Monday, June 1, 2015

மாண்புமிகு மணித்துளிகள் - சுவாமி ஓங்காராநந்தர்

எதிர்பாராதவிதமாக கார் ஒன்று நடுவழியில் நின்றுபோனது. காரை ஓட்டி வந்தவர் ஏதேதோ செய்து பார்த்தும் பயனில்லை. அவ்வழியே மெக்கானிக் ஒருவர் வந்தார். ஒரே நிமிடத்தில் சரிசெய்து, காரை இயங்கச் செய்தார். ''நல்லவேளையாக நீங்கள் வந்து உதவினீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?' என்று உரிமையாளர் கேட்க, ''நூறு ரூபாய்' என்றார் மெக்கானிக். 

''என் காரில் நீங்கள் பழுதுபார்த்தது ஒரே ஒரு நிமிட நேரம்தான். அதற்கு நூறு ரூபாயா?!' என்று கார் உரிமையாளர் கேட்க, ''பணம் நேரத்துக்கு அல்ல; அந்த ஒரு நிமிடத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துசெய்ததற்காக' என்று பதில் சொன்னார் மெக்கானிக்.

உண்மைதான். நம்மில் பலருக்கு மிக நன்றாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. வழிமுறையில் சிக்கல் இருக்கிறது.

ஆயிரமாவது முயற்சியில் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் கூறுகிறார்... ''999 முறை எவ்வாறெல்லாம் தவறாக இச் செயலைச் செய்யக் கூடாது என்பதை அறிந்தேன். ஆயிரமாவது முறை சரியான வழிமுறையைக் கண்டறிந்தேன்!''

வினைசெயல்வகை  ஒரு செயலைச் செயல்படுத்தும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றி, திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக் கிறார்.

சிலர் சில திட்டங்களை ஆறப்போட்டு, சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு தங்கள் வாழ்நாளின் இறுதிவரை சிந்தித்துக்கொண்டே ஒரு நாள் இறந்தும்விடுவார்கள். ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான்; ஆனால், ஆராய்ச்சியின் முடிவில் துணிந்து செயலில் இறங்கவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருக்குறள்: 671)

நன்கு ஆராய்ந்த பிறகு, ஒரு கட்டத் தில் செயலில் இறங்கியாக வேண்டும். இல்லையெனில், வாழ்க்கையின் ஓட்டத்தில் பின்தங்கி விடுவோம்.

ஒரு செயலில் இறங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், நம்முடைய செயல்களைப் பிரித்து, வகுத்து, எது முக்கியம், எது உடனே செய்து முடிக்க வேண்டியது, எதைப் பிறகு செய்து கொள்ளலாம் என்று பகுத்தறிந்து செயலாற்றுதல் மிக முக்கியம்.

ஒவ்வொரு நாளும் செயல் திட்டம் ஒன்று இருக்க வேண்டும். அதிகாலை முதல் இரவு படுக்கப் போகும்வரை ஒவ்வொரு மணி நேரமும் என்ன செய்யப் போகிறோம் என்கிற தெளிவு இருக்க வேண்டும். இல்லையென்றால், இன்றைய தலைமுறை அரிய பொழுதுகளை சமூக வலைதளங்களில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது.

எந்தச் செயலை எப்போது செய்ய வேண்டும் என்று விவரிக்கும் மிக அழகான குறள் ஒன்றை எழுதியுள்ளார் திருவள்ளுவர். நிர்வாகவியலின் சிகரத்தை எடுத்துரைக்கும் குறள் அது.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை. (திருக்குறள்: 672)

காலந்தாழ்த்திச் செய்யத்தக்கவற்றைக் காலந் தாழ்த்தியே செய்ய வேண்டும்; காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்யக் காலம் தாழ்த்தக் கூடாது.

மேலும்,

ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவு பொருள் தேவைப்படும்?

ஒரு செயலைச் செய்வதற்கு என்னென்ன கருவிகள் வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட செயலை எந்தக் காலத்தில் செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட செயலின் தன்மை எத்தகையது?

அச்செயலுக்கு உரிய இடம் எது?

இவற்றையெல்லாம் நன்கு தெளிவாக ஆராய்ந்து, முடிவு செய்து, செயலில் இறங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல். (திருக்குறள்: 675)

இத்தகைய சுய ஆராய்ச்சி மட்டும் போதாது. ஒரு குறிப்பிட்ட தொழிலில் இறங்குவதற்கு முன்னர், அதில் அனுபவம் மிக்கவர்களின், அந்தத் தொழிலின் நன்மை தீமைகளை, லாப நஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்தவர்களின் கருத்தையும் மனதில் கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

நீச்சல் தெரியாதவன் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல் இல்லாமல், நன்கு நீந்தத் தெரிந்த ஒருவரின் உதவியுடன் நீரில் இறங்குவதே சாலச் சிறந்தது.

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல். (திருக்குறள்: 677)

செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தை ஏற்றுக்கொள்வதாகும் என்கிறார் திருவள்ளுவர்.