Saturday, November 9, 2013

கேம்பஸ் இன்டர்வியூ...வெறும் கண்துடைப்பா?

இன்ஜினீயரிங் கல்லூரிகளில் ஓரளவு நன்றாகப் படிக்கும் மாணவர்கள் அனைவருமே கடைசி ஆண்டில் தங்கள் கல்லூரிகளில் நடக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தங்களுக்கு நல்லதொரு வேலை கிடைத்துவிடும் என்றுதான் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது நடக்கும் பல கேம்பஸ் இன்டர்வியூக்கள் வெறும் கண்துடைப்புதான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அட, அப்படியா! என்கிற ஆச்சர்யத்தோடு களத்தில் இறங்கி விசாரிக்க விசாரிக்க நமக்கு கிடைத்த செய்திகளைக் கேட்டு நாம் ஷாக்காகிப் போனோம்.

கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் ஒரு இன்ஜினீயரிங் கல்லூரியைத் தேர்வு செய்கின்றன என்பது குறித்து நம்மிடம் ஆவேசமாகச் சொன்னார்  டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர் நிறுவனத்தின் தலைவர் டி.நெடுஞ்செழியன்.  

மீன்களைக் கவரும் தூண்டில்!

'ஒரு கல்லூரியை கேம்பஸுக்காக தேர்ந்தெடுக்கும்போது, கல்லூரியின் கல்வித் தரத்தை மட்டுமே கவனிக்காமல், அந்தக் கல்லூரி மூலம் என்ன நன்மை கிடைக்கும் என்றுதான் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டன சில கம்பெனிகள். கேம்பஸ் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மந்திரச்சாவியாக இருந்ததுபோய், தற்போது மீன்களைக் கவரும் தூண்டில் முள்ளாக மாறிவிட்டது.

தனியார் கல்லூரிகள், எங்கள் கல்லூரிக்கு எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் கேம்பஸுக்கு வந்திருக்கின்றன என சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றன.

சில கல்லூரிகள், எங்கள் கல்லூரிக்கு கேம்பஸ் முகாம் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யுங்கள். அவர்களுக்கு நியமன உத்தரவு மட்டும் தந்தால் போதும் என்கின்றன. இதைத் தாண்டியும் சில கல்லூரிகள் செய்யும் வேலை அதிர்ச்சி தருகிறது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கு  வேலை என்று ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. இந்த ஒரு வருடத்துக்கான சம்பளப் பணத்தை கல்லூரிகளே தருகின்றன என்பதுதான், அந்த ஆச்சர்யமான தகவல் (பார்க்க பெட்டிச் செய்தி).

மாமியார் வீட்டு கவனிப்பு!

மேலும், கேம்பஸ் இன்டர்வியூக்கு வரும் நிறுவனங்களை மாமியார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைபோல் கவனிக்கின்றன கல்லூரிகள். பெரியபெரிய கல்லூரிகள் தங்களது கல்லூரி மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்ய நிறுவனத்தில் குறிப்பிட்டவர்களுக்கு, விலை மதிப்புள்ள கார்களை பரிசாக தருவதாக சொல்கிறார்கள்.

மேலும், சில நிறுவனங்கள் போலி நியமன கடிதங்களைத் தந்துவிடுகின்றன. ஆனால், அந்த மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கிடைத்த வேலை வாய்ப்பு கிடைத்ததா, இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகம் அதைத் தட்டிக்கேட்க முடியாது. காரணம், அவர்களே கெஞ்சிக்கூத்தாடிதான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவனங்களை அழைத்து வந்திருக்கிறார்கள். ஒருவேளை அப்படிக் கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவுக்கு அந்த நிறுவனங்கள் வராமல் போய்விடுமோ என்கிற பயமும்தான் இதற்கு காரணம். ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரியில் இருந்து 500 பேர் தேர்வாகியுள்ளனர், 1,000 பேர் தேர்வாகியுள்ளனர்' என்று விளம்பரம் செய்து கொள்கின்றன.

இனியாவது, கேம்பஸ் என்கிற ஒரே விஷயத்துக்காக கல்லூரிகளைத் தேர்வு செய்வதைவிட, நல்ல கல்வித்தரம், நல்ல கட்டமைப்பு வசதிகொண்ட நிறுவனங்களை மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தேர்வு செய்யவேண்டும்!'' என்றார் அவர்.  

கேம்பஸே வரவில்லை!

கல்லூரிகள், வேலை வாங்கித் தருவோம் என்று பொய்யான தகவல்களைச் சொல்லி மாணவர்களை ஏமாற்றுவதும் அதிகரித்துவிட்டது. சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேவந்த சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படித்த மாணவர் பீபத்சூவிடம் பேசினோம். பி.இ. விமானவியல் துறையில் 75 சதவிகிதத்தோடு இறுதி ஆண்டு முடித்தவர் இவர்.

'நான் இறுதி ஆண்டு படிக்கும்போது, கண்டிப்பா கேம்பஸ் இன்டர்வியூ வரும்னு கல்லூரி நிர்வாகம் சொல்லியது. ஆனால், நான் முடிச்சு ஒரு வருடம் ஆகப்போகுது, இன்னும் ஒரு கம்பெனிகூட வரலை. இப்பவெல்லாம் பணம் கொடுத்துதான் கம்பெனிகளைக் கூட்டிட்டு வராங்க. போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால எங்க கல்லூரியில கேம்பஸ் இன்டர்வியூ நடக்கவே இல்லை. கல்லூரி நிர்வாகம் இதற்கான சரியான முயற்சிகளையும் எடுக்கவில்லை'' என்று மனம் கொதித்தார். தமிழகம் முழுக்க இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்த பல லட்சக்கணக்கான மாணவர்கள் ஏறக்குறைய இதே மனநிலையில் இருப்பார்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம்!

தப்பிப்பது எப்படி?

கேம்பஸ் இன்டர்வியூக்கள் வெறும் கண்துடைப்பு என்பது தெரிந்துவிட்டது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?, எந்தெந்த விஷயங்களில் உஷாராக இருப்பதன்மூலம் இதில் சிக்காமல் பிழைக்கலாம்? என மனிதவள மேம்பாட்டாளரும் கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் ஆர்.கார்த்திகேயனிடம் கேட்டோம்.

''தற்போது பல கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடப்பது கணிசமாக குறைந்து விட்டது. இந்நிலையில், அதைப் பற்றிய விழிப்பு உணர்வு முதலில் மாணவர்களுக்கு வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் வேலை விஷயத்தில் கல்லூரியை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கக் கூடாது. ஒரு மாணவன் கல்லூரியில் படிக்கும்போது ஆரம்பத்தில் அக்கல்லூரியைப் பற்றி தெரியாவிட்டாலும், இரண்டாவது ஆண்டு, மூன்றாவது ஆண்டுகளில் தெரியாமல் இருக்காது. அந்தச் சமயத்தில், கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ என்பது வருமா? கேம்பஸுக்கு நிறுவனங்கள் வந்தாலும் அவை எப்படிப்பட்ட நிறுவனங்கள்? அவர்கள் சொல்கிறபடி வேலை தருகிறார்களா? என்பது பற்றி யெல்லாம் சரியாக விசாரித்து அறிந்துகொள்ள முடியும்.

கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் நடக்கிறது என்றால், அதற்கு முதல் ஆண்டிலிருந்தே பயிற்சி எடுத்து மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பை தவிர வேறு ஏதேனும்  கோர்ஸ்களைப் படிக்கலாம். மேலும், படிக்கும் சமயத்திலேயே பகுதி நேர வேலைகள் பார்ப்பதன் மூலம் பணிபுரிந்ததுக்கான ஆதாரச் சான்றிதல்களைப் பெறலாம். போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில் மாணவர்கள் தங்களது ஏட்டுப் படிப்பை மட்டும் நம்பாமல், பேசும் திறன், துறை சார்ந்த அறிவினை மேம்படுத்திகொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதோடு தனிப்பட்ட திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஒரு நிறுவனம் ஒரு மாணவனை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுத்துக்கொள்கிறது என்றால், அந்த மாணவனுக்கு எல்லாம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. இப்போதைக்கு அவனுக்கு எதுவும் தெரியாவிட்டாலும் கற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையில்தான் எடுக்கிறார்கள். இதைத்தான் ஆறு மாதம் பயிற்சி (மிஸீtமீக்ஷீஸீsலீவீஜீ), ஒரு வருடம் பயிற்சி என்று கூறுகின்றன. அந்தப் பயிற்சி காலத்தில் ஒரு மாணவன் கற்றுத் தேர்ந்துவிட்டால், அவனை நிறுவனங்கள் நிரந்தரமாக வேலையில் அமர்த்திக்கொள்ளும். எனவே, படித்தால் மட்டும் போதும் என்று இருக்காமல், வேலை தொடர்பான இதர திறமைகளை நாம் வளர்த்துக்கொண்டால், கேம்பஸ் இன்டர்வியூ நடக்காவிட்டாலும் வேறு இடங்களில் நமக்கான வேலையை நிச்சயம் தேடிக்கொள்ள முடியும்'' என்று நம்பிக்கையோடு பேசி முடித்தார்  ஆர்.கார்த்திகேயன்.  

ஒருவர் செய்யும் வேலைதான் அவருடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்று மதிப்பை உயர்த்தும் என்பதை நன்கு அறிந்து கொண்ட கல்லூரிகள் எவ்வித வசதிகளும் இல்லாமல் மாணவர்களிடம் லட்சங்களை கறப்பதற்கு கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் என்னும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றன. மாணவர்களும் அவர்களின் பெற்றோரும்தான் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சரியான கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.  

 கல்லூரிகளின் காசு டெக்னிக்!

கேம்பஸ் இன்டவியூக்கு வரும் கம்பெனி அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் தருவதோடு, மாணவர்களை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கான சம்பளத்தையும் கல்லூரிகளே தருவதாக சொல்வதை எப்படி நம்புவது என வேலைவாய்ப்பு ஆலோசகர் ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவர் தந்த விளக்கம் இதோ:

''இன்றைக்கு ஒரு பெரிய கல்லூரியில் குறைந்தபட்சம் 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு ஓராண்டுக்கு சராசரியாக கட்டணம் 1 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் கிடைக்கும். 10 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, அவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் என்றாலும் மொத்தம் 12 லட்சம் ரூபாய்தான் செலவாகும். ஆனால், இதைவைத்து அடுத்த வருடமே கல்விக் கட்டணத்தைக் கணிசமாக  உயர்த்திவிடுகின்றன அந்த இன்ஜினீயரிங் கல்லூரிகள்!'' என்றார் அவர் கேஷ§வலாக.