Saturday, June 20, 2015

உடல் எடை குறைக்க சூப்பர் டிரிக்ஸ்!

உடல் எடை குறைக்க சூப்பர் டிரிக்ஸ்!

 
"நீங்க எப்படி ஸ்லிம்மா உடலை மெயின்டெய்ன் பண்றீங்க... நான் கொஞ்சம்தான் சாப்பிடறேன். ஆனாலும், என்னோட எடை மட்டும் குறையவே மாட்டேங்குது." இந்த டயலாக்கைப் பலர் சொல்லி, அடிக்கடி கேட்டிருப்போம். பிடித்த உடையைப் போட முடியாது. ஸ்வீட்ஸ் சாப்பிட முடியாது. கீழே விழுந்த பொருளைக் குனிந்து எடுக்க முடியாது. அந்த அளவுக்கு நம் அன்றாட வேலைகளைச் செய்ய தடங்கலாக இருக்கிறது உடல் பருமன். உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். அதற்கு, நம்முடைய லைஃப்ஸ்டைலைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டாலே போதும்.

காலை உணவு முக்கியம்

காலை உணவைத் தவிர்த்தால், மதியம் அதிக அளவில் சாப்பிட நேரிடும். பசி அடங்கிய பிறகும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். காலையில் சாப்பிடவில்லை என்ற எண்ணம், பசி அடங்கியதை உணர்த்தாது. இப்படிச் சாப்பிடும் பழக்கம் தவறானது. ஒரு வேளை உணவைத் தவிர்த்து, இன்னொரு வேளையில் சேர்த்துச் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஒரே நேரத்தில் வயிற்றுக்கு அதிக வேலை கொடுத்து, அதன் ஆற்றலைக் கெடுப்பது சரியல்ல. காலையில் சாப்பிடாமலே இருந்து, தாமதமாகச் சாப்பிட்டால் உடலில் அல்சர் உருவாகும். இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாக, குறைந்தது மூன்று மணி நேரமாகும். பிறகு, அனைத்து உறுப்புகளும் ஒய்வு நிலையில் இருந்து, மீண்டும் செயல்பட அதற்கு சக்தி தேவை. உணவு மூலம்தான் சக்தி கிடைக்கும். இந்த சக்திதான் உடல் உறுப்புகள் செயல்பட உதவுகின்றன. ஒருநாளைக்குத் தேவையான 'கிக் ஸ்டார்ட்' சக்தி காலை உணவில்தான் கிடைக்கும்.

சாப்பிடும் முன்

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கப் பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சாப்பாட்டின் அளவு வெகுவாகக் குறையும். இது ஒரு ஆரோக்கியமான பழக்கமும்கூட. இப்படி சாப்பிடுவதுதான் சரியான முறை. அதுபோல, காலையும் மதியமும் நிறைவான உணவைச் சாப்பிடலாம். இரவு, மிதமான உணவாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

தேவையான நீர் அருந்துதல்

பசி வரும்போதும், வருவதற்கு முன்பும் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், தண்ணீர் அருந்தி அமிலத்தை நீர்க்கச் செய்யலாம். சாப்பிடப்போகும் அரை மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கிளாஸ் இளஞ்சூடான நீர் அருந்துவதால், வயிறு நிறைந்த உணர்வு வரும். ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் நீர் அருந்துவது நல்லது.

கீழே உட்கார்ந்து சாப்பிடவும்

குனிந்து, நிமிர்ந்து சாப்பிடுகையில் உடல் அசைவுகளின் மூலமாக உணவு செரிக்க எளிதாக இருக்கும். மேலும், டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதைவிட, தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போது, உணவின் அளவு குறைவதை உணரலாம். வயிற்றுக்கும் மூளைக்கும் தகவலை அனுப்பும் நரம்பு (Vagus), வயிறு நிறைந்தது என்ற உணர்வை நரம்புகளின் மூலம் சமிக்ஞையாக மூளைக்கு அனுப்பும். இதனால், நாம் திருப்தியடைந்த உணர்வு வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்த உதவும்.

தன் கையே தனக்கு உதவி

மற்றவர் பரிமாறி சாப்பிடுவதைவிட, தானாகவே சாப்பாட்டை எடுத்துப் பரிமாறிக்கொள்வது நல்லது. தேவையானதைப் போட்டுச் சாப்பிட முடியும். கையில் சாப்பிடுவதே சரி. தவிர்க்க முடியாத தருணத்தில் மட்டும் ஸ்பூனில் சாப்பிடலாம். 90 சதவிகிதம் வீட்டு உணவுகளையே சாப்பிடவேண்டும். உணவகங்களில் சுவையூட்டி கலந்திருப்பதால், அதிக அளவில் சாப்பிடத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும்.

மெதுவாகச் சாப்பிடுதல்

உணவை, மெதுவாகச் சாப்பிட்டால், குறைந்த அளவே சாப்பிடுவோம். வேகமாகச் சாப்பிட்டால் அதிகம் சாப்பிடுவோம். இதுவே, நம் உடலின் ஃபார்முலா. திட உணவுகள் எதுவாக இருந்தாலும், வாயில் நன்றாக மென்று விழுங்குவதே சரி. இதனால், உமிழ்நீர் கலந்து, 25 சதவிகிதம் உணவு, வாயிலேயே செரிக்கத் தொடங்கும். வயிற்றின் செரிமான வேலையும் குறையும். கொழுப்பும் சேராது. பித்தத்தின் அளவு சமனாகும். உடல் எடையும் அதிகரிக்காது.

குறைந்த கலோரி - நிறைந்த உணவு

கலோரிகள் இல்லாத, நிறைவான உணவைச் சாப்பிடலாம். வாழைத்தண்டு, புடலங்காய், பீர்கங்காய், பீன்ஸ், அவரைக்காய், பூசணி, கோவைக்காய், கீரைகள், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் எப்போதும் கலோரிகள் குறைவாகவே இருக்கும். இதை அதிக அளவில் சாப்பிட்டாலும்கூட உடல் எடை அதிகரிக்காது. அதிக நார்ச்சத்தும்கூட கொழுப்பைக் கரைக்க உதவும்.

கடைசியில்தான் அரிசி சோறு

முதலில் சாலட், அடுத்து கீரை, அதற்குப் பிறகே அரிசி சோறும் குழம்பும் சாப்பிடலாம். வெறும் குழம்புக்கு மட்டும் சாதத்தைச் சாப்பிடாமல், சிறிதளவு ரசம், மோர் எனப் பிரித்துச் சாப்பிட வெரைட்டியாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். சமச்சீரான உணவையும் சாப்பிட முடியும். எப்போதுமே, கிரேவியை முதலில் சாப்பிடக் கூடாது. கிரேவியின் ருசியால் நாம் அதிக அளவு உணவைச் சாப்பிடும்படி தூண்டுதல் ஏற்படும்.

நொறுக்குத்தீனி மோகம்

வீட்டில் இருக்கும்போது, எதையாவது எடுத்துச் சாப்பிட நாக்கு தூண்டும். அப்போது, வெள்ளரி விதைகள், உலர் பழங்கள், கொட்டைகள் சாப்பிடலாம். சிப்ஸ், பிஸ்கட், கேக் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒருவேளை ஆசைக்காக சாக்லெட், பிஸ்கட் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும், அதற்குப் பின் வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டும். இதனால், மீண்டும் மீண்டும் பிஸ்கட், சாக்லெட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு குறைந்துவிடும். ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தால், அதற்குப் பதிலாகப் பழங்களால் ஆன ஸ்மூத்தியை ஃப்ரீசரில் வைத்து, 'ஐஸ்கிரீம்' போல சாப்பிடலாம்.

நீல நிறம் பார்த்தல்

பொதுவாக ஹோட்டல், டைனிங் ஹாலில் நீல நிறத்தை பெயின்ட் அடிக்க மாட்டார்கள். ஏனெனில், நீல நிறம் பசியைக் குறைக்கும். கலர் தெரப்பியில், நீல நிறத்தைப் பசியைக் குறைப்பது (Appetite suppressant) என்று சொல்வர்கள். அதனால், குறைவாகச் சாப்பிட நினைப்பவர்கள் நீல நிற மேசை விரிப்பில் வைத்தும், நீல நிறக் கைக்குட்டையை அருகில் வைத்தும் சாப்பிடலாம். ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பசியை அதிகப்படுத்தும் என்பதால், உண்ணும் நேரங்களில் இந்த நிறங்களைப் பார்பதைத் தவிர்க்கலாம்.

கண்ணால் சுவைத்தல்

நமக்குப் பிடித்த உணவை, சாப்பிட்டு ருசி பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, பிறகு உணவைச் சாப்பிட்டால், சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும். திருப்தி முன்னரே வந்துவிட்டதால் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. அதுபோல், வெள்ளைத் தட்டில் சாப்பிட்டால், உணவு அதிகமாக இருப்பது போல கண்களுக்குத் தோன்றும். மேலும், வெள்ளைத் தட்டு சின்னதாக இருந்து, தட்டு முழுவதும் உணவைப் பரப்பி சாப்பிடுவதாலும், நிறைய சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். உணவைச் சாப்பிடத் தொடங்கும்போது, முதலில் முகர்ந்து, பின் ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும்.

பழைய தோற்றத்தை நினைவுபடுத்துதல்

நாம் ஸ்லிம்மாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை மொபைல் ஸ்கீரீன் சேவர், வால் பேப்பர், டெஸ்க் டாப் வால் பேப்பர், வாலட் போன்ற அடிக்கடி நாம் பார்க்கும் இடங்களில் வைக்கலாம். இதனால், மீண்டும் ஸ்லிம்மாக மாறவேண்டும் என்ற உந்துதல் நமக்கு ஏற்படும். பீரோவில்கூட நம்முடைய அளவில் ஒரு சைஸ் சிறிய அளவிலான ஒரு டிரஸ்ஸை வாங்கிவைத்து அது நமக்குச் சரியாகப் பொருந்துகிற அளவுக்கு நம் எடை குறைய வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் உருவாக்கிக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம். தனியாகப் பயிற்சி செய்ய மனம் இல்லை எனில், வீட்டில் இருப்பவர்கள், அருகில் வசிப்பவர்களுடன் சேர்ந்து பயிற்சிகள் செய்யலாம். இதனால், உடற்பயிற்சி செய்ய ஆர்வம் அதிகரிக்கும். உடலும் ஆரோக்கியம் பெறும். ஒருநாளைக்கு மூன்று முறை சாப்பிடுதல், இரண்டு முறை குளித்தல் போன்ற கட்டளைகளோடு ஒருவேளை உடற்பயிற்சி என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
 
 
எஸ்.டி.வெங்கடேஷ்வரன்
யோகா மற்றும் இயற்கை மருத்துவர்