Sunday, October 16, 2016

செல்போன் டிரைவிங்... நரகத்துக்கான பயணம்!


வேகமாக வாகனம் ஓட்டிய, வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்திய சில இளைஞர், இளம் பெண்களை போலீசர் அழைத்துவந்து ஒரு அறையில் தனித்தனியாக உட்கார வைத்தனர். என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. 

"கார் டிரைவ் செய்யும்போது மொபைல் உபயோகிப்பீர்களா?" 

வந்தவர்களில் அனைவருமே எல்லோரும் சிரிக்கிறார்கள்... அது உறுதியாக "ஆம்" என்பதற்கான வெளிப்பாடு. 

அடுத்த கேள்வி "ஏன்?" 

இளைஞர், இளம்பெண்கள் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லினர். அது,

"வாட்ஸ் அப்", "ஃபேஸ்புக்", "இன்ஸ்டாகிராம்"

"என்னால் ஒரு விநாடி கூட மெசேஜ் அனுப்பாமல் இருக்க முடியாது..." என பலரும் பல விஷயங்களை சொல்கிறார்கள். 

ஒரு இளம் பெண்ணிடம் வாகனம் ஓட்டும்போது, "மொபைலில் போட்டோ பார்ப்பீர்களா? அல்லது போட்டோ எடுப்பீர்களா?"

"ஹா ஹா ஹா... ஆக்சுவலி... ட்ரைவிங்கில் போட்டோ எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்."

"இப்படி செய்வதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே?"

"இல்லை எனக்கு அது பழகிவிட்டது. அதனால் ரெண்டையும் என்னால் சரிவர செய்ய முடியும்." பலரும் சொன்னது.

"இந்தப் பழக்கத்தை உங்களால் நிறுத்த முடியமா?" என்ற கேள்விக்கு, அனைவரும் ஒருமித்த குரலில் "சத்தியமாக முடியாது" என்கின்றனர். 

"சரி... உங்களுக்கு ஒரு தோழியை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் பெயர் ஜேசி..." என்றதும், ஒவ்வொருவரும் சிரித்துக் கொண்டே ஒரு ஆச்சர்யத்தோடு கதவை நோக்குகிறார்கள். அவர்களின் ஆச்சர்யம்... அதிர்ச்சியாக மாறுகிறது... ஒரு விநாடியில் அவர்களின் சந்தோஷ சிரிப்பு... மெல்லிய புன்னகையாக மாறுகிறது. அதில் கொஞ்சம் வலியும், பரிதாபத்திற்கான கரிசனையும் இருக்கின்றன.

ஜேசி குட், தன் கால்களை கொஞ்சம் இழுத்து, இழுத்து நடந்து வந்தார். ஒரு கை உடலோடு சேர்ந்திருந்தது. அதில் எந்த அசைவுமில்லை. வாய் ஒரு பக்கம் கோணியிருந்தது. "உங்களோடு சில நிமிடங்கள் பேச வேண்டும்" என்று தொடங்குகிறார் ஜேசி குட்.

பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்திவரும் ஜேசி குட், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார். 

"மே 18, 2008. அப்போது எனக்கு 21 வயது. கல்லூரி பட்டமளிப்பு விழா முடிந்து குடும்பத்தோடு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். நான்தான் காரை ஓட்டி வந்தேன். அப்போது, ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் ஓட்டுனர் போனில் பேசிக் கொண்டே வந்தார். சிக்னல் சிகப்பில் இருந்ததை கவனிக்காமல் திரும்பினார். 18 வீல்களைக் கொண்ட ஒரு ட்ரக், அடுத்து ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அதில் மோதாமல் தப்பிக்க, எங்கள் காரில் மோதினார். பெரிய மோதல்... அந்த விபத்தில் என் அப்பா, அம்மா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்..." ஜேசி  சொல்லும்போதே அனைவரின்கண்களிலும் கண்ணீர் கோக்கிறது.

"எனக்கும் மிகப்பெரிய காயம். நான்கு மாதம் மருத்துவமனையில் இருந்தேன். என்னுடைய உடல் ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்துவிட்டது.  ஒரு கையில் சாப்பிடுவது எப்படி... உடை மாற்றுவது... நடப்பது, பேசுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.  அனைத்தையும் புதிதாக கற்று கொண்டேன். அப்பா, அம்மா இல்லாமல் வாழ்வது எப்படி என்பதையும் கூட..." என்று ஜேசி தன் கதையை சொல்லி முடிக்கிறார். 

மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சுயநினைவின்றி இருந்திருக்கிறார் ஜேசி. தலை முதல் கால் வரை எலும்புகள் உடைந்து, மூளை திசுக்கள் மிகப்பெரிய தேசம் அடைந்து, உயிர் பிழைக்க 10 சதவிகிதம்தான் வாய்ப்பு என்ற நிலையில் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். முழுமையாக நினைவு திரும்பும்பியது ஜூலை 7. ஜேசியின் பிறந்த நாள் முடிந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. பிறந்த நாளுக்கு பெற்றோர் ஏன் வரவில்லை என்று குழப்பத்தில் இருந்திருக்கிறார் ஜேசி. பெற்றோருக்கு என்ன ஆனது என்று மருத்துவர்களிடம் பலமுறை கேட்டும் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. 

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறும்போது, தன்னுடனேயே இருந்திருக்கிறார் அவரது பாய் ஃபிரெண்ட் ஸ்டீவ். ஆனால், கோமாவில் இருந்து மீண்டு, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது ஜேசியால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், "என்னுடைய சகோதரன் என்றே எண்ணிவந்தேன். ஆனால், என்னுடைய சகோதரன் இவ்வளவு உயரமாகவும், கனமாகவும் இருக்கமாட்டானே என்று குழப்பம்வேறு. அந்த அளவுக்கு விபத்தின் காரணமாக மூளை குழப்பம் அடைந்திருந்தது. மழலைப் பள்ளியில் படித்ததை எல்லாம் திரும்பச் சொல்லிக்கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செயல்திறன் பழைய நிலைக்குத் திரும்ப தெரப்பி அளிக்கப்பட்டது. செப்டம்பர் 19ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். பட்டமளிப்பு விழா தினத்துக்குப் பிறகு அப்போதுதான் வெளி உலகத்தை காண்கிறேன். பிளேட், ஸ்க்ரூ போன்றவை மூலம் உடைந்த எலும்புகள் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், மூளையில் ஏற்பட்ட இழப்பு நிரந்தரமானதாக இருந்தது. இதனால், என்னுடைய இடது கை, கால் முற்றிலும் செயலிழந்துவிட்டன. 

நரகமான அந்தப் பயணத்தில் இருந்து நான் மட்டும் கடும் போராட்டத்துக்குப் பிறகு உயிர் தப்பி இன்று உங்கள் முன்னால் இருக்கிறேன்" என்று அவர் சொல்லும்போது ஒவ்வொருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிகிறது. அவர்களைத் தேற்றி, வாழ்த்துக்கள் கூறி ஜேசி அங்கிருந்து நகர்கிறார். 

"நான் இங்கிருந்து திரும்ப போகும் போது போனை உபயோகப்படுத்த மாட்டேன். நாளை... நாளை மறுநாள்... அதற்கடுத்த நாள்... இனி ஒரு போதும் வண்டி ஓட்டும் போது போனை உபயோகப்படுத்த மாட்டேன்..." - ஒருவர் சொல்ல, அனைவரும் அதைக் கண்ணீரோடு ஆமோதிக்கின்றனர்.

ஒரு விபத்திற்கு, உயிர் இழப்பிற்கு, ஒருவரின் வாழ்வு நரகமாக்கப்படுவதற்கு... நாசப்படுத்துவதற்கு, ஒரு குழந்தை அனாதையாவதற்கு என பல கேடுகளுக்கு நாமும் ஒரு காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஜேசி வாழ்க்கை விவரிக்கிறது.



ஜேசி குட்...

பாதுகாப்பான சாலை பயணம் பற்றிய விழிப்புஉணர்வு பிரசாரகராக இருக்கிறார். விபத்தில் தன்னுடைய பெற்றோரை பறிகொடுத்து, ஒரு பக்க உடல் செயல் இழப்புக்குப் பிறகு, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க கடுமையான சட்டம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இவரும் இவரது கணவரும் இணைந்து, வாகன விபத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய கல்வி மற்றும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


தவிர்க்க சில வழிகள்

வண்டி எடுக்கும் போதே, மொபைலை கைக்கு எட்டாத தூரத்தில் சைலண்ட் மோடில் வைத்து விடுங்கள்.

மேப்பில் வழி ஏதும் பார்க்க வேண்டுமென்றால் முன்கூட்டியே பார்த்து விடுங்கள். அல்லது, வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு மொபைலை உபயோகப்படுத்துங்கள். 

அதேபோல், குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார் என்பது தெரிந்தால் அவருக்கு அழைப்பதையோ, மெசேஜ் செய்வதையோ தவிர்த்துவிடுங்கள். 

எந்த அவசரமும் உங்கள் வாழ்வைவிட முக்கியமானது அல்ல என்பதை முழுமையாக உணருங்கள்.


விபத்துக்குக் காரணம் செல்போன்!

ஜெயராமன்,அவசர சிகிச்சை நிபுணர்


விபத்துக்கான முக்கிய காரணமாக ஓட்டுநரின் கவனச் சிதறல் இருக்கிறது. கவனச் சிதறலின் முக்கிய காரணியாக மொபைல் போன்கள் இருக்கின்றன. 'உலகின் உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணியாக, ஒன்பதாவது இடத்தில் இருப்பது சாலை விபத்துக்கள். இதேநிலை தொடர்ந்தால், 2030க்குள் ஐந்தாவது இடத்துக்கு வந்துவிடும்' என்று உலக நாடுகளை உஷார்படுத்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். 

பொதுவாக, ஓட்டுநரின் கவனச் சிதறல்கள் மூன்று வகைப்படும். பார்வை (Visual) - ரோட்டில் இருந்து பார்வையை எடுப்பது, கைகளால் ஏற்படுவது (Manual) - ஸ்டீயரிங்கில் இருந்து கைகளை எடுப்பது. மூன்றாவது, அறிவாற்றல் (Cognitive) - சாலையிலிருந்து உங்கள் உணர்வினை அகற்றல். நாம் மொபைல் போனை இயக்கும் போது இந்த மூன்று விஷயங்களுமே ஒரே சமயத்தில் நடக்கிறது. அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாகவே இருக்கும். 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது, மொபைலை உபயோகப்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 5 விநாடியில், ஒரு கால்பந்து மைதான அளவுக்கான தூரத்தை கவனிக்கத் தவறுகிறோம்.

உலகை மறந்து மொபைலில் எந்த நேரமும் கிடப்பது ஒரு மனநோய். இது "டிபென்டென்ஸி டிஸ்ஆர்டர்" (Dependency disorder). காரணமேயில்லாமல் ஒரு விஷயத்தை அவ்வப்போது பார்ப்பது ஒரு மனசுழற்சி நிலை (Obsessive-Compulsive Disorder (OCD)).

முக்கியமான போன் கால், மெசேஜ், அவசரமானத் தேவை என நீங்கள் எந்தக் காரணத்தை சொன்னாலும்... அது அர்த்தமற்றதாகவே இருக்கும். காரணம்... வாழ்வுதான் நிறைய காரணங்களைக் கேட்கிறது. சாவு எந்தக் காரணங்களையும் கேட்பதில்லை...!!!