Sunday, November 17, 2013

அப்துல் கலாமிற்கு சிவானந்தரின் அருள் மொழிகள்

எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் படித்து, விமான பொறியியல் பட்டதாரி ஆனார், அப்துல் கலாம். அவருக்கு, இரண்டு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று - விமானப் படையில், மற்றொன்று; பாதுகாப்பு அமைச்சக, விமான உற்பத்தி இயக்குநரகத்தில். விமானியாக ஆசைப்பட்ட கலாம், முதலில், விமானப்படை தேர்வு ஆணையத்திற்கு, நேர்முகத் தேர்வுக்குப் போனார். 1958ல், ஆணையம், டேராடூன் (உ.பி.,) நகரில் இருந்தது. இன்டர்வியூவில் வெற்றி பெற்றால், அதன் பின், அவரும் ஒரு பைலட்!

இந்தியாவின், தென் கோடியிலிருந்த தமிழகத்திலிருந்து, ஒரு சின்னஞ்சிறு உருவத்தினராகச் சென்ற கலாம், அங்கு, வாட்ட சாட்டமான தோற்றத்துடன் வந்திருந்த, வட மாநில மாணவர்களைக் கண்டு, திகைத்து போனார். அவர் சொல்கிறார்:

நேர்முகத் தேர்வில், இருபத்தைந்து பேர், போட்டி போட்டோம். எட்டு விமானப் படை அதிகாரிகளை, தேர்ந் தெடுக்க, நடத்தப்பட்ட தேர்வு அது. என்னால் முடிந்த மட்டும் நன்றாகவே செய்தேன். எனக்கு ஒன்பதாவது இடம் தான் கிடைத்தது. இந்தத் தேர்வில், மூளை பலத்தை விட, உடல் பலம், பருமன், உயரம் முதலியவைதான், முக்கிய இடம் பிடித்தன. இறுதியில் தான், இந்த உண்மை எனக்குத் தெரிய வந்தது என்று கூறும் கலாம், ஏமாற்றம், வேதனை ஆகியவற்றை, நெஞ்சில் சுமந்தபடி, தேர்வு வாரியத்தை விட்டு வெளியே வந்தார். வாழ்க்கையே முடிந்து விட்டது போலவும், எதிர்காலம், நம்பிக்கை அற்றதாகவும், அவருக்குத் தோன்றியது.

பல ஆண்டுகளாக, அவர், தன் மனதில் வளர்த்து வந்த, சுகமான கனவு, இப்போது, சுமையாக மாறிப்போனதை எண்ணி, வருந்தியபடியே, நேராக, இமய மலையில் உள்ள ரிஷிகேசத்திற்கு சென்றார். கங்கையில் நீராடினார்; மலை யடிவாரத்தில் நடந்தார். தூரத்தில், சிவானந்தா ஆசிரமம் தெரிந்தது. சிவானந்தர் பெரிய சன்னியாசி; தமிழ்நாட்டுக்காரர். திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்து, டாக்டர் தொழில் புரிந்தவர். அனைத்தையும் விட்டுவிட்டு, ரிஷிகேசம் சென்று, ஆசிரமம் நடத்தி, ஏழைகளுக்குத் தொண்டு செய்து வந்தார்.

அப்துல் கலாம், சிவானந்தா ஆசிரமத்தை நோக்கி நடந்தார். தன் ஊர், பெயர் விவரங்களைத் தெரிவித்து, சிவனாந்தரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். உடனே, சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. வெள்ளை நிற ஆடை, நெற்றியில் திருநீறு, கால்களில் மரச்செருப்புடன் புன்னகை தவழும் முகம், அருள் வீசும் கனிந்த பார்வையுடன், சிவானந்தர் அமர்ந்திருந்தார்.

'உன் முகம் வாடியிருக்கிறது. மனம் சோர்ந்து இருக்கிறது. என்ன கவலை; என்னிடம் சொல்...' என்றார் சிவானந்தர்.

'சுவாமி...' என்று, துவங்கிய கலாம், அதற்கு மேல் பேச்சு வராமல், மனம் உடைந்து அழுதார். சிவானந்தர் ஏதும் பேசவில்லை. கலாம், ஒரு நிதானத்திற்கு வந்து, பேசத் துவங்கட்டும் என்றிருந்தார்.

ஆசுவாசப்படுத்திக் கொண்ட கலாம், 'சுவாமி... என் வாழ்நாள் கனவு, முடிந்து விட்டது. நான் விமானியாக நினைத்தேன். விமானப்படையில் சேர, நேர்முகத் தேர்வுக்கு வந்தேன். தேர்வு ஆகவில்லை. என் கனவுக் கோட்டை சரிந்து விட்டது...' என்றார்.

'குழந்தாய்... உன் தலை விதியை, நீ நிர்ணயிக்க முடியாது. ஏற்கனவே, உன் வாழ்க்கை வரைபடத்தை, கடவுள் வரைந்து வைத் திருக்கிறார். அந்த வழியில், அவரே உன்னை அழைத்துச் செல்வார். நீ ஏன் அஞ்சுகிறாய்... உன் வாழ்க்கைப் பொறுப்பை, கடவுள் ஏற்றிருக்கும் போது, அதை விடப் பெரிய பாதுகாப்பு, உனக்கு வேறென்ன வேண்டும்?'

சிவானந்தரின் அருள் மொழிகள், கலாமிற்கு, புதிய தெம்பைக் கொடுத்தன. நம்பிக்கையுடன் எழுந்தார்; சாதனைகளைப் படைத்தார்.


அருணா பப்ளிகேஷன்ஸ், 'அப்துல் கலாம்' நூலிலிருந்து...