Friday, May 22, 2015

ஒன்று நடந்தே தீரும் என்றால், அதை மாற்ற யாராலும் முடியாது.

எனக்கு எல்லாம் தெரியும்; என்னால் முடியாததே இல்லை. நான் நினைத்தால்...' என்ற எண்ணம், பலருக்கு உண்டு. அவர்கள், ஒரு நிமிடம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும்... இந்த பூமி, எத்தகைய கொம்பாதி கொம்பர்களை எல்லாம் பார்த்துள்ளது... இதில், நாம் எந்த மூலைக்கு... என்பது!

வேதங்களில் வல்லவன்; அஷ்ட திக் கஜங்களோடு (திசையானைகள்) பொருந்தியவன், கயிலை மலையையே அசைத்துப் பார்த்தவன் என்றெல்லாம் பெருமை பெற்றவன் ராவணன். அவனிடம் நாரதர், 'ராவணா... தசரதனுக்கும், கோசலைக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளையால் தான், உனக்கு மரணம் வரும்...' என்றார்.

இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்த ராவணன், 'திருமணம் ஆனால் தானே பிள்ளை பிறக்கும்...அத்திருமணத்தையே நிறுத்தி விடுகிறேன்...' என்றான்.
இவ்விஷயத்தை கோசலையின் தந்தையிடம் கூறினார் நாரதர்.
அதன் காரணமாக, நடுக்கடலில் திருமணத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டு, மணமக்களை தனித்தனி கப்பலில் தங்க வைத்தனர்.

இதை அறிந்த ராவணன், கோசலையை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, திமிங்கிலத்திடம் தந்து, 'நான் கேட்கும் போது இப்பெட்டியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்...' என, உத்தரவிட்டான்.

அதன்பின், கடலில் மிதந்து கொண்டிருந்த இரு கப்பல்களையும் உடைத்து, மரணத்தை வென்று விட்ட பெருமிதத்தோடு நாடு திரும்பினான் ராவணன். அதேசமயம், கப்பல் உடைந்து, கடலில் தத்தளித்த தசரதர், ஒரு மரப்பலகையைப் பிடித்து நீந்தியபடி கரையை அடைந்தார்.

இந்நிலையில், கோசலை இருந்த பெட்டியை வைத்திருந்த திமிங்கிலத்திற்கும், வேறொரு திமிங்கிலத்திற்கும் சண்டை வந்தது. அதனால், பெட்டியைக் கரையில் வைத்து விட்டு, சண்டையிடத் துவங்கியது திமிங்கிலம்.

அச்சமயம், தசரதர் இருந்த மரப்பலகையும் அங்கே கரை ஒதுங்கியது. உடனே நாரதர், தேவர்களிடம் சென்று, 'இதுதான் சரியான நேரம், கோசலைக்கும், தசரதருக்கும் உடனே திருமணத்தை நடத்துங்கள்...' என்று கூறினார்.

அதன்படி, இருவருக்கும் திருமணம் முடிக்கப்பட்டு, அப்பெட்டியிலேயே தம்பதியை வைத்து மூடி விட்டனர். இதை அறியாமல், சண்டையிட்டு திரும்பிய திமிங்கிலம், பெட்டியை கவ்வி, கடலுக்குள் சென்றது. ராவணனின் அரண்மனைக்கு சென்ற நாரதர், 'என்ன ராவணா... திருமணத்தை நிறுத்தப் போவதாக கூறினாயே... இப்போது திருமணம் நடந்து விட்டதே...' என்றார்.

'எப்படி திருமணம் நடக்கும்... நான் தான் கோசலையை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டியிருக்கிறேனே...' என்று கூறி, திமிங்கிலத்திடம் இருந்த பெட்டியை வாங்கி, 'இதோ பாருங்கள்...' என்று சொல்லி, பெட்டியை திறந்தான். அதன் உள்ளே இருந்து, கோசலையும், தசரதரும் மணமக்களாக வெளிப்பட்டனர்.

அதிர்ச்சி அடைந்த ராவணன், அவர்களைக் கொல்ல முனைந்தான். அதைத் தடுத்து, கணவனுக்கு அறிவுரை கூறினாள் மண்டோதரி. அதை ஏற்ற ராவணனும், தம்பதியை அயோத்திக்கு அனுப்பினான். ஒன்று நடந்தே தீரும் என்றால், அதை மாற்ற யாராலும் முடியாது.