Sunday, June 14, 2015

காதலுக்கு இருக்கும் ஆயுள், காதலர்களுக்கு இருப்பதில்லை

'பிரேக் அப்' உணர்விலிருந்து மீளும் வழிகள்!

ங்க காலம் முதல் இன்றைய ஆன்ட்ராய்டு காலம் வரை காதல் என்பது மனிதர்களிடம் பூக்கும் ஒருவித உன்னத உணர்வு. காதலுக்கு இருக்கும் இந்த ஆயுள், காதலர்களுக்கு இருப்பதில்லை. ஏதோ காரணங்களால் ஈருடல் ஓருயிர் என வாழ்ந்தவர்கள் மீண்டும் ஈருடல் ஈருயிராக வாழநேரிடுகிறது. அது வாழ்வின் மிக கடினமான காலகட்டம்.

இத்தகைய 'பிரேக் அப்' உணர்விலிருந்து வெளிவருவது எப்படி என வழி சொல்கிறார் உளவியல் நிபுணர் ஆனந்த் கிருஷ்ணா.

என்னை நானே நேசித்தேனே!


தன்னை வெறுத்து விட்டு மற்றவரை காதலிக்க முடியாது. அவ்வாறு ஒர் உறவு தொடர்ந்தாலும் அது சாத்தியமில்லை. நம்மை விரும்பாமல் மற்றவரை காதலிக்கவோ, சந்தோஷப்படுத்தவோ நம்மால் முடியாது. ஓர் உறவை தொடங்க வேண்டுமெனில் முதலில் தன்னை நேசிக்கத் தொடங்கவேண்டும். "எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. உனக்கு ஏதும் நடக்கக் கூடாது" என்பது பொய்யான கூற்று. தன்னை வெறுத்து மற்றோரை மகிழ்விக்க சாத்தியமே இல்லை.

வெறுமையைப் போக்கும் ஒர் உறவு

உறவு என்பது வெறுமையைப் பூர்த்திச் செய்யும் சாதனமாகிவிட்டது. தொடக்கத்தில் மகிழ்ச்சியைத் தரும் உறவு, பிறகு வேதனையைத் தருகிறது. தன் துணையை மனமானது இறுக்கப் பிடித்துக் கொள்கிறது. இதுவே காதல் என நினைத்து அந்த உறவில் சிக்கி தவிக்கிறது. இது காதலே இல்லை, வெறுமையைப் போக்கும் ஓர் உறவு என உணரலாம்.

தனிமை பயம் வேண்டாம்


ஒரு வேலையை விட்டால், அடுத்த வேலையைத் தேடி செல்வது போல, சமூகத்துக்காகப் பயந்து 'ப்ரேக் அப்' ஆன உடனே இன்னொரு ஆண் / பெண் / ப்ரெண்ட் தேடி செல்வது மீண்டும் ஒர் ஏமாற்றத்தை கொடுக்கலாம். துணை இல்லாத தருணத்தில் கிடைக்கிற தனிமையைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. தனிமையே உங்களது வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்லும். உங்கள் மனதில் அமைதியும், தெளிவும் பிறந்துவிட்ட பிறகு துணையைத் தேடலாம்.

நமக்கு நாமே நண்பேன்டா!


நண்பர்கள் வைத்துக் கொள்வது நல்லதுதான். ஆனால், அந்த நட்பு ஆத்மார்த்தமானதாக இருக்கவேண்டும். அப்படி இருப்பது அரிதாகிவிட்ட நிலையில், நமக்கு முதல் நண்பரே நாமாகதான் இருக்க வேண்டும். முதலில், உங்களை மதித்து உங்களுக்கான சுய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான முயற்சிகளை எடுங்கள்.

அதீத அன்பும், வெறுப்பும் ஆபத்தே

மரியாதை, மதிப்பு, பிரியம் இந்த வரிசையில் தம்பதியரின் வாழ்வு இருக்கவேண்டும். பிரியத்துக்கு முதல் இடத்தைக் கொடுத்து விட்டு மற்றவை கிடைக்கவில்லையே என உறவில் விரிசல் வந்தபிறகு கவலைப்படுவதில் அர்த்தமில்லை. உறவுகளில் காதல் முதல் வெறுப்பு வரை எதுவுமே அளவோடு இருக்கவேண்டும். அதீத அன்பு, அதீத வெறுப்பு இரண்டுமே உறவுக்குப் பகைதான்.

பிரிவில் வருத்தம் மட்டுமே நியாயம்


காதல் மற்றும் திருமணப் பந்தத்தில் 'தியாகம்' என்ற வார்த்தைக்கு மட்டுமே இடமளிக்கக் கூடாது. தன் துணை தன்னை விட்டு விலகினால் அது கஷ்டமான நிலை, வருத்தப்படுவது சரியான உணர்வுதான். ஆனால், அதுவே காயம் ஏற்படுத்தும் சூழலாக மாறிவிடக் கூடாது. 'I feel sad, but I won't feel bad'. பிரிந்து சென்றால் வருத்தப்படலாமே தவிர, தன்னை வருத்திக் கொண்டு தற்கொலையோ, பழிவாங்கும் நோக்கத்துடன் கொலையோ செய்வது தவறு. வார்த்தை / ஆயுதம் இரண்டுமே காயப்படுத்தக் கூடியது. அதனால், காயப்படுத்தும் சூழலை தவிர்ப்பதே நல்லது.

உறவு ஒரு தனிநபருடன் முடிவதல்ல

சாதாரண உணர்வை கூடத் தெய்வீக காதலாகக் கற்பனை செய்து கொண்டு வருந்துவது சரியல்ல. காதல் முடிந்து விட் டால், வாழ்க்கை இருண்டுவிடாது. காதலரை விடக் காதல் உணர்வு முக்கியம். உங்களின் உணர்வுக்கு மரியாதை கொடுங்கள்.

உங்கள் உறவு ஒரு தனிநபருடன் இல்லை. அது வாழ்க்கை முழுவதும் பயணிக்க வேண்டியது, பல மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்குப் பொருந்த கூடிய நபருக்காகக் காத்திருக்கலாம்.

புதிய மாற்றங்களை வரவேற்போம்

வாழ்க்கை வாழ்ந்து பார்ப்பதற்கான ஒர் உறவு முறையே தவிர, இதுவே முழு வாழ்க்கையல்ல. திருமண வாழ்வை வாழ்வது ஒரு முயற்சி, அந்த வாழ்வு பிடிக்காவிட்டால், அதிலிருந்து வெளிவரலாம். மரபு பார்த்துதான் வாழ வேண்டும் என்ற கட்டாயங்களைத் தளர்த்தலாம். மரபு வழியில் எது பொருந்துகிறதோ அவற்றைப் பின்பற்றலாம். எது பொருந்தவில்லையோ அதை வலுக்கட்டாயமாகத் திணிக்க வேண்டிய அவசியமில்லை.

புதிய சில மாற்றங்களை ஏற்றுப் புதிதாக வாழ்ந்து பார்ப்பதில் தவறில்லை