Tuesday, March 22, 2016

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு




நன்மை தரும் மவுனம்

* தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.
* மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை, சச்சரவு இராது. இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.
* நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு. நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை "மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்' என்று சொல்வார்கள்.
* ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.
* வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு.

நல்லதைச் செய்யுங்கள்

* நாம் செய்த பாவத்தை போக்க ஒரே வழி, நற்செயல்களைச் செய்வது மட்டும் தான்.
* நல்ல விஷயமாக இருந்தாலும் கடுமையாக சொல்வது கூடாது. பிறர் ஏற்கும் விதத்தில் அன்புடன் வேண்டும்.
* இயற்கையும் மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறி விடும்.
* ஆசைகளை வளர்த்தால், துன்பம் வளரும். ஆசை குறையத் தொடங்கினால், துன்பமும் குறையும்.
* நம்முடைய கஷ்டங்களைப் பிறரிடம் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. மனம் விட்டுப் பேசும்போது மனச்சுமை குறைகிறது.

எல்லாம் நமக்காக

* தர்மம் செய்ய எண்ணம் வந்து விட்டால், நினைத்தவுடன் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால், மனம் மாறி விடும்.
* பணத்தை தேடுவது மட்டுமே வாழ்க்கைஅல்ல. தினமும் கொஞ்சம் நேரமாவது கடவுளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும்.
* நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. இதில், ஒரு கையால் கடவுளின் திருவடியையும், மற்றொரு கையால் உலக விஷயத்தையும் பிடியுங்கள்.
* கடவுள் மீது பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை. எல்லாம் நமக்காகத் தான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள்.

இனிமையாகப் பேச வேண்டும்


* உடம்பிலும், உடுத்தும் ஆடையிலும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. இவை இரண்டையும் விட மேலான மனதை தூய்மையாக வைத்திருப்பது தான் முக்கியம்.
* தினமும் மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றினாலும் நல்ல செயல்களை மட்டும் செய்யுங்கள். பணத்தைத் தர்மகாரியங்களுக்காக நல்வழியில் செலவழியுங்கள்.
* விரும்பிய பொருள் கிடைக்காமல் போனால், அதை அடைய குறுக்குவழியை மனிதன் நாடுகிறான். அதன் மூலம் பெரும் பாவத்தை சம்பாதிக்கிறான்.
* உலகில் பலரும் புண்ணியம் மட்டுமே தேட விரும்புகிறார்கள். ஆனால், செய்வதில் பெரும்பகுதி பாவமாகவே இருக்கிறது. இதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.
* வாக்கினால் துன்பம் இழைக்காதீர்கள்.மற்றவர் மனம் நோகப் கடும்சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது. இனிய பேச்சே உங்களை உயர்த்தும்.

எளிமையாக வாழ்வோம்

* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், நாம் ஈடுபடும் எந்த துறையிலும் நேர்த்தியும், ஒழுங்கும் வெளிப்படத் தொடங்கும்.
* பாவம் நீங்க ஒரே வழி கடவுளைத் தியானிப்பது மட்டுமே. இதனால், மனம் தூய்மை பெறுகிறது. தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல்பணியாக இருக்க வேண்டும்.
* நாலாதிசையிலும் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முதலில் கட்டுப்படுத்தி பக்தியில் ஈடுபடுத்துங்கள்.
* மற்றவர்களின் ஆசைகளைத் தூண்டும் விதத்தில் ஆடம்பரமாக வாழ்வது கூடாது. எல்லோருமே எளிய வாழ்க்கை வாழத் தொடங்கினால், சமுதாயத்தில் அமைதி உண்டாகும்.
* பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டியது நம் கடமை. பணம் தான் என்றில்லாமல், உழைப்பாலோ, வாக்காலோ முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு

* உனக்கு ஒரு காயம் பட்டாலோ, நோய் வந்தாலோ அதை கடவுளே அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அவற்றால் ஏற்படும் வலியை சமாளிப்பதை ஒரு தவம் போல கருத வேண்டும். பழகப்பழக இந்த மனோபாவம் உறுதியாகி விடும். நோய்நொடியை தாங்குகிற சக்தி உண்டாகும்.
* நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் வறுமையினால் சிரமப்பட்டாலும் அவை எல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் அனுப்பப்பட்டவை என நினைத்துக்கொள்.
* சாந்தமாக வாழ சாத்வீக உணவை உண்ண வேண்டும்.
* அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறை வாயுவுக்கு விட்டுவிட வேண்டும். பசி தீர்க்கத்தான் ஆகாரமே தவிர, ருசிக்காக அல்ல...