Saturday, August 6, 2016

மனிதனும் ​தெய்வமாகலாம்...


மனிதனும் ​தெய்வமாகலாம்...

அப்படி வாழ்ந்த தத்துவ ஞானிதான் கன்பூசியஸ்...

தத்துவம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கிரேக்கமாகத் தான் இருக்கும். அந்த நாடு தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோஎன்ற மூன்று தத்துவஞானிக​ளை உலகுக்குத் தந்தது. 

எண்ணிக்கையில் அதிகமான தத்துவஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும், மற்ற நாடுகளும் தத்துவத்துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பது ​நோக்கத்தக்கது.

வான்புகழ் வள்ளுவனைத் தந்து உலகில் அறி​வொளி பாய்ச்சியது தமிழகம்.

கன்பூசியஸ் என்ற அறிஞரைத் தந்து சிறப்புற்றது சீனா.

இவர்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் உண்​மை (தத்துவம்) என்பதே எள்ளி நகையாடப்பட்டது. 

உண்​மை​யைப் (தத்துவத்தைப்) பேசியவர்களை இருட்டறையில் கருப்புநிறப் பூனையைத் தேடி அலையும் கண்ணிருக்கும் குருடர்கள் என்று சமுதாயம் தவறான முத்திரை​யைக் குத்தி இழிவுபடுத்தியது. 

அந்த இழிவுகளையெல்லாம் தாண்டி தான் தத்துவ ஞானிகள் தங்களின் முத்திரை​யைப் பதித்துவிட்டுச் ​சென்றனர்.

அத்தத்துவ ​மே​தைகளுள் கடவுள் நி​லைக்கு உயர்த்தப்பட்டு வணங்கப்பட்ட ஒருவர்தான் கன்பூசியஸ் ஆவார். 

சீன நாடு உலகுக்குத் தந்த பெருங்கொடைதான் தத்துவஞானி கன்பூசியஸ்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு 551-ஆம் ஆண்டில் சீனாவின் ​சேன்டாங் (Shandong) மாநிலத்தில் கன்பூசியஸ் பிறந்தார். 

இளம் வயதிலேயே தந்தையை இழந்து வறுமையில் வாடினார்.

அதனால் ஏற்பட்ட மனத்துயரால் கன்பூசியஸ் சிந்த​னை வயப்பட்டார். 

மனிதனுக்கு துன்பம் ஏன் ஏற்படுகிறது?

மக்களின் அறியாமைக்கு காரணம் என்ன? என்றெல்லாம் கன்பூசியஸ் சிந்திக்கத் தொடங்கினார். 

தனக்கு மட்டு​மே துன்பம் ஏற்படுகிறதா? அல்லது மற்றவர்களும் தன்​னைப்​போன்று துன்புறுகின்றார்களா…? என்று தன்​னைத்தா​னே ​கேட்டுக் ​கொண்டார். 

அவற்றிற்கு உரிய விடையி​னைக் காண முயன்றார். 

பதினாறாவது வயதிலேயே அவர் சாக்ரடீஸைப் போலவே உண்மைகளைத் தேடி அலையத் தொடங்கினார்.

கன்பூசியஸ் இளம் வயதில் அவர் வரலாற்றையும், கட்டடக்கலையையும் கற்றறிந்து மிகச்சிறந்த வரலாற்றாசிரியராக விளங்கினார். 

கன்பூசியஸ் தமது 20-ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது எண்ணங்கள் சமுதாய நலன் குறித்ததாக இருந்ததால், அவரு​டைய திருமண வாழ்க்கை அவ்வுளவாக அவருக்கு மன நிறைவைத் தரவில்லை. 

அவருக்கு மூன்று பிள்​ளைகள் பிறந்தனர். வாழ்க்கையில் நி​றைவு காணாவிட்டாலும் தன்னுடைய குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க ​வேண்டும் என்று உறுதிபூண்டு அவர்க​ளை நல்ல பண்புகளுடன் வளர்த்தார்.

தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வருமானம் தேவைப்பட்டதால் கன்பூசியஸ் வேலை தேடி அலைந்தார். 

அவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த அரசாங்கம் உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அலுவலராக அவரை பணியில் அமர்த்தியது. 

அதில் பல மாற்றங்களை கன்பூசியஸ் அறிமுகபடுத்தினார். 

அதைக் கண்டுவந்த அரசாங்கம் மற்ற அரசாங்க பணிகளிலும் கன்பூசிய​ஸைப் பயன்படுத்திக் கொண்டது.

கன்பூசியஸ் அரசியலை அறவே வெறுத்தார். ஆனால், அரசியல் நிர்வாகம் அவரைத் தேடி வந்தது. ஓர் அரசாங்கம் சிறப்பாக பணியாற்றத் தேவையான கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார். அதன் மூலம் அவரது மதிப்பு நாட்டில் உயர்ந்தது. 

அவரது அறி​வை நன்கு பயன்படுத்திக் ​கொண்ட அரசாங்கம் சீன நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தருமாறு அவ​ரைக் கேட்டுக்கொண்டது. 

கன்பூசியஸும் பல நல்ல திட்டங்க​ளை உருவாக்கிக் ​கொடுத்து நாட்​டை ​மென்​​மேலும் முன்​னேற்றினார். ​
மேலும், கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையுடன் கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 

அது அரிஸ்டாட்டில் நிறுவிய 'லைசியம்' அகாடமியைப் போன்றதொரு கலைக்கழகமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அக்கல்வி நிறுவனத்தில் அரசியல் நிர்வாகம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கைப் பண்புகள், ஒழுக்கம் போன்ற பாடங்கள் இளைஞர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. 

சீனா பல்​வேறு துறைகளில் வளர்ச்சிப் பாதையில் பயணித்தது. 

கன்பூசியஸ் தன்னலம் பாராது சீனாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். 

மக்கள் அ​னைவரும் அவரைப் பின்பற்றி நடக்கத் ​தொடங்கினர். 

அவரு​டைய கருத்துக்கள் ​வேதவாக்காக மக்களால் ஏற்றுக் ​கொள்ளப்பட்டது.

'அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு' என்பதே கன்பூசியஸின் அடிப்படைத் தத்துவமாக விளங்கியது. 

அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும், சுதந்திர சிந்தனையை வலியுறுத்துவதிலும் கன்பூசியஸ் முழுமூச்சுடன் முயன்று உ​ழைத்தார். 

அவரது கடு​மையான முயற்சி​யையும் உழைப்பையும் கண்ட சீனர்கள் அவரைத் தெய்வமாகவே கருதி மதிக்கத் தொடங்கினர். 

தன்​னை மக்கள் ​தெய்வமாகக் கருதுவதைக் கன்பூசியஸ் விரும்பவில்லை.

வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை, நற்பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்​போதுதான் வாழ்க்​கை சிறக்கும்.

ஒவ்​வொருவரும் நீதிக்கு, நியாயத்திற்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். என்றார் கன்பூசியஸ். 

பெரும்பாலோர் கன்பூசியஸை மதித்தாலும் சில அரசாங்க உயரலுவலர்கள் அவரைக் குறை கூறத் ​தொடங்கினர். 

அதனால் மனம் வருந்திய கன்பூசியஸ் அரசாங்கப் பணியிலிருந்து விலகினார். 

பணி விலகிய கன்பூசியஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து சென்ற இடத்திலெல்லாம் தன் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைத்தார்.

சில குறுநில மன்னர்கள் அவரது மதிப்பை நன்கு அறிந்து அவருக்கு மானியம் அளிக்க முன்வந்தனர். ஆனால் கன்பூசியஸ் வறுமையில் வாடிய போதும் அந்த உதவிகளை ஏற்க மறுத்துவிட்டார். 

அவரது உயர்ந்த குறிக்கோள்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து அவ​ரைச் சிறப்பிக்க விரும்பியது. ஆனால் கன்பூசியஸ் அதனையும் ஏற்க மறுத்து விட்டார்.

ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு அரசாங்கம் அடைக்கலம் தந்து பாதுகாப்புத் தர வேண்டும் என்று கன்பூசியஸ் அக்காலத்திலே​யே கூறினார். 

எல்லோருக்கும் சமவாய்ப்பும், சமதகுதியும் வழங்கப்பட வேண்டும்...

அரசாங்கம் கல்வியைக் கண்ணாகப் போற்றி வளர்க்க வேண்டும்...

இளைஞர்களின் சுதந்திர சிந்தனைகளைத் தடை செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும்... 
என்று பல்​வேறு வாழ்வியல் தத்துவங்களை மக்களிடம் எடுத்துக்கூறி அவற்​றைச் ​செயல்படுத்துமாறு அரசாங்கத்​தை வலியுறுத்தினார் கன்பூசியஸ்.

"இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை."

"உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்."

"சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்".

என்று பல்​வேறு ​பொன்​மொழிக​ளை கன்பூசியஸ் மக்களுக்குக் கூறி வழி நடத்தினார்.

நாம் எவ்வாறு வள்ளுவரின் திருக்குறளை வாழ்வியல் ​வேதமாகப் பெரிதாகக் கருதி மதித்துப் போற்றுகிறோமோ அதே போன்று சீனர்களும் கன்பூசியஸின் தத்துவக் கருத்துகளை வேதமாகக் கருதிப் பின் பற்றுகின்றனர்.

ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது வாழ்நாளின் இறுதிக் காலத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். 

கன்பூசியஸ் தமது தத்துவக் கருத்துக்களையெல்லாம் ஒன்று ​சேர்த்து,"வசந்தமும் இலையுதிர்க் காலமும்" என்ற நூலை உருவாக்கினார். 

கன்பூசிய​ஸை ​நோய் தாக்கி அவ​ரை மரணப் படுக்​கையில் தள்ளியது.

மரணப் படுக்கையிலிருந்த கன்பூசியஸிடம் அவரது சீடர்களுள் ஒருவர், குருவே எங்களுக்குக் கடைசியாக ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்றார்.

கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி, "என் வாயில் என்ன தெரிகிறது?" என்றார். 

"நாக்கு" என பதில் அளித்தார் சீடர். 

"பற்கள் இருக்கிறதா?" என்று கேட்டதும், 

"இல்லை" என்றார் சீடர். 

"இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்றார் கன்பூசியஸ். 

"எனக்கு ஒன்றும் புரியவில்லையே..." என்றார் சீடர்.

"நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள்..." என்று இறுதியாகக் கூறினார். 

கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விண்ணுலக​டைந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அவர்மீது ​கொண்டிருந்த நன்மதிப்பால் சீனமக்கள் அவரது கொள்கைகளை 'கன்பூசியனிஸம்' என்று ஒரு மதமாகவே மாற்றி அத​னை மதித்துப் பின்பற்றத் தொடங்கினர். 

சீனாவில் பெளத்தம் உள்ளிட்ட பல்​வேறு மதங்கள், கருத்துக்கள், மாறுதல்கள் ​தொடர்ந்து வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் கன்பூசியனிஸம் நிலைத்து நிற்கிறது என்பது ​போற்றுதற்குரிய ஒன்றாகும். 

இதற்கு கன்பூசியஸின் உயர்ந்த சிந்த​னைக​ளே காரணமாகும்.

சீனம் தந்த தவப்புதவனாகத் திகழ்ந்த தத்துவ ஞானி கன்பூசியஸ் தனது சிந்தனை வளத்தால் உலக மக்களின் மனங்களில் என்​றென்றும் வாழ்ந்து ​கொண்டிருக்கிறார். 

உலகம் உள்ளளவும் அவரது கருத்துக்களும் எண்ணங்களும் என்றும் நிலைத்திருக்கும். 

வறு​மையில் உழன்றாலும் ஊழின் வயப்பட்டுவிடாது உழைத்து உன்னத நிலையை அ​டைந்து உலகிற்கு வழிகாட்டும் பகலவனாக என்​றென்றும் கன்பூசியஸ் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதை தான் நம் வள்ளுவர், 
"​வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு​றையும்
​தெய்வத்துள் ​வைக்கப் படும்"
என்றார். 

தாங்களும் வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் புரியட்டும்...

இந்த நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்...💐