Sunday, October 16, 2016

ஸ்ட்ரெஸ் தவிர்க்க ஈஸி வழிகள்!

ணிச்சுமை, பரபரப்பான ஓட்டம். இரண்டும்தான் இன்று நம்மில் பலரின் வாழ்க்கை. வேலை, குடும்பம், கடன்கள், சுமைகள் என நாலா பக்கமும் நெருக்க, மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள, நம் உடலுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும். இதற்கு, மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை, மனம் மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவும்.

மசாஜ், ஸ்பா, லாஃப்பிங் தெரப்பி என எத்தனையோ ரிலாக்ஸிங் டெக்னிக்குகள் உள்ளன. ரிலாக்ஸேஷன் தெரப்பிகளை எப்படிச் செய்வது? இவற்றால் என்ன பலன்கள் என்பதை விவரிக்கிறார் யோகா மற்றும் நேச்சுரோபதி சிகிச்சை நிபுணர் மாலதி.

ஸ்ட்ரெஸ் வாழ்க்கை ஏன்?

எடுத்த எடுப்பில் மன அழுத்தம் மிகக் கெடுதலானது என்று முடிவுகட்டிவிட வேண்டாம். இந்த மனநிலை மட்டும் இல்லை என்றால், மனிதகுலமே தழைத்திருக்காது. 

ஆதிகாலத்தில், மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, இந்த மன அழுத்தம்தான் அவனைக் காக்கும் எச்சரிக்கைக் கருவியாக, முதல்நிலைத் தற்காப்பாக இருந்தது. 

ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது, உடல் தானாகவே ஏதோ பாதிப்பு என்பதை உணர்ந்துகொள்கிறது. ஒன்று அதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தப்பி ஓட வேண்டும் என்ற நிலைக்கு உடலைத் தயார் செய்கிறது. 

உடனடியாக, அட்ரினல் சுரப்பி அட்ரினலின், கார்டிசோல் உள்ளிட்ட சில ஹார்மோன்களை சுரக்கிறது. இவை உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதயம் வேகமாகத் துடிக்கிறது. தசைகளுக்கு அதிக அளவில் ரத்தம் பாய்கிறது. செரிமானம் போன்ற அந்த நேரத்துக்கு தேவைஇல்லாத சில செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, பிரச்னையை எதிர்கொள்ள முழு உடலும் தயார் செய்யப்படுகிறது. 

ஏதாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ உங்களின்  திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மனஅழுத்தம்' (ஸ்ட்ரெஸ்) என்று கூறலாம்.

இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

தற்காப்பு ஆயுதமாக இருந்த ஸ்ட்ரெஸ், இன்று மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறிவிட்டது. இதற்கு, நம்முடைய தவறான வாழ்க்கைமுறையும் ஒரு காரணம். 

மன அழுத்துத்துக்கு என்ன காரணம்?

சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவற்றால் ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது.

மனவிரக்தி 

ஓரளவுக்கு சுமாராகப் படிக்கும் மாணவனை, அவனது பெற்றோர் அதிகப் பணம் செலவழித்து பிரபல பள்ளியில் சேர்த்து, படிப்படி என்று சொல்லும்போது, இயலாமையால் அவனுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இவ்வளவு செலவு செய்தும், பையன் சரியாகப் படிக்கவில்லையே என்று நினைத்து பெற்றோருக்கும் அதே பிரச்னை. ஓர் இலக்கை அடைய, பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது, 'மனவிரக்தி' ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் உண்மையில்லாத இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், ஒப்பீடுகளையும் மனதில் வைத்து விரக்தியடைகிறோம்.

மாற்றம்

சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது நம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், நம் பொறுமைக்கும், சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம் - திருமணம், பதவி உயர்வு, மகப்பேறுக் காலம், பண வரவு போன்ற சந்தோஷமான நிகழ்வாகவோ... குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நஷ்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வாகவோ இருக்கலாம்.

முரண்பாடுகள்

காலையில் சீக்கிரம் எழுந்தால்தான், நேரத்துக்கு பள்ளி அல்லது அலுவலகம் செல்ல முடியும். ஆனால், ஏழு மணி வரையில் தூக்கம் கண்ணைக்கட்டும். தூங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்... ஆனால், அலுவலகம் செல்ல தாமதம் ஆகும். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இருந்து முரண்பாடுகள் எழுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறோம்.

நிர்பந்தம்

மன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவையே இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும், மனதுக்குப் பிடித்தவாறும் வாழ முடிவது இல்லை.

மனஅழுத்தம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள்...

சுவாச மண்டலம்: இதயம் வேகமாகத் துடிக்கும்போது, மூச்சை அதிக அளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.

இதயச் செயல்பாடு: கார்டிசோல் ஹார்மோன் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் ரத்தம் பம்ப் செய்யப்படும்போது, ரத்தக் குழாய்கள், இதயத் தசைகள் அதிக அளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இப்படி நடக்கும்போது, ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படும், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்

மன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிக அளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது, புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இரைப்பையின் செரிமானம்  பாதிக்கப்படும். இதனால் ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிப்பதும் பாதிக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலம்

கார்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்பட்டு விந்தணு உற்பத்தி குறையலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சீரான மாதவிலக்கு வராமை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.  உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.

மன அழுத்தம் போக்கும் ரிலாக்ஸேஷன் டெக்னிக்

ரிலாக்ஸேஷன் தெரப்பிக்கள், டெக்னிக்குகள் மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியான, தரமான வாழ்வை வாழ உதவுகின்றன. ரிலாக்ஸேஷன் வெறும் மன அமைதியை மட்டும் தருவது இல்லை. பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கான வாய்ப்பையும் அது தடுக்கிறது.  மேக்னட்டிக் தெரப்பி, களிமண் தெரப்பி, ஃபிஷ் ஸ்பா தெரப்பி, ஐஸ் தெரப்பி, நீராவிக் குளியல் உள்ளிட்ட ஸ்பா தெரப்பிக்கள் இதில் முக்கியமானவை. 

ரிலாக்ஸேஷன் தெரப்பிக்கள் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

*இதயத் துடிப்பு விகிதம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது.

*ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.

*சுவாசிக்கும் விகிதம் சீராகிறது.

*மன அழுத்தத்துக்கான ஹார்மோன்கள் அளவு குறைகிறது.

*தசைகளுக்கான ரத்த ஓட்டம் சீராகிறது.

*தசை இறுக்கம், அழுத்தம் மறைவதால் வலி நீங்குகிறது.

*மன அமைதி கிடைக்கிறது.

*சோர்வை விரட்டுகிறது.

*கோபம், எரிச்சல் மன உளைச்சலைப் போக்குகிறது.

*தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இதனால், எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் திறன் பிறக்கிறது.

ரிலாக்ஸாக்கும் மூச்சுப் பயிற்சிகள்


பிராணாயாமம்

மூச்சுப் பயிற்சிகளை தரையில் ஒரு விரிப்பை விரித்து, அதன் மீது சப்பணம் இட்டு அமர்ந்துதான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சிகளில் மிகவும் பிரபலமானது பிராணாயாமம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்ய ஏற்றது. 

மூக்கின் வலது துவாரத்தைக் கட்டை விரல் கொண்டு மூடி, இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு, இடது துவாரத்தை மோதிர விரலால் மூடி வலது துவாரம் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். 

மீண்டும் மூச்சை விட்ட வலது துவாரம் வழியாகவே மூச்சை உள்ளே இழுத்து, இடது துவாரம் வழியாக வெளியே விட வேண்டும். இவ்வாறு தினமும் காலை 5-10 முறை செய்யலாம். 

பலன்கள்: உடலில் சேர்ந்த அதீத அழுத்தத்தைக் குறைத்து, நுரையீரலுக்கு அதிகப் பிராண வாயுவை அளிக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகி அந்நாளை உற்சாகமாக்குகிறது. மூளை புத்துணர்ச்சி பெறும். மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும்.

ஷீதலி

இந்த மூச்சுப் பயிற்சியில் நாக்கை வெளியே நீட்டி குழாய் போல உள்பக்கமாக மடித்துக் கொள்ள வேண்டும். இதன் வழியாக மூச்சை உள்ளே இழுத்து மூக்கின் வழியாக வெளியே விடவேண்டும். இப்படி 5 -10 முறை செய்ய வேண்டும். 

பலன்கள்: இது உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும் மூச்சுப் பயிற்சி. மனதை அமைதி அடையச் செய்கிறது. ஆளுமைத்திறனை அதிகரிக்கிறது. பிரச்னையைச் சமாளிப்பதற்கான, மன உறுதியையும் செயல்திறனையும் அதிகரிக்கிறது.

சிட்காரி

இந்த மூச்சுப்பயிற்சியில் பற்கள் அனைத்தும் தெரியும்படி வாயை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பல் இடுக்குகள் வழியாக மூச்சை வாய்க்குள் இழுக்க வேண்டும். பிறகு, மூக்கின் வழியாக வெளியே விட வேண்டும். இப்படி, 5-10 முறை செய்ய வேண்டும். 

பலன்கள்: இதைச் செய்யும்போதே, வாயின் உட்பகுதி, அன்னம், நாக்கு ஆகியவை  குளிர்ச்சி அடைவதை உணரலாம். உடல் வெப்பம் குறையும். உடலின் பித்த அளவு குறையும். இந்த மூச்சுப் பயிற்சி ரத்தத்தின் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. இதயத்துடிப்பை சீராக்க உதவுகிறது. திடீர் படபடப்பைக் குறைக்கிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்திறனை மேம்படுத்தும். கணையத்தின் செயல்திறனை அதிகரித்து, இன்சுலின் சுரப்பை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது.

பிராமரி

விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்து, இரு ஆட்காட்டி விரல்களைக்கொண்டு இரு காதுகளையும் இறுக்கமாக அடைத்துக்கொள்ள வேண்டும். வாயை மூடியபடி, தேனீக்கள் போல 'ம்ம்ம்..." எனச் சத்தம் எழுப்ப வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட இதைச் செய்யலாம்.

பலன்கள்: இப்படிச் செய்யும்போது வெளி சப்தங்கள் எதுவும் காதில் விழாது. இதனால், உடலுக்குள் 'ரெசோனன்ஸ்' எனப்படும் அதிகபட்ச ஒலி அதிர்வலைகள் உண்டாகின்றன. இது உடல் முழுதும் பரவி, மனஅழுத்தம், படபடப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது. இந்தப் பயிற்சி, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

ரிலாக்ஸேஷன் தரும் ஆசனங்கள்


மன அமைதி தருவதில் யோகாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தினசரி, யோகா பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். யோகா பயிற்சியாளரிடம் கற்று, அதன் பிறகு யோகா செய்வது நல்லது.

உட்டான பாதாசனம்

"உட்டான" என்றால் தூக்குதல். பாதத்தைத்  தூக்குதல் என்பது இதன் பொருள். தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை செங்குத்தாகத் தூக்க வேண்டும். இதே நிலையில் முடிந்தவரை இருக்க வேண்டும். 

பலன்கள்: 
இந்த ஆசனம் வயிறு மற்றும் தொடைத்  தசை வலுவுக்கு மிகவும் நல்லது. இந்த ஆசனம் செய்யும்போதே, உடலில் மெல்லிய அதிர்வை உணர முடியும்.

கோமுக ஆசனம்

"கோ" என்றால் பசு. இந்த ஆசனம் பசுவின் முகம் போலக் காட்சியளிக்கும். விரிப்பின் மீது அமர்ந்துகொள்ள வேண்டும். வலது தொடையை இடது தொடையின் மீது போட்டு, வலது காலை உடலுக்குப் பின்புறம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்ட வேண்டும். வலது கையை உயர்த்தி வலது தோள்பட்டையைத் தொடும்படி வைத்துக்கொண்டு, வலதுகை விரல்களை இடது கை விரல்களால் பிடிக்க வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க வேண்டும்.

பலன்கள்: நுரையீரலுக்கு நல்லது. கை, மணிக்கட்டு நரம்புகள் வலுவடையும். 

பிட்டில் ஆசனம்

பசு மாடுபோல தண்டுவடம் கீழ்நோக்கி வளைந்து காணப்படுவதால், இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது. விரிப்பின் மீது மண்டியிட வேண்டும். பிறகு இரண்டு முன் கை மற்றும் உள்ளங்கைகளை நிலத்தில் பதிந்து, தலையை நேரே பார்த்தபடி வைக்க வேண்டும். தண்டுவடத்தை முடிந்தவரை கீழ் நோக்கி வளைக்க வேண்டும். இதே நிலையில் மூன்று நிமிடங்கள் இருக்க வேண்டும். 

பலன்கள்: 
இதன்முலம் சிறுநீரகத்துக்கு மேல் புறம் உள்ள அட்ரினல் சுரப்பி மசாஜ் செய்யப்படுகிறது. கோபம், பயம், படபடப்பு, ஆகியவற்றை அட்ரினல் சுரப்பிதான் கட்டுப்படுத்துகிறது என்பதால், இந்த உணர்வுகள் கட்டுப்படும்.

சஷாங்காசனம்

விரிப்பின் மீது மண்டியிட்டு, பின்னங்கால்கள் மேல் அமர வேண்டும். கைகளை நன்கு முன் நீட்டி உள்ளங்கைகள் நிலத்தில் பதிய படுக்க வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க வேண்டும். 

பலன்கள்:
 இதனால் முழு உடலிலும் ரத்தஓட்டம் சீராகப் பாய்கிறது. நினைவுத்திறன் மேம்படுகிறது. கர்ப்பப்பை வலுவடைகிறது. செரிமான மண்டல உறுப்புகள் வலுவடைகின்றன.

மர்ஜரி ஆசனம்

'மர்ஜரி' என்றால் பூனை. உடலை பூனை போல வளைத்து ஆசனம் செய்வதால் இந்தப் பெயர். விரிப்பின் மீது மண்டியிட்டு, உள்ளங்கைகளை நிலத்தில் பதிந்து பூனை போல நான்கு காலில் நிற்க வேண்டும். 

நிலம் நோக்கி தலை குனிந்திருக்க வேண்டும். தண்டுவடத்தை இயன்றவரை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இதே நிலையில் மூன்று நிமிடங்கள் இருக்க வேண்டும்.

பலன்கள்: தண்டுவடத்தை மேல்நோக்கி வளைப்பதால், இங்கு உள்ள நரம்புகள் மசாஜ் செய்யப்படுகின்றன. பல மணிநேரம் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் முதுகுவலி, தினமும் காலை ஐந்து நிமிடங்கள் இந்த ஆசனம் செய்வதன் மூலம் குறையும். மனஅழுத்தம் நீங்கும். உடல் வலுவாகும்.

மேக்னெட்டிக் பெல்ட் தெரப்பி (Magnetic belt therapy)

நமது உடலில் இயல்பாகவே மின்காந்த சக்தி உள்ளது. இதுவே உடலின் சமநிலையை மேம்படுத்தி, நாம் நேராக அமர, நிற்க, நடக்க, ஓட உதவும். உடலின் மின் காந்த சக்தி எப்போதும்  ஒரே சீராக இருப்பது அவசியம். இந்த சமநிலை பாதிக்கப்படும்போது, உடல்வலிகள், சதைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேக்னெட்டிக் பெல்ட் தெரப்பியில் சிகிச்சை பெறுபவர் ஒரு மர நாற்காலியில் அமரவைக்கப்படுவார். பிறகு, குறைந்த ஈர்ப்பு விசை உள்ள காந்தங்கள் பொருத்தப்பட்ட பெல்ட் அவருக்குப் பொருத்தப்படும். ஐந்து நிமிடங்கள் இதைக் கட்டி இருப்பதன் மூலம் காந்த அலைகள் உடலில் பாய்ந்து வலிகளை குணமாக்கும்.

பலன்கள்:
 இடுப்புவலி, முதுகுத்தண்டுவடப் பிரச்னைகள், உடல் அசதி போன்ற பிரச்னைகள் குணமாகும். இடுப்புத் தசைகள் வலுவடைவதுடன் அடிமுதுகில் ரத்த ஓட்டம் சீரடைகிறது.

லெட் I லெட் V (Lead 1 Lead 5)

இதுவும் காந்த அலைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் தெரப்பிதான். இதில், சிகிச்சை எடுத்துக்கொள்பவர் மர நாற்காலியில் அமர்த்தப்படுவார். அவரது உள்ளங்கை மற்றும் பாதங்களின் அடிப்புறம் அதிக ஈர்ப்புவிசைகொண்ட, சக்திவாய்ந்த நான்கு காந்தங்கள் வைக்கப்படும். இதே நிலையில் 10 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். 

பலன்கள்: 
நமது உடலின் வலது மற்றும் இடதுபுறங்களில் காந்த அலைகள் சென்று இயக்கத்தை சீராக்குகின்றன. கை, கால் வலி, உடல்வலி, மூட்டுவலி, அசதி, சோர்வு நீங்கி உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகின்றன.

மூலிகைக் களிமண் தெரப்பி (Herbal Mud Theraphy)

இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட மண், கரம்பை மண். இதனுடன் முல்தானி மட்டி, ரோஜா இதழ்கள், கோரைக் கிழங்கு, பூலாங் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், வேப்பிலை, குப்பைமேனி, ஆடுதொடா இலை, உப்பு ஆகியவை சேர்த்து அரைக்கப்பட்ட பவுடரை, வயிறு, கழுத்து, கை, கால், முகத்தில் நன்றாகத் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுவே மூலிகைக் களிமண் தெரப்பி.

பலன்கள்: 
இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட மண்ணுடன், மூலிகைகளும் சேருவதால், தோலில் உள்ள கழிவுகள் நீங்கும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் வெப்பம் குறையும். மழைக் காலங்களில், இந்த மூலிகைக் களிமண் தெரப்பியை எடுக்க வேண்டாம்.

கண்களில் போடப்படும் களிமண் பேக் (Mud pack over eyes)

சுத்தமான களிமண்ணை பருத்தித் துணியில் சுற்றி, மூடிய கண்கள் மேல் வைக்க வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் வரை இப்படி இருக்க வேண்டும்.  

பலன்கள்: இந்த தெரப்பி மூலமாக, கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். கண்கள் குளிர்ச்சி அடையும். கண் நரம்புகளின் ரத்தஓட்டம் அதிகரிக்கும். தலைவலி குணமாகும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்பதால், மனமும் புத்துணர்வு பெறும்.

இடுப்பில் போடப்படும் களிமண் பேக் (Mud pack over Abdomen)

சுத்தமான களிமண்ணை, பருத்தித் துணியில் வைத்து, இடுப்பைச் சுற்றிக் கட்ட வேண்டும். அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். 

பலன்கள்:
 அடிவயிற்றில் உள்ள பித்தம் தணியும். பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதீத உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மனஅழுத்தம், படபடப்பு ஆகியவை தவிர்க்கப்படும். கர்ப்பப்பைத் தசைகள் இந்தத் தெரப்பி மூலமாக மசாஜ் செய்த பலனைப் பெறுகின்றன.

ஃபிஷ் ஸ்பா தெரப்பி

மீன்களைவைத்து உடல் அழுக்குகளைச் சுத்தம்செய்யும் தெரப்பி. இதற்கென பற்களற்ற குறிப்பிட்ட வகை மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மீன்கள் உள்ள தொட்டிக்குள் கைகள், கால்களை வைத்துவிட்டு, 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். மீன்கள் கை, கால்களில் உள்ள வெடிப்புப் பகுதிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவற்றை உண்ணும். ரசாயனங்களால் பெடிக்யூர், மெனிக்யூர் செய்வதைவிட, இது பாதுகாப்பானது.

பலன்கள்: கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கும், கை, கால்களில் தோற்றம் பொலிவாகும். மீன்கள் கடிக்கும்போது ஏற்படும் கிச்சுகிச்சு மூட்டும் உணர்வால் (Ticklish sensation) மூளையில் உள்ள எண்டார்ஃபின் சுரப்பு அதிகரித்து, மகிழ்ச்சியான உணர்வு மேலிடும். மனம் ரிலாக்ஸ் ஆகும்.

ஐஸ் தெரப்பி

ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுத்தால் போதும். ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ் தெரப்பி செய்யலாம். ஐஸ் தெரப்பியை தொடர்ந்து தர வேண்டியவர்களுக்குச் சளிப்பிடித்தால், நிறுத்திவிட்டு குணமானதும் மீண்டும் தரலாம். 

பலன்கள்: 
உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஐஸ் தெரப்பி தரும்போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. சிறுவயதில் உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றிலும் அதீதத் துறுதுறுப்பான (Hyper active) குழந்தைகளுக்கு முதுகுத்தண்டுவடத்திலும் இந்த தெரப்பியைத் தரலாம். வெரிகோஸ் வெயின், முகப்பரு மற்றும் தைராய்டு பிரச்னைக்கும் ஐஸ் தெரப்பி நல்ல தீர்வு.  

நீராவிக் குளியல் (Steam bath)

நீராவி உள்ள அறை அல்லது பிரத்யேக பெட்டிக்குள் சிகிச்சை பெறுபவரை உட்காரவைத்து இந்த சிகிச்சை அளிக்கப்படும். நீராவியால் உடலில் உள்ள நீர்ச்சத்து, கழிவுகளோடு சேர்ந்து வியர்வையாக வெளியேறிவிடும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் 45 டிகிரி வெப்ப நிலையைத் தாங்க முடியாதவர்களுக்கு, அவர்கள் உடல் தாங்கும் வெப்பநிலையில் சிகிச்சை தரப்படும். 

குறிப்பு: நீராவி சிகிச்சை பெறுவதற்கு முன்பும், பின்பும் அதிக அளவு நீர் அருந்த வேண்டும். சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகக் குளிக்க வேண்டும். இதயநோய், ரத்த அழுத்தப் பிரச்னை, வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த சிகிச்சையை எடுக்க வேண்டாம்.

பலன்கள்: நீராவிக் குளியல், உடல் உழைப்பு குறைந்த வேலைகளைச் செய்பவர்களுக்கு உள்ள இறுக்கமான தசைகளைத் தளர்வாக்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராகும். உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடலும் மனமும் ஃப்ரெஷ் ஆகும்.

முதுகுத் தண்டுவட தெரப்பி (Spinal Theraphy)

முதுகுத்தண்டுவடக் குளியலுக்கு என உள்ள பிரத்யேக 'டப்'பில் சிகிச்சை எடுக்க வேண்டும். டப்பின் மீது முதுகு படும்படி படுத்துக்கொள்ள வேண்டும். முதுகுத் தண்டுவடத்தின் மேல் தண்ணீரானது, நுண்ணிய துளைகள் வழியாக அதிவேகமாகப் பீய்ச்சி அடிக்கப்படும். 

பலன்கள்: 
தண்டுவடத்தில் பாயும் அதிக வெதுவெதுப்பான நீரினால் முதுகுவலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தூண்டப்படும். இதனால், உடல் புத்துணர்ச்சி அடையும். சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகத் தூக்கம் வரும். மனஅழுத்தம், தூக்கமின்மை நீங்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலைசெய்பவர்களுக்கு ஏற்ற சிகிச்சை இது. முதுகுவலி நீங்கும். முதுகுத்தண்டுவடம் வலுவடையும்.

எண்ணெய் மசாஜ் (Oil Massage)

உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய்க் கலவையை ஊற்றி, சுமார் 75 நிமிடங்கள் மசாஜ் செய்யப்படும். கை, கால், வயிறு ஆகிய பகுதிகளில் மட்டும் பிரத்யேகமாகவும் மசாஜ் செய்யப்படும்.

குறிப்பு: 
சைனஸ், சளிப் பிரச்னை, காய்ச்சல், சரும நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் எண்ணெய் மசாஜ் செய்துகொள்ளக் கூடாது.

பலன்கள்: 
எண்ணெய் மசாஜ் செய்துகொள்வதால், உடல் வெப்பம் குறையும். உடல்வலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் புத்துணர்ச்சி அடையும்.

மெழுகு ஒத்தடம் (Wax Treatment)

உடல் தாங்கக்கூடிய வெப்பநிலையில் உருகிய மெழுகை ஒரு துணியில் நனைத்து, எந்த இடத்தில் வலி இருக்கிறதோ, அந்த  இடத்தில் மெழுகு கட்டப்படும். 15 நிமிடங்கள் வரை இப்படி இருக்க வேண்டும்.

பலன்கள்: மெழுகின் சூட்டில், கட்டியின் வீக்கம், வலி குறையும். மாத்திரை மருந்துகள் இன்றி, எளிமையாக இந்த முறையில் வலியைக் குறைக்கலாம். விபரீதமான கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகளுக்கு இந்த சிகிச்சை பயன்தராது. உடலில்  ஏதேனும் வலி, வீக்கம் இருப்பவர்களுக்கான சிகிச்சை இது.

அக்குபஞ்சர் (Acupuncture)

பாரம்பர்ய சீன மருத்துவமுறை. பாதிப்பைப் பொறுத்து, உடலின் முக்கிய அக்கு புள்ளிகளில், அக்குபஞ்சர் குத்தூசியால் குத்தித் தூண்டப்படும். வலியின், பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த சிகிச்சை இருக்கும். 

பலன்கள்: அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் வலியைக் குணப்படுத்தலாம். தொடர் தலைவலி போன்ற எந்த வலிகளாக இருந்தாலும் ஊசி கொண்டு நரம்புகளைத் தூண்டிவிடும்போது, வலி போய்விடும். சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கும்கூட அக்குபஞ்சர் சிகிச்சை உண்டு. ஆனால், அதற்கு டயட்டும் பின்பற்ற வேண்டும்.

ரெஃப்லெக்சாலஜி (Reflexology)

நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்தின் முடிச்சுகளும் கை, கால்களில்தான் சேரும். உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள நரம்புகளின் மேல் குறிப்பிட்ட அழுத்தம் கொடுத்து அழுத்தும்போது, அந்த நரம்புகள் தூண்டிவிடப்பட்டு அதன் வேலையைச் சரியாக செய்யும். இந்த சிகிச்சையில் கை, கால்கள் தொடர்ந்து 30 நிமிடம் நன்றாக அழுத்திவிடப்படும். ஒருமுறை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின், கை கால்களில் எந்த இடத்தில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டால், வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.

பலன்கள்: கை, கால் வலி, உடல் வலி, அசதி, சோர்வு நீங்கும். உடல், மனம் புத்துணர்வு அடையும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 

மனசை ரிலாக்ஸாக்க ஈஸி டிப்ஸ் 


மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைத்திருப்பது நம் கைகளில்தான் உள்ளது.உங்களுக்கான மகிழ்ச்சியை உங்களால் மட்டுமே உருவாக்க முடியும். அது எந்த வகையில், எப்படி என்கிற விடையும் உங்களுக்குத் தெரியும். 

விளையாட்டு, பயணம், ஓவியம், இசை, தோட்டம், வாசிப்பு, குழந்தைகள், செல்லப் பிராணிகள் என, எதில் உங்கள் மகிழ்ச்சியின் சாவி மறைந்துள்ளது எனக் கண்டுபிடியுங்கள்.

செய்யும் வேலை, தங்கியிருக்கும் வீடு, உடன் வாழ்பவர்கள், எதிர்கொள்ளும் நபர்களை முதலில் புரிந்துகொண்டு, நல்ல சூழலை உருவாக்கிட முயற்சி எடுங்கள்.

நம்முடைய கருத்துக்கு எப்போதுமே எதிர்கருத்தைத் தெரிவிப்பவர்களைத் திருத்துவது, நம்முடைய வேலை இல்லை. விரும்பத்தகாத சூழலையும் நபர்களையும் விட்டு விலகுவது, பல விதங்களில் நன்மை தரும்.

மாறுபட்ட சிந்தனைகளையும், விசாலமான இதயத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் முன்பு, நம்மிடம் உள்ளதா எனச் சரிபார்த்து, திருத்திக்கொள்ளுங்கள்.

மனதை லேசாக்க வேடிக்கையான வீடியோக்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்.

நமக்குப் பிடித்தமானவர்களுடன் நேரத்தைச் செலவிடலாம்.

பிடித்தமான உணவை ரசித்து ருசிக்கையில், மகிழ்ச்சி தரும் உணர்வுகள் உருவாகும். 

மணம் கமழும் நறுமணங்கள் நிறைந்த சூழலில் இருந்தால், மனம் லேசாகும். இதற்காக நிறைய அரோமா எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாம்.

ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல், அடிக்கடி பயணம் செய்யலாம். புதிய புதிய இடங்களைப் பார்க்கும்போது, மனம் அதில் கவனத்தைச் செலுத்தும். பதற்றம் அடையும் தன்மை குறையும்.

தினசரி உடற்பயிற்சி செய்வது உடலை ஃபிட்டாக்குவதுடன் மனதுக்கும் ஓய்வைத் தரும். ஆழ்ந்த தூக்கம் வரும்.

குழுவாக இணைந்து செய்யக்கூடிய ஏரோபிக்ஸ் நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இது மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.

நண்பர்கள், குழந்தைகளுடன் நேரம் கிடைக்கும்போது எல்லாம் விளையாடலாம். உடலும் ஃபிட்டாகும். பிரச்னையை எதிர்கொள்ளும் பக்குவம் கிடைக்கும்.

தினசரி உணவில், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். எந்த உணவை உண்டாலும் நன்கு மென்று உண்ணும் பழக்கத்தால், ஹார்மோன்கள், நொதிகள், உள்ளுறுப்புகளின் வேலை சுலபமாகும்.

முடியாதவற்றுக்கு, துணிந்து 'நோ' சொல்லிப் பழக வேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்ய வேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதில் உறுதியாக இருங்கள். 

பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல், மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். 

மன அழுத்தத்தைத் தவிர்க்க, நேர மேலாண்மை முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை அந்த நேரத்தைத் தாண்டியும் செய்ய முடியவில்லை என்றால், மன அழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு வேலையை முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 

செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைப் போக்க மிகச்சிறந்த வழிகளில் ஒன்று. அன்பை அள்ளித்தந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவை செல்லப்பிராணிகள். நாய்,  பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் சில நிமிடங்கள் நேரத்தைச் செலவிடுவதும்கூட செரடோனின், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கச்செய்யும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மனப்பதற்றம் குறைகிறது. நோய் எதிர்ப்பு மண்டலச் செயல்பாடு மேம்படுகிறது. 

கிரீன் ரிலாக்ஸ்

செடிகளை வளர்ப்பது தனிமையை விரட்டி,  மன அமைதிக்கு வழிவகுக்கும். எப்படி ஒரு வளர்ப்புப் பிராணி நமக்கு ஆறுதல் தருகிறதோ, அதுபோலத்தான் செடிகளும். பூக்களை, செடிகளை இரண்டு நிமிடங்கள் உற்று நோக்குங்கள். சங்கடமான மனமும் அமைதி பெறும். 

செடிகள், வெறும் அழகியல் தொடர்பானவை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மாற்றும் தன்மை பெற்றவை.

லெமன் கிராஸ்: இது கொசுக்களை வீட்டில் அனுமதிக்காது. இதன் இலையைக் கசக்கி சுவாசித்தால், எலுமிச்சை மணம் வீசும். இந்த நறுமணம், கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டியடிக்கும். இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால், வயிறு உப்புசம் குணமாகும்.

மின்ட் துளசி: மின்ட் உள்ள மிட்டாய்களோ, சூயிங்கம்மோ சாப்பிட்டால் எப்படியிருக்குமோ, அத்தகைய சுவையை இந்த செடியின் இலைகள் தரும். சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி.

ஆல் ஸ்பைசஸ்: இந்தச் செடி வீட்டில் இருந்தால், சமையலுக்கு எந்தவித மசாலா பொருட்களும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ போன்ற அனைத்துப் பொருட்களின் நறுமணத்தையும் இந்தச் செடியின் இலைகளே தந்துவிடும்.

சிறியாநங்கை: பாம்பு, பூரான் போன்ற விஷக்கடிக்கு முதலுதவி மருந்து.

பேசில்: இந்த இலையில் கிரீன் டீ போட்டுக் குடிக்கலாம். உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

ஆலோவேரா: கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசிவந்தால், பருக்கள், வடுக்கள் மறைந்து முகம் பிரகாசிக்கும். மோருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் குடித்தால், கர்ப்பப்பை பிரச்னைகள் தீரும்.