும் இருந்தால் ,  இங்கே  பகிர்ந்து கொண்டால் பலர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.)    
தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். அடுத்து தொடர்ந்து வரும்  பதிவுகளில்  அதன் உண்மையான அர்த்தம் என்ன ?  இருவரும் அந்த விசயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் ? அந்தரங்கம் சரியில்லாமல் போவதால், அது  மொத்த குடும்ப உறவையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்றும் விரிவாக, தெளிவாக அதே நேரம் நாகரீகமாக பகிருகிறேன்.