Thursday, September 15, 2016

மறதி இது வியாதி இல்லை!

ங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கிறதா என யோசியுங்கள்.

'ஆபீஸுக்கு இன்னைக்கு என்ன டிரெஸ் போடலாம்?' என யோசித்துக்கொண்டே செல்போனை கொண்டுபோய் சமையல் அறையில் மறந்து வைத்திருப்போம். 

எதையோ எடுக்க ஒரு ரூமுக்குப் போய், `இப்ப எதுக்கு இங்க வந்தோம்?' என யோசித்துக் கொண்டிருப்போம். 

தலையிலேயே சீப்பை வைத்துவிட்டு, சீப்பு எங்கே எனத் தேடிக்கொண்டு இருப்போம். 

எத்தனை விசில் வந்தது என குக்கர் விசில் கணக்கு மறந்து, குழம்புவோம். 

அடுத்தவர் சொல்வதை 'உம்' கொட்டியபடி கேட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியாது. `ஸாரி... என்ன சொன்னீங்க?' எனக் கேட்டு அசடுவழிவோம். 

`வீட்டுக் கதவை நன்றாகப் பூட்டினோமா?' என, வரும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வருவோம்.

இவை வழக்கமாக நடக்கும் விஷயங்கள். இதுபோன்ற மறதி, கவனக் குறைவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது? இது ஏதும் பிரச்னையா? இதைத் தடுப்பது எப்படி?

பொதுவாக, மறதி என்பது நல்ல விஷயம். எதையுமே மறக்கவில்லை என்றால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இவற்றில் மூளை தனக்குத் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது. 

மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தை மறக்கிறோம் என்றால், அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தம். ஒரு தகவல் நம் மனதில் பதிவாகும்போது, வேறு ஏதாவது கவனச்சிதறல் இருந்தால், அது நம் மூளையில் பதிவது இல்லை. மனஅழுத்தம், மனச்சோர்வு, சூழல் நெருக்கடி, தூக்கமின்மை, மது, சிகரெட் பழக்கம் என கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் காரணமாக மறதி ஏற்படுகிறது.

நினைவுத் திறன் (மெமரி) 


நினைவுத் திறன் என்பது ரிமோட், ரீசன்ட், இம்மீடியட் என மூன்று வகைப்படும். இதில், ரிமோட் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை நினைவுகூர்வது. 

ரீசன்ட் - நேற்று அல்லது கடந்த வாரம் நடந்ததை நினைவில் கொள்வது. 

இம்மீடியட் - கடந்த நிமிடம் நடந்தது, இப்போது செய்யப்போவது போன்றவற்றை உடனுக்குடன் நினைவில்கொள்வது. 

இதில் 'இம்மீடியட் மெமரி' என்பது, செய்யும் செயலில் முழுக் கவனமும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே நம் மனதில் பதியும். கவனச்சிதறல் இருக்கும்போது, பதிவாகாது.

ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்...

எந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள். 

செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதிவைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும்.

நினைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக  மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும்.

எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

பழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள், தேதி போன்றவற்றையும் நினைவுகூர முயற்சி செய்யலாம்.

கணக்கு தொடர்பான புதிர்கள், விளையாட்டுகளைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஷாப்பிங்குக்காக வெளியே செல்லும்போது, லிஸ்ட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, நீங்களாக ஞாபகப்படுத்தி பொருட்களை வாங்குங்கள். இறுதியாக செக் செய்யுங்கள்.

குறைந்தது ஐந்து பேரின் எண்களாவது நினைவில் இருக்கட்டும். இது, உங்களுக்கு ஞாபகசக்தியைக் கொடுப்பதோடு, அவசரத்தில் கை கொடுக்கும்.

கவனச்சிதறலைக் கட்டுப்படுத்த, ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்.

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தும்.

ஸ்போர்ட்ஸ், நடைப்பயிற்சி, வீட்டு வேலை என உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.