Tuesday, July 23, 2013

உன்னையெல்லாம் கும்பிட்டு என்ன பயன்

பலனைச் சிந்திக்காமல் கடமையாற்றுவது இருக்கட்டும்; கடமையைச் செய்யாமலே பலனை எதிர்பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.

ஓர் ஊரில் ஏழைக் குடியானவன் ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன், ''கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!'' என்று புலம்பிவிட்டுப் போனான்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ''பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் வந்து உன்னை வணங்கிட்டுப் போற எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இன்னிக்கு லாட்டரியில இரண்டு லட்சம் விழுந்திருக்கு. தினம் வந்து கும்பிட்டுட்டுப் போற என் விஷயத்துல நீ கொஞ்சம் கண் திறக்கக் கூடாதா?'' என்று குறைப்பட்டுக்கொண்டான்.

மேலும் சில நாட்கள் கழிந்திருக்கும். இந்த முறை வந்தவன், பிள்ளையாரைத் திட்டவே ஆரம்பித்துவிட்டான். ''நீயெல்லாம் ஒரு கடவுளா? பாரு... இன்னிக்கு மேல் வீட்டுக்காரனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு. இதுவரைக்கும் எனக்கு ஒரு நயா பைசாகூட நீ அருள்பாலிக்கலையே? உன்னையெல்லாம் கும்பிட்டு என்ன பயன்...''  

அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டு, ஏகக் கடுப்புடன் ஒலித்தது அசரீரி... ''மடையா! முதல்ல போய் ஒரே ஒரு லாட்டரிச் சீட்டாவது வாங்கித் தொலை! அப்புறம் வந்து புலம்பு!''

 ''ஒருவன் தனது லட்சியத்தை அடையணும்னா வெறும் நம்பிக்கை மட்டும் போதாது; தன்னம்பிக்கை வேண்டும். வெறும் உழைப்பு என்பது வீண்; திட்டமிட்ட உழைப்பு, அதாவது 'ப்ளானிங் வொர்க்'தான் தேவை. அதே போன்று, வெறுமே முயற்சி செய்து பார்த்தால் மட்டும் போதாது! எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும்!''

அப்போது நமது வெற்றி எளிதில் சாத்தியமாகிவிடுமா?

அது பற்றி நாம் சிந்திக்கவே தேவை இல்லை, கீதாசாரம் சொல்கிறது... 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!' என்று.

'அதெப்படி? சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியுமா என்ன?!' - மேலோட்டமாகப் பார்த்தால், இப்படித்தான் கேட்கத் தோன்றும். ஆனால், கீதாசார வாக்கியம் இந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. 

நல்லதோ கெட்டதோ, நாம் எதைச் செய்தாலும் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று விஞ்ஞானமும் சொல்கிறதே! ஆக, பலன் நிச்சயம் என்பதால், அதைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; விளைவுகளைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் கடமையைச் செவ்வனே செய்யுங்கள் எனப் போதிக்கிறார் பரமாத்மா.