Sunday, July 21, 2013

கடவுள் பெயரில் நம்பிக்கை

"ஏன் இவ்வளவு தாமதம்...' என்று சினந்தார் சாது.

"நான் என்ன ஸ்வாமி செய்வேன்... ஆற்றைக் கடந்து வர வேண்டியுள்ளது! பரிசல்காரன் குறித்த நேரத்தில் வருவதில்லையே...' என்று பயபக்தியோடு மொழிந்தாள், அவருக்கு பால் கொண்டு வரும் பால்காரி.

சாதுவின் கோபம் தணியவில்லை.

"என்ன... பரிசலுக்காகவா காத்திருக்கிறாய்? இறைவனுடைய பெயரைச் சொன்னால் சம்சார சாகரத்தையே தாண்டி விடலாமே! அப்படி இருக்கும்போது, அவனுடைய பெயரைச் சொல்லி, இந்த ஆற்றை கடந்து வர முடியாதா...' என்று முழங்கினார்.

அவர் வார்த்தையை உள் வாங்கிக் கொண்ட பால்காரி, மவுனமாகத் திரும்பினாள்.
அடுத்த நாள் முதல் குறித்த நேரத்தில் பால் வந்தது.

சாதுவுக்கு ஒரே மலைப்பு!

"இப்பொழுதெல்லாம் நேரம் தவறாமல் எப்படி வருகிறாய்?' என்று ஒரு நாள் அவளிடம் கேட்டார்.

"நீங்கள் உபதேசித்தபடி, கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து வருகிறேன்...' என்றாள்.

சாதுவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நேராகவே இதைப் பரிசோதிக்க, பால்காரியுடன் ஆற்றுக்கு புறப்பட்டார்.

கடவுள் பெயரைச் சொல்லியபடி, ஆற்றின் மேல் ஒய்யாரமாக நடந்து போனாள் பால்காரி.

ஆயிரம் பெயர்களால் கடவுளைக் கூவிக் கொண்டே ஆற்றில் அடியெடுத்து வைத்த சாது, அடுத்த வினாடி, நீரில் விழுந்தார்.

"ஐயா... கடவுள் பெயரை சொல்லுகிற போது, உங்களுக்கு எதற்கு சந்தேகம் வந்தது? இடுப்பு வேட்டி நனைந்து போகுமே என்று தூக்கிப் பிடித்துக் கொண்டீர்களே... உங்களுக்கு கடவுள் பெயரில் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தெரிகிறது...' எனக் கூறியபடியே மேற்கொண்டு நடந்தாள் பால்காரி...