Sunday, October 16, 2016

கோபம் தவிர்!

கோபம் தவிர்!

இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அடிக்கடி கோபவயப்படுவான்.  எவ்வளவு  முயன்றும் அவனால் தனது  கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 

ஒருநாள் அவனுடைய தந்தை அவனை அழைத்து, ஒரு சுத்தியலையும் நிறைய ஆணிகளையும் கொடுத்து, ''இனி மேல், எப்போதெல்லாம் உனக்குக் கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் ஆணிகளை எடுத்துச் சென்று நம் வீட்டின் பின்புறச் சுவரில் அடித்து வை'' என்றார். அவனும் அப்படியே பின்பற்றினான். முதல்நாள் 10 ஆணிகள், அடுத்த நாள் 7, அதற்கும் அடுத்த நாள் 5... என படிப்படியாக அவன் ஆணி அடித்து வந்தான்; அவனது கோபமும் அந்த அளவுக்கு மட்டுப்பட்டு வந்தது. ஓரிரு வாரங்கள் கழிந்தபின் ஒருநாள் ஒரே ஒரு ஆணி மட்டுமே அடித்தான். அன்று அவன் ஒருமுறை மட்டுமே கோபப்பட்டிருந்தான். 

நேராக தந்தையிடம் சென்றவன், ''மொத்தம் 45 ஆணி களை அடித்துவிட்டேன். இனி, எனக்கு அதிகமாக கோபம் வராது'' என்று கூறினான். அவன் தந்தை விடுவதாக இல்லை. 
''சரி! இனி கோபம் வராத நாளில் ஒவ்வோர் ஆணியாகப் பிடுங்கி எறி'' என்றார். அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். சில நாட்கள் கழித்து தந்தையிடம் வந்தவன், ''எல்லா ஆணிகளையும் பிடுங்கிவிட்டேன்'' என்றான் பெருமிதத்துடன்!

உடனே அப்பா கேட்டார்: ''ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். ஆனால், சுவரில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்?''

அவரே தொடர்ந்து, ''உனது கோபமும் இப்படித்தான் பலபேரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?'' என்றார்.இளைஞன் தனது தவறை உணர்ந்தான். அன்றுமுதல் அவன் கோபப்படுவதே இல்லை!