Sunday, October 2, 2016

அதே தவறுகளை தொடர்ந்து செய்து....

நீங்கள் கேள்விப்பட்ட கதை தான் இது... ஒரு முனிவர், ஆற்றில் விழுந்த கட்டெறும்பை, கையால் எடுத்து, கரையில் விட, அது, அவரது கையை, 'நறுக்'கென்று கடித்ததாம். முனிவர், 'ஐயோ...' என கையை உதற, அக்கட்டெறும்பு ஆற்றில் விழுந்தது. அதனால், மறுபடி அதை எடுத்து கரையில் விட, திரும்பவும், அது, 'சுருக்' கென்று கடிக்க, இவரும், 'ஐயோ...'வென கையை உதற, அது மீண்டும் ஆற்றில் விழுந்தது. 

மீண்டும் எறும்பை காப்பாற்ற ஆற்றில் கையை விட்டார், முனிவர். அப்போது, சீடன், 'குருவே... எறும்பு தனக்கு உதவுகிறவர்களை கூட கடிக்கிறது; தெரிந்தும், ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள்...' என்று, கேட்டானாம்.

'கடிப்பது எறும்பின் இயல்பு; காப்பாற்றுவது, என் இயல்பு...' என்றாராம் முனிவர்.
இவ்விளக்கம், நன்றாக தான் இருக்கிறது. ஆனால், நான் சீடனாக இருந்திருந்தால், என் கேள்வி, வேறாக இருந்திருக்கும். 'ஒருமுறை கடித்த எறும்பை, இரண்டாம் முறையும் காப்பாற்ற நினைப்பது தவறல்ல; நல்ல குணம் தான். ஆனால், ஒரு ஆலிலையை எடுத்து, அதன் மூலம், எறும்பை காப்பாற்றியிருந்தால், உங்கள் நோக்கமும் நிறைவேறியிருக்கும்; நீங்களும் கடிபட்டிருக்க மாட்டீர்களே...' என்றிருப்பேன்.

மனிதர்களும் இப்படி தான்; ஒரு தவறை செய்து, கண்கூடாக பாடம் கற்ற பின், திரும்பவும், அதே தவறுகளை தொடர்ந்து செய்து, திரும்பத் திரும்ப, அதே பாடத்தை, கற்றே தீருவேன் என்கின்றனர்.

இதில், வேடிக்கை என்னவென்றால், சில நேரங்களில், முதல் பாடத்தை விட, இரண்டாவது முறை பெறும் பாடத்திற்கு இன்னும், அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. பின், தொடர்ந்து கூடுதல் விலை தான்.

வேர் சிகிச்சை என்பது, பற்களுக்காக அளிக்கப்படுவது. இப்போதெல்லாம், பூச்சியரித்த பற்களை பிடுங்கி, எறிந்து விடுவது இல்லை, பல் மருத்துவர்கள். பூச்சிப் பகுதி மற்றும் உணர்வு நரம்புகளை நீக்கி, நன்கு துளையிட்டு, அக்குழியை அடைத்து, மேலே ஒரு மூடியை பொருத்தி விடுகின்றனர்; பல் காப்பாற்றப்படுகிறது.

வேர் சிகிச்சையின் போது, கடினமான பொருள்களை கடிக்க கூடாது. கடித்தால், துளையிட்ட பகுதி, பலவீனமாக இருப்பதால், பல் உடைந்து விட வாய்ப்பு உண்டு. உறவினர் ஒருவர் இவ்விஷயத்தில், ஒரு முறையல்ல, இருமுறை, அத்தவறை செய்ய, வேர் சிகிச்சை வீணாகி விட்டது. இரு பற்கள் அநியாயமாய் பணால்! இப்போது, கடைவாய் பற்கள் இல்லாமல், அசைவம் கடிக்க முடியாமல், மிகவும் துன்பப்படுகிறார். செலவுக்கு செலவு; இதில், மருத்துவரின் கடிப்பு வேறு தனிக் கதை!

ஒரு தவறு நடந்ததுமே, உஷாராகி விட வேண்டாமா... திரும்பத் திரும்ப, அதே தவறை, குழந்தை செய்யலாம்; வளர்ந்தவர்களும், வளர விரும்புவோரும் செய்யலாமா... 'சரியில்லை...' என்று ஒன்றை, அனுபவ பாடத்திற்குப் பின், கற்று, மனம் தெளிந்து, எது சரியோ, அதற்கு நிரந்தரமாக தாவி விட வேண்டாமா...
'நான் அப்படி பேசியிருக்கவே கூடாது...' என்று, நெற்றியில் ஒருமுறை தட்டிக் கொண்டு விட்டால், அத்தோட, திருந்த வேண்டும். ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்பவன், ஒன்று, அடி முட்டாளாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், மனநோயாளியாக இருக்க வேண்டும். ஏன் இந்த உண்மையை மனிதர்கள் உணர்வதில்லை!

சோம்பேறித்தனத்துக்கு, நிறைய விலை கொடுத்தாயிற்று. திரும்பத் திரும்ப சோம்பி, இன்னும் இழக்கத் தான் வேண்டுமா... நேரந்தவறிச் சென்றமை, காலம் கடத்தியமையால் பட்ட துன்பங்கள், அடைந்த நஷ்டங்கள் போதாதா... மேலும் மேலுமா, விலை கொடுக்க வேண்டும்!

வலியை தந்த பாடங்களை தாங்கிக் கொள்ளலாம்; அடுத்து, வரப்போகிற விலைப்பாடங்களை தாங்கிக் கொள்ள, எவ்வளவு பேருக்கு சக்தி இருக்க முடியும்!
சரி, வலிப்பாடங்கள், விலைப் பாடங்களாகாதிருக்க என்ன வழி?

அன்றாடம், நாம் பெறும் அனுபவப் பாடங்களை, தனிப்பட்ட ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்து வர வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாணவனாகி, 'ரிவிஷன்' செய்ய வேண்டும்; நன்கு பலன் கிடைக்கும்.
இதன்பின், வலியாவது, விலையாவது!

லேனா தமிழ்வாணன்