Wednesday, July 31, 2013

என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்

 ''நான் சென்னையைச் சேர்ந்த வாசகி. 'அவள் விகடன்' கட்டுரை ஒன்றில், தாய்ப்பால் பற்றி... குறிப்பாக சீம்பால் தருவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்ததை படித்த நான், என் பிரசவத்தில் அதைத் தவறாமல் கடைபிடிக்கக் காத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் சுகப்பிரசவமான எனக்கு நேர்ந்த அனுபவமோ, கசப்பானது. 'சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்' என்று அவள் விகடனில் படித்திருந்ததைச் சொல்லி, பாலூட்டுவதற்காக என் குழந்தையைத் தரும்படி நர்ஸிடம் கேட்டேன். 'ரூம் இல்லை' என்று ஏதேதோ சாக்கு சொல்லி, என் குழந்தை என் கையில் கிடைப்பதற்குள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.

அதன்பிறகும் தீரவில்லை பிரச்னை. குழந்தைக்கு நான் பாலூட்டியும் அது அழுகையை நிறுத்தவில்லை. நர்ஸ், 'சுத்தமா பால் இல்ல, ஏன் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்குறீங்க?' என்று கடிந்ததுடன், பிரபலமான பால் பவுடரின் பெயரைச் சொல்லி, அதை கலக்கி குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். எனக்கு பால் ஊறுவதையும், குழந்தை அதை பருகுவதையும் நான் உணர்ந்ததால், 'எனக்கு பால் இருக்கு' என்றேன். என் சொந்தபந்தங்களும் அந்த நர்ஸுடன் சேர்ந்துகொண்டு, 'அவளுக்கு பாலே இல்ல' என்று பேச ஆரம்பித்தனர். ஆனாலும் நான் பால் பவுடரை கொடுக்க அனுமதிக்காமல், நானே பாலூட்டினேன். மறுநாள் காலை வந்த குழந்தை நல மருத்துவர், 'பால் சுரக்குதே... குட்! விடாம ஃபீட் பண்ணுங்க... அப்போதான் பால் நன்றாக ஊறும்!' என்று சொன்னபோதுதான்... எனக்கு நிம்மதி பிறந்தது.

இப்படித்தான் தாய்ப்பால் பற்றிய உண்மைகளைத் தெரியாதவர்கள், அதன் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள் எல்லாம், இஷ்டம்போல ஆலோசனைகளைச் சொல்லி, இயல்பாக நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்குமே, செயற்கையான விஷயங்கள் மற்றும் பொருட்கள் மீது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள். ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்'. இந்தச் சமயத்தில் தாய்ப்பால் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை அளித்தால், பிரசவிக்கும் இளம் தாய்மார்களுக்கு வழிகாட்டியாக இருக்குமே!''

- மதுரையைச் சேர்ந்த வாசகி அகிலாவின் இந்தக் கடிதத்தை, சென்னை, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் ஆர்.எஸ். முன் வைத்தோம். ''இத்தனை இடையூறுகளுக்கு இடையேயும் தன் கடமையில் உறுதியாக இருந்து, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வாசகி பாராட்டுக்குரியவர்!'' என்று சொன்ன டாக்டர், தாய்ப்பால் சுரப்பு பற்றிய விளக்கத் தகவல்களை வழங்கினார்.

ஹார்மோன் தூண்ட, தாய்ப்பால் சுரக்கும்!

''முதலில் நான் வலியுறுத்த விரும்புவது, தாய்ப்பால் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். 'ஒல்லியான தாய் என்பதால் பால் சுரக்கவில்லை', 'குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் பால் போதவில்லை' என்ற பேச்சுக்களில் எல்லாம் துளியும் உண்மையில்லை. குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருந்து, 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்' என்று உளப்பூர்வமாக நினைக்கும்போது, அந்தச் செய்தி மூளைக்கு தெரிவிக்கப்பட்டு, ஆக்சிடோஸின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்பதற்கு மிக முக்கியமானது. மாறாக, குழந்தை பெற்றெடுத்த தாயின் மனநிலை அமைதியில்லாமல் இருந்து, குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய நினைப்பில்லாமல், விருப்பமில்லாமல் இருந்தால், ஹார்மோன் சுரக்காது, தாய்ப்பாலும் சுரக்காது. எனவே, பிரவசத் தில் உடல், மன ரீதியாக துன்புற்று வந்திருக்கும் பெண்ணுக்குத் தேவையான அன்பையும், அமைதியையும் உடனிருப்பவர்கள் தரவேண்டும்.

பிரசவித்த தாய்மார்களுடன் உதவிக்காக இருப்பவர்கள், 'பெண் குழந்தையா போச்சு', 'ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு', 'உனக்கு பால் இல்ல', 'குழந்தையைத் தூக்கக்கூடத் தெரியல' போன்ற புலம்பல்களை வெளிப்படுத்துபவர் களாக இருக்கும்பட்சத்தில், அவர்களை அங் கிருந்து மெதுவாக வெளியேற்றுவதே நல்லது.

மார்பகக் காம்பு... கவனம்!

குழந்தை பெற்ற தாய் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சுத்தம், மார்பகக் காம்புகள் சுத்தம் மற்றும் சத்தான உணவு. உடல் சுத்தம், சத்தான உணவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மார்பகக் காம்பு சுத்தத்தை பொறுத்தவரை பல பெண்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகளுக்கு உரிய பராமரிப்பை தரவேண்டும். காம்பில் புண், பிளவுகள் ஏதாவது இருந்தால் கர்ப்ப காலத்தில் செக்கப் செல்லும்போதே மருத்துவரிடம் தெரிவித்து, சிகிச்சை எடுக்கவேண்டும். சிலருக்கு இயல்பிலேயே காம்புகள் உள் அமுங்கி இருக்கும். இது குழந்தைக்கு பால் குடிக்க ஏதுவாக இருக்காது. அதனால் கர்ப்ப காலத்தில் இருந்தே குளித்து முடித்தபின் மிருதுவாக காம்புகளை வெளியே இழுத்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது பிரசவ நேரத்தில் காம்புகள் குழந்தை சப்புவதற்கு ஏதுவாக வெளிவந்திருக்கும்.  

சீம்பால் முக்கியம்!

குழந்தை பிறந்ததும் சுகப்பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியனாக இருந்தால் தாய் மயக்கத்தில் இருந்து கண் விழித்த பிறகு, அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு உடல் நிலைக்கு தேறிய பிறகு பால் புகட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின் முதன் முதலில் தாய்க்கு சீம்பால் (கொலோஸ்ட்ரம்) சுரக்கும். இது குறைவான அளவே சுரக்கும் என்றாலும், பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் 5 முதல் 7 மில்லி பாலையே தாங்கும் என்பதால், அந்த அளவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் முதல் நாளில், 'ஐயோ பால் குறைவா இருக்கே' என்று கவலைப்பட வேண்டியதில்லை.

பிரசவத்துக்குப் பின் தாய் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் பால் சுரக்கும் என்பதிலும் உண்மையில்லை. பொதுவாக, பிரசவித்த தாய்க்கு பால், இளநீர் என்று கொடுக்கச் சொல்வது, பிரசவம் எனும் பெருநிகழ்வு முடித்து வந்திருக்கும் அவர் உடலுக்கான தெம்புக்காகத்தானே தவிர, பால் சுரப்புக்காக இல்லை. எனவே, பிரசவத்துக்குப் பின் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், பால் சுரப்பு நிகழும் என்பதுதான் இயற்கையின் கொடை.

அச்சப்பட வேண்டியதில்லை அழுகைக்கு!

அடுத்ததாக, குழந்தை அழுவதைப் பார்த்துப் பதற்றப்படும் தாய்மார்கள் அநேகம். பசிக்காக அழுகிறதோ என்று நினைத்து, பால் புகட்டுவார்கள். ஆனால், பசியாறிய பின்னும் குழந்தை அழும். 'பால் பத்தலையோ' என்றும் மீண்டும் கவலைப்படுவார்கள். காரணம் அதுவல்ல. அதுவரை தாயின் வயிற்றில் இருட்டறையில் இருந்த குழந்தைக்கு, வேளாவேளைக்கு கேட்காமலேயே ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிச்சம், சத்தம் போன்றவை எல்லாம் புதிதாக இருப்பதாலும், பசித்து அழுதால்தான் பால் கிடைக்கும் என்பதாலும், பிறந்த ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்தோ, விட்டு விட்டோ குழந்தை அழுவது இயல்பே. அழும் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அதற்குப் பின்னும் அழுதால், பதற்றமோ கவலையோ வேண்டாம். கருவறைக்கு ஒத்த பாதுகாப்பாக, தாயின் அரவணைப்புக்குள் குழந்தையைக் கொண்டு வாருங்கள். அழுகை சில நாட்களில் சரியாகிவிடும்.

பால்சுரப்பு அதிகரிக்க..!

அடுத்ததாக, பிரசவத்தை தொடர்ந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம். குழந்தை தாய் மார்பை சப்ப சப்பதான் பால் சுரப்பு அதிகமாகும். எனவே, தாய்ப்பால் குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து குழந்தைக்கு பால் புகட்டியபடியே இருங்கள். அது பால் சுரப்பை தானாகத் தூண்டும். ஒருவேளை சிலருக்கு மிகமிகக் குறைந்த அளவே பால் சுரப்பு உள்ளது அல்லது சுரக்கவே இல்லை (இது மிக அரிதாகவே நிகழும்) எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தத் தாய் பால் சுரப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர்,  

தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!

தாய்ப்பால் உன்னதமானது, சுத்தமானது, சத்துக்கள் நிரம்பியது. தாய்ப்பாலில் எனர்ஜி, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளதுடன், இது நிமோனியா, டயரியா, அலர்ஜி போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிற எதிர்ப்பு சக்தியினை தரவல்லது. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்ற பால் அருந்தும் குழந்தைகளைவிட திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலை தருவதில்லை. ஆனால், நாம் மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை அபகரித்துத் தருகிறோம். பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்ன பிற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். இதன் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி என குழந்தைகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படலாம்.

எனவே, எண்ணிலடங்கா மற்றும் ஈடு இணையற்ற சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பாலை தங்கள் குழந்தைக்குக் கிடைக்கச் செய்வது ஒவ்வொரு தாயின் கடமை. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல... பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது. மேலும், தாயின் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பவும் பாலூட்டுவது அவசியமாகிறது'' என்று வலியுறுத்திய டாக்டர்...

''மொத்தத்தில் கருவுற்றிருக்கும்போதே, 'என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்' என்கிற அன்பையும் உறுதியையும் தாய்மார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று அன்பான அறிவுரையையும் தந்தார் முத்தாய்ப்பாக!