Tuesday, July 9, 2013

மேலோட்டமாகப் பார்த்து- படித்துத் தெரிவது வாழ்க்கைக்கு உதவாது

டி மாதம் பௌர்ணமி திருநாளை வியாச பூர்ணிமா என்பார்கள். அன்று, வியாசர் முதலான உலக குருமார்களை வழிபடுவது விசேஷம்.

சரி... குருவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம்? நம் ஞானநூல்கள் எல்லாம் குருவைப் போற்றச் சொல்வதன் காரணம் என்ன? இதை விளக்கும் கதை ஒன்று உண்டு.

சீடன் ஒருவனுக்கு குருவின் உபதேசத்தில் பிடிப்பில்லாமல் போனது. 'எல்லாவற்றையும் சாஸ்திரங்களைப் படித்து நாமே தெரிஞ்சுக்கலாம்' என்ற எண்ணத்துடன் குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாகக் குடில் அமைத்து சாஸ்திர நூல்களைப் படிக்க ஆரம்பித்தான். ஒரு நூலில், 'எச்சில் பரிசுத்தம், வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம்' என்றிருந்தது. அதை அப்படியே மனத்தில் பதிய வைத்துக் கொண்டான்.

ஒருநாள் பி¬க்ஷக்காக ஒரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே ஒரு வீட்டில் ஏதோ விசேஷம்; விருந்து முடிந்து எல்லோரும் எச்சில் இலைகளை குப்பையில் வீசி எறிந்தார்கள். சீடன் துணுக்குற்றான். 'சாஸ்திரம் தெரியாத பாமரர்கள்' என்று மனத்துக்குள் திட்டியபடி ஓடோடிச் சென்று, குப்பையில் கிடந்த எச்சில் இலைகளைக் கையிலெடுக்க முற்பட்டான். அப்போது முதியவர் ஒருவர் அவனைத் தடுத்து, 'பார்ப்பதற்கு தபஸ்வி போல் இருக்கிறாய். எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே... ஏன்?' என்று விசாரித்தார்.

''உங்களுக்கு சாஸ்திரம் தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். 'எச்சில் பரிசுத்தம்' என்று சாஸ்திரம் சொல்கிறது, தெரியுமா?'' என்றான் சீடன்.

முதியவர் குழம்பிப் போனார். அவனை இன்னும் முழுமையாக விசாரித்தார். சீடன், தான் படித்ததை அவருக்கு விவரித்தான். அப்போதுதான் அவன் அரைகுறை என்பது முதியவருக்குப் புரிந்தது. சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார்: ''எச்சில் பரிசுத்தம் என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால்குடித்த பிறகே பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் அந்த பால் பரிசுத்தமானது; இறைவனின் அபிஷேகத்துக்குப் பயன்படும் என்பதால் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்'' என்று விளக்கினார்.

''எனில், வாந்தி பண்ணினது பரிசுத்தம் என்றுள்ளதே அதற்கு என்ன பொருள்?'' எனக்கேட்டான் சீடன்.

''தேனீக்களின் வாயிலிருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனபிஷேகமும் செய்வோமே! அதுபோன்றுதான்... பட்டுப்பூச்சிக்கள் இறந்ததும் அதன் கூடுகளில் இருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி இறைவனுக்குச் சார்த்துவோம். அதையே 'இறந்தவன் போர்வை பரிசுத்தம்' எனச் சொல்லியிருக்கிறார்கள்''

முதியவர் சொன்னதைக் கேட்டதும்தான் சீடனுக்கு புத்தியில் உறைத்தது. எதையும் மேலோட்டமாகப் பார்த்து- படித்துத் தெரிவது  என்பது வாழ்க்கைக்கு உதவாது. அதன் நுட்பத்தை ஆழமாக அறிய குருநாதர் தேவை என்பதைப் புரிந்துகொண்டான்.

எனக்குத் தெரிந்த குரு ஒருவர் உண்டு. 'ஒரு நாள் ஒரு உபதேசம்' என்பது அவரது பாலிஸி. ஒருநாள், உடம்பு முழுக்க காயங்களுடன் ஓடி வந்தார். நான் பதறிப்போய் விசாரிக்க...

''இன்னிக்கு என்னோட சிஷ்யகோடி ஒருத்தன், குருநாதராக அடிப்படைத் தகுதி என்னன்னு கேள்வி கேட்டான். 'நான் எனும் அகந்தை சாகணும்' என்பதை அவனுக்கு தத்துவார்த்தமா போதிக்கணும்னு நினைச்சு, 'நான்' சாகணும்னு சிம்பாலிக்கா சொன்னேன். பாவிப்பய, தப்பா புரிஞ்சுகிட்டான். பக்கத்துல கிடந்த விறகுக்கட்டையை எடுத்து சாத்து சாத்துன்னு சாத்த ஆரம்பிச்சுட்டான்!'' என்றார் அப்பாவியாக.

குரு-சிஷ்ய பந்தம் இப்படி இருக்கக்கூடாது!