Saturday, July 20, 2013

பாப்பாவுக்கு மூச்சுத்திணறலா?

25 வயதே ஆன, அந்தப் பெண்ணுக்கு முதல் பிரசவம் அது. பிரசவத்துக்கு முன்பே, வயிற்றில் குழந்தை பனிக் குட நீரைக் குடித்துவிட, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டிய நிலை. குழந்தை பிறந்தவுடன் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட, உடனே, எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லியிருக்கின்றனர். நொடி பொழுதும் தாமதிக்காமல், அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று குழந்தையை அட்மிட் செய்திருக்கிறார் குழந்தையின் தந்தை. ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்ட அந்த பச்சிளம் குழந்தைக்கு உடனடியாக செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. 72 மணி நேரத்துக்குப் பிறகே குழந்தையின் நிலையை சொல்ல முடியும் என்று சொல்ல, பரிதவித்க்திருக்கிறது குடும்பம். தொடர்ந்து, குழந்தையை கண்காணித்து, அதன் சீரான சுவாசத்தை ஏற்படுத்திக் கொடுக்க மருத்துவர்கள் பெரிதும் போராடினர். தற்போது அந்தக் குழந்தை அம்மாவின் அரவனைப்பில். இதுபோன்று ஏராளமான குழந்தைகள் மூச்சுத்திணறல் பிரச்னைக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்ததைக் கண்டபோது, அதிர்ச்சியாக இருந்தது.

 பிறந்த பச்சிளங் குழந்தைக்கு மூச்சுத்திணறல் வருவதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை பராமாரிப்பு பிரிவின் பேராசிரியர் மற்றும் துறை தலைவரான டாக்டர் குமுதாவைச் சந்தித்தோம்.  

''சுற்றுச் சூழல் மாசுப்பட்டு, நோய் தொற்றுக்களும் பெருகிவிட்ட நிலையில், வியாதிகள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதிலும், முச்சுவிடவே திணறும் பச்சிளம் குழந்தைகளின் வரத்து அதிகரித்துதான் உள்ளது. சென்ற ஒரு மாதத்தில் மட்டுமே, 332 குழந்தைகள் இங்கு அட்மிட் ஆகியிருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 குழந்தைகள் ரொம்ப சிக்கலான நிலையில் வருகின்றனர். அதில் 85 சதவிகிதக் குழந்தைகளைக் காப்பாற்றிவிடுகிறோம்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வரலாமா என்பதை 98 சதவிகிதம் முன்கூட்டியே கணிக்க முடியும். அப்படியிருந்தும், பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வருகிறது என்பதுதான் வேதனை'' என்ற டாக்டர் குமுதா தொடர்ந்து விரிவாகப் பேசினார்..

தாய் கருவுற்ற, 40-வது வாரம் முதல் 42-வது வாரங்களுக்குள் நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் 37 வாரங்களுக்குள் பிறக்கும் குறை மாத குழந்தைகள் என இரண்டு வகை குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் வருவது சகஜமாகிவிட்டது. இது வருவதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன.      

1  நிறை மாதத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு, கர்ப்பத்தில் இருக்கும்போதே, நஞ்சுக் கொடியிலிருந்து ஆக்சிஜனும், ரத்த ஓட்டமும் சரிவர போகாமல் இருக்கலாம். இதனால், அந்தக் குழந்தைக்கு பிறக்கும்போதே மூச்சுத்திணறல் ஏற்படும். இது குழந்தைகளுக்கு ஏற்படுகிற பொதுவான மூச்சுத் திணறல் பிரச்னை.  

2. குழந்தைகள் பிறந்ததும் கறுப்பாக மலம் போகும். இதைக் 'காட்டு மலம்' என்பார்கள். சில குழந்தைகள், கர்ப்பப்பைக்குள் இருக்கும்போதே கரும்நிறத்தில் மலம் கழித்துவிடும். இந்தக் காட்டு மலம் பனிக் குட நீரில் கலந்து, குழந்தையின் நுரையீரலுக்குள் சென்று, அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நாம் தண்ணீர் குடித்ததும், உணவுக் குழாய்க்கு நீர் போகாமல் மூச்சுக் குழாய்க்ச் போனால் எப்படிப் புரையேறி மூச்சுத் திணறல் வருகிறதோ அதுபோல்தான்.  

3. பனிக் குடம்தான் குழந்தைக்குப் பாதுகாப்பான இடம். சில நேரங்களில் பிரசவ வலியே இல்லாமல் பனிக் குடம் உடையும்போது, தாயின் பிறப்புறுப்பின் வழியே, குழந்தைக்கு நோய் கிருமிகள் தாக்கும். இதனால், மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படுகிறது.    

4. குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சி பெறாமல், குறையுடன் பிறப்பது. நுரையீரல் சரியான வளர்ச்சியின்மை, வயிற்றையும் மார்பகத்தையும் பிரிக்கிற பகுதியில் ஓட்டை,  உணவுக் குழாயில் அடைப்பு போன்ற பிரச்னைகள் இருக்கலாம். உணவுக் குழாய்க்கும், சுவாசக் குழாய்க்கும் தனித் தனிக் குழாய்கள் இருக்கின்றன.  குழந்தை பால் குடிக்கும்போது, பால் உணவுக் குழாய் வழியாகச் செல்லாமல், நுரையீரலுக்குச் செல்லும் குழாய் வழியாகச் சென்று நுரையீரலுக்குப் போய் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

இதுதவிர, கர்ப்ப காலத்தில் நீர் அதிகமாக இருக்கும். பிரசவத்தின்போது, நீர் வெளியேற்றப்பட்டு காற்று வரும். குழந்தையை சிசேரியன் செய்து எடுக்கும்போது, சிலருக்கு நீர் தங்கி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்த மாதத்துக்கு ஏற்ற உடல் வளர்ச்சி, அதன் உள்உறுப்புகளில் செயல்பாடு, முதிர்ச்சி இல்லாமல்தான் இருக்கும். வெளியில் வந்தவுடன், தன்னிச்சையாக நுரையீரல் செயல்படவேண்டும். குழந்தையின் நுரையீரல் வளர்ச்சிக் குறைவாக இருந்தால், சர்ஃபேக்டன்ட் (Surfactant deficiency) என்ற குறைபாடு ஏற்படும்.

கர்ப்பக்காலத்தில் அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்:

 குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை வருமா? என்று தொடர்ந்துக் காண்காணிக்க வேண்டும்.

 சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், பி.ஐ.ஹெச், பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் போன்றவை அவ்வப்போது கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும்.

 பனிக் குடத்தில் நீர் குறைவாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

பிரச்னை உள்ள பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை:

குழந்தை எவ்வளவு முறை மூச்சுவிடுகிறது? ஆக்சிஜனேஷன் சரியாக இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். தேவையெனில், ரத்தப் பரிசோதனை, எக்ஸ் ரே போன்றவை எடுக்கவேண்டும்.

 உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.

 குறை மாதக் குழந்தைக்கு சர்ஃபேக்டன்ட் குறைபாடு இருந்தால், அதற்கான மருந்து தேவைப்படும். நோய்க் கிருமி தாக்கம் அதிகம் இருந்தால், கல்சர் டெஸ்ட் செய்து, அதற்குஏற்ப ஆன்டிபயாடிக் போடணும்.

 குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருப்பதால், அது சுவாசிப்பதற்கு கருவி மூலமாக, வழி செய்து, இந்த சர்ஃபேக்டன்ட் மருந்தும் கொடுக்கப்படும்.

இந்த மூன்றும் கொடுப்பதால் குழந்தை நிம்மதியான சுவாசத்தை பெறும். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால்,  குழந்தை சீக்கிரமே நல்ல நிலைக்கு வந்துவிடும்'' என்கிற டாக்டர் குமுதா,      

''பச்சிளம் குழந்தைகள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவு. எடையும் குறைவாக இருக்கும். நாங்கள் நன்றாகக் காப்பாற்றிக் கொடுத்து, வீட்டுக்கு அனுப்பிய பிறகும், குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை என்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகதான் இருக்கிறது. நோய் கிருமி தாக்கம்தான் இதற்குக் காரணம். இதைத் தவிர்க்க,

 மூன்று மாதங்கள் வரை குழந்தையைத் தொடுவதற்கு தாயைத் தவிர, வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது.

 டாக்டர் பரிந்துரைக்கும் சென்சிட்டிவ் கிரீம் தடவிக் கொண்டுதான் குழந்தையை தொடவேண்டும்.

 குழந்தை இருக்கும் அறை மட்டுமில்லாமல். வீடு, சுற்றுச்சூழல் அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்!