Monday, August 24, 2015

உங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா..?!

ங்கள் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?' என்றால், 'நல்ல ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருக்கேன். ரெண்டு, மூணு எக்ஸ்ட்ரா கரிக்குலர் கிளாஸ் போறாங்க. ரிச் ஃபுட். கம்ப்யூட்டர், யூடியூப்னு டெக்னாலஜியிலும் பிரில்லியன்ட். சூப்பரா இருக்காங்க!' என்பது, பெற்றோர் பலரின் பொதுவான பதிலாக இருக்கும். ஏனெனில், இதையெல்லாம்தான் 'நலம்' என்று அவர்கள் நினைக்கிறார்கள்; நம்புகிறார்கள். ஆனால், குழந்தைகளின் நலம் என்பது, இந்த வெளிப்புறக் காரணிகளையும் கடந்து, உள்ளார்ந்து நோக்க வேண்டிய ஒன்று. உடல்நலம், மனநலம், பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து என முக்கிய ஐந்து அம்சங்களில், வெளிப்பூச்சைக் கடந்து உங்கள் குழந்தையின் உண்மையான நலனை ஸ்கேன் செய்து அறிந்துகொள்ள, இங்கே ஆலோசனைகள் தருகிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்!

'பியூட்டி ஸ்லீப்' கிடைக்கிறதா உங்கள் குழந்தைக்கு?!

''தடுப்பூசியில் இருந்து தூக்கம் வரை, ஒவ்வொன்றையும் பிள்ளைகளுக்குத் தெளிவுற அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு!''

- மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இளங்கோவன், இப்படி  அடிக்கோடிட்டு ஆரம்பித்தார்...

 தாய்ப்பாலைப் போலவே, தடுப்பூசியும் குழந்தையின் பிறப்புரிமை. சிலர், 'என் குழந்தை ஆரோக்கியமா, நோய்த் தொற்றுக்கான சூழலில் இருந்து பாதுகாப்பா இருக்கு. எதுக்கு தடுப்பூசி?' என்ற அர்த்தமற்ற மனநிலையிலும், இன்னும் சிலர், தடுப்பூசி ஏதோ குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் காரணி என்பது போன்ற தவறான நம்பிக்கையிலும் இருப்பார்கள். கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளின் உயிர் காக்கும் கவசமே, தடுப்பூசி. கடந்த 2015 பிப்ரவரியுடன், போலியோ இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது என்பது நற்செய்தி. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, தடுப்பூசி முதல் புள்ளி.

 குழந்தைக்குக் குறைந்தது 9 மணி நேரத் தூக்கம், அதன் உடலின் அவசியத் தேவை. தூக்கம், நிலை 1, நிலை 2, நிலை 3 எனக் கடந்தே ஆழ்ந்த உறக்கமாகும். இடையில் குழந்தை விழித்தால், மீண்டும் அது நிலை 1-ல் இருந்து தன் தூக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படி எந்தத் தொந்தரவும் அற்ற, 9 - 12 மணி நேரத் தூக்கமான 'பியூட்டி ஸ்லீப்'பை குழந்தைக்குக் கிடைக்கச் செய்யுங்கள். இரவு 9  மணிக்கெல்லாம் தூக்கம், அதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன் குடும்பத்துடன் உணவு என்று பழக்கப்படுத்துங்கள். அதிக ரத்த ஓட்டம் செரிமானத்துக்காக வயிற்றுக்குச் சென்றால் தூக்கம் தாமதமாகும் என்பதால்... எளிதாக ஜீரணமாகக்கூடிய, கொழுப்பில்லாத இரவு உணவு அவசியம்.

 காலை உணவைக் குழந்தைகள் 'ஸ்கிப்' செய்வது, அடிப்படைத் தவறு. இரவு 9 மணிக்கு சாப்பிட்ட குழந்தை, காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளி சென்றால், பகல் 12 மணி உணவு இடைவேளை வரை, கிட்டத்தட்ட 15 மணி நேரம் அதன் வயிறு காலியாக இருக்கும். எனில், வகுப்புகளை கவனிக்கும் ஆற்றல், ஆர்வம் அதுக்கு எப்படிக் கிடைக்கும்? சோர்வு, கோபம், வயிற்றுவலி என்று அது படும் பாட்டுக்கு, பெற்றோர்தான் பொறுப்பு.

 'அல்ட்ரா சாஃப்ட்' டூத் பிரஷ், குழந்தைகளுக்கானது. ஒன்றரை வயதில் இருந்து மூன்று வயது வரை அரிசி அளவு பற்பசையும், ஐந்து வயது வரை பட்டாணி அளவு பற்பசையும் குழந்தைகளுக்குப் போதும்.

 'வெயிலுக்குக் காட்டாமல்' குழந்தை களை வளர்ப்பதால் பெருகி வருகிறது விட்டமின்-டி குறைபாடு. தினமும் ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளி வாங்க வேண்டியது உடலுக்கு  அவசியம்.

 குழந்தைக்குச் சீரான இடைவெளியில் பூச்சிமருந்து கொடுக்க வேண்டும். தூக்கத்தில் குழந்தைகள் பற்களைக் கடித் தால், வயிற்றில் பூச்சி இருக்கிறது என்பது பழைய மருத்துவக்கூறு. 'பிரக்சிஸம்' என்ற அந்தச் செயலுக்கு, குழந்தை மனதில் உள்ள விடைகிடைக்காத கேள்விகளும், குழப்பங் களும் காரணம் என்கிறது நவீன மருத்துவம். எனவே, ஒவ்வோர் இரவும் குழந்தை தெளிவுபெற்ற மனதுடன் உறங்கச் செல்ல வேண்டும். அதற்கு பெற்றோருடனான 'இன்டராக்‌ஷன்' மிக அவசியம்!''

- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் இளங்கோவன்.

''பேரன்டிங்கா, சைல்டிங்கா...''

''குழந்தையை, பெற்றோர் தாங்கள் விரும்பும்படி வளர்க்க அவர்கள் செய்யும் அல்லது தவிர்க்கும் செயல்களை, பேரன்டிங் என்கிறோம். 10, 15 வருடங்கள் முன்வரை இதுதான் எல்லா வீடுகளிலும் நடந்தது. ஆனால், இன்று பிள்ளைகள் தங்கள் விருப்பத்துக்கு பெற்றோரை நடக்க வைக் கிறார்கள். இதை நான்'சைல்டிங்' என்று கேலியாகச் சொல்வதுண்டு. இதுதான் இன்று எல்லா குடும்பங்களிலும் நடக்கிறது!''

- சுடும் உண்மைகள் அடங்கியது, மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், 'டாப்கிட்ஸ்' குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப் பகிர்ந்த விஷயங்கள்...

 குழந்தையின் கையில் கொடுத்த ஒரு பொருளை மீண்டும் வாங்குவது, எளிதான காரியமல்ல. அது பொம்மையைவிட, ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், டேப் (tab) என்று கேட்ஜட்களுக்கு இப்போது மிகப்பொருந்தும். 'இன்டர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்', 'இன்டர்நெட் கேமிங் டிஸார்டர்' என்று பிரச்னைகள் முளைத்துக் கொண்டே இருக்கும் இந்த யுகத்தில், ப்ளஸ் டூ முடிக்கும் வரை ஸ்மார்ட்ஃபோன், ` டேப்', வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டூ-வீலர் அனைத்துக்கும் குழந்தைகளுக்கு 'ஸ்ட்ரிக்ட் நோ' சொல்லுங்கள்.

 'டியூஷன்னு போறதால, சேஃப்டிக்கு நான் தான் வாங்கிக்கொடுத்தேன்' - பிள்ளையின் அடத்துக்குப் பணிந்து ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தந்துவிட்டு பெற்றோர் சொல்லும் சாக்கு இது. தகவல் பரிமாற்றத்துக்கு பேஸிக் மாடல் போன் போதும்.

 கணினியில், மொபைலில், சமையலில், அரட்டையில் பிஸியாக இருக்கும் உங்களை, குழந்தை தொந்தரவு செய்யாமல் இருக்க, 'இந்தா நீயும் ஒரு `டேப்' பிடி!', 'கார்ட்டூன் பாரு, இதோ ரிமோட்!' என்று டெக்னாலஜியை 'மாற்று பெற்றோர்' (சப்ஸ்டிட்யூட் பேரன்ட்) என ஆக்குபவர்கள் இங்கு அதிகம். அவர்களே தங்கள் குழந்தையின் கேட்ஜட் போதைக்கு, சைபர் விபரீதங்களுக்குக் காரணமான குற்றவாளிகள். தன் அம்மாவிடம் வந்து 'ரேப்னா என்னம்மா?' என்று கேட்கும் மூன்றாம் வகுப்புச் சிறுவன், அவர் திகைத்ததும், 'சரி, ஸ்பெல்லிங் சொல்லு, நான் யூடியூப்ல போட்டு பார்த்துக்குறேன்!' என்று தன் 'மாற்று பெற்றோரை'த் தேடி ஓடுகிறான். நன்மையோ, தீமையோ... ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள, 'ஸ்பெல்லிங்' மட்டும் போதும் இன்றைய குழந்தைகளுக்கு!

 குழந்தைக்கு நேரத்தைச் செலவழிக்க முடியாததை ஈடுகட்ட, பணத்தைச் செலவழிக்கிறார்கள் பலர். 'இல்லை, வார இறுதியில் குழந்தைகளைத் தவறாமல் அவுட்டிங் அழைத்துச் செல்கிறோமே!' என்கிறீர்களா? எங்கே..? மால், தியேட்டர், ஷாப்பிங், ரெஸ்டாரன்ட் என்று பொருள் சார்ந்த பொழுதுபோக்கையே அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். இதில் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, பகிர்வது, மனம்விட்டுப் பேசுவது எல்லாம் அவர்களுக்கு எங்கு கிடைக்கிறது? குடும்பத்துடன் நூலகம் சென்று, வாசிப்பின் சுவாரஸ்யத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதைப் பற்றி யோசித்ததுண்டா? 

 வளரும் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள், எண்ணங்கள், எனர்ஜி லெவல் எல்லாமே நிரம்ப இருக்கும். அதற்கெல்லாம் ஒரு பாஸிட்டிவ் வடிகால் கொடுக்கவில்லை எனில், அது நெகட்டிவ் வழியில் வெடித்துச் சிதறும். எனவே, ஆடிக் களைக்கும் விளையாட்டுப் பொழுதுகளை தினமும் கொடுங்கள்.

 'என் குழந்தையை சிறப்பா வளர்க்கணும்' என்று குழந்தையைக் காரணம் காட்டி, உங்கள் சுதந்திரத்துக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேறினீர்கள். எனில், குழந்தை பற்றிய 100% பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பது என்ன? பெற்றோரான பின்னும் டீன் ஏஜ் லைஃப் ஸ்டைலில் நீங்கள் நாட்டமிழக்காமல் இருக்க...  கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற கடிவாளம் அற்றுக் கிடக்கிறார்கள் 'நியூக்ளியர் ஃபேமிலி' குழந்தைகள்.

 'எது கேட்டாலும் கிடைக்கும்' என்ற, ஏமாற்றங்களே அறியாத வாழ்க்கையை குழந்தைகளுக்குத் தரத் துடிக்கிறீர்கள். அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் கெடுதல்களில் மற்றொன்று. தோல்விகளைக் கடந்தே வெற்றியை அடைய முடியும். எனவே, ஏமாற்றங்கள், தோல்விகள் கடந்தே வளரட்டும் குழந்தைகள்!

இனி உங்கள் வீடுகளில் 'சைல்டிங்' நிறுத்தி, 'பேரன்டிங்' ஆரம்பியுங்கள்! இது அவசியமாகச் செயல்படுத்த வேண்டிய மாற்றம்''

- அழுத்தமாகச் சொன்னர் டாக்டர் தீப்.

''கத்தக் கற்றுக்கொடுங்கள்!''

''உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பது உங்களது நம்பிக்கை மட்டுமே, உண்மையல்ல!''

- நிதர்சனம் சொன்னார் மானாமதுரை, அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாரதிப்ரியா.
 
''ஸ்கூல் பஸ் டிரைவரில் இருந்து, பக்கத்துக் கடைக்காரர் வரை உங்கள் குழந்தையின் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது முக்கியம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் `குட் டச், பேட் டச்' சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை யாரேனும் 'பேட் டச்' செய்தால், உரக்கக் கத்தி அருகில் உள்ளவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். குறிப்பிட்ட நபரிடம் குழந்தை பேச, பழக மறுத்தால், தனிமையில் பக்குவமாக அதற்கான காரணத்தை கேட்டறியுங்கள்.

புதியவர்கள் யாரிடமும் பேசவோ, அவர்கள் தரும் பொருட்களை வாங்கவோ கூடவே கூடாதென்று வலியுறுத்திச் சொல்லுங்கள். வீட்டு விலாசம், பெற்றோர் தொலைபேசி எண்களுடன், இப்போது பரவலாகிவரும் 'குடும்ப பாஸ்வேர்ட்' ஒன்றையும் உருவாக்கி அவர்களிடம் சொல்லி வையுங்கள். 'அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க' என்று யாராவது அழைத்தால், 'பாஸ்வேர்டு சொல்லுங்க' என்று முதலில் கேட்கச் சொல்லுங்கள். அம்மாவிடம் குழந்தை அனைத்தையும் பகிரும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்'' என்று எச்சரித்தார் பாரதிப்ரியா.

''குழந்தையின் திறனுக்கேற்ற சிலபஸ்!''

''கல்வி விஷயத்தில் பெற்றோர் கொண் டிருப்பது பெரும்பாலும் பேராசையே!''

- படிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் சிரமங்கள் பற்றிச் சொன்னார் டாக்டர் விவேகானந்தர். ஓய்வுபெற்ற பேராசிரி யரான இவர் மதுரை, 'எலீட்' போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய கௌரவ இயக்குநர்.

''மாநில அரசின் 'சமச்சீர்' கல்வித்திட்டம், எளிமையானது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ கல்வித்திட்டங்கள் சிரமமானவை. பெற்றோர் 'பிலோ ஆவரேஜ்' குழந்தையை, தங்களின் ஆசைக்காக, சொஸைட்டல் ஸ்டேட்டஸுக்காக சென்ட்ரல் போர்டு சிலபஸில் சேர்க்கும்போது, அவர்களின் திறனுக்கு மீறிய அந்தச் சுமையால் மதிப்பெண் களுடன் தன்னம்பிக்கையையும் இழக்கும் மாணவர்கள் பலர். எனவே, குழந்தையின் ஆற்றலுக்கேற்ற சிலபஸை தேர்ந்தெடுங்கள்.

ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை 'ஹை ஜம்ப்' செய்து பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்துக்குச் செல்வது, கல்லூரிகளில் 'பிளேஸ்மென்ட் செல்' என்ற பெயரில், பாடம் நடத்த வேண்டிய வகுப்புகளை பலிகொடுத்து, ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் தேர்வாகும் டெக்னிக்குகளை சொல்லிக் கொடுப்பது... இப்படிக் குறுக்குவழிகள் பெருகிப்போய்க் கிடக்கிறது இன்றைய கல்விச் சாலை. 'உணவு வேண்டாம்... விட்டமின் டேப்லட் சாப்பிட்டுக் கொள்ளலாம்' எனும் இந்த கொள்கைக்கு உங்கள் பிள்ளையையும் பலி கொடுக்காமல், பாடங்களைப் புரிந்து, முழுமையாகப் படிக்கும் பண்பை அவர்களிடம் வளர்த்தெடுங்கள். அப்போதுதான், பணியில் ஏணி கிட்டும்.

படிப்பே வரவில்லையா? பரவாயில்லை. விளையாட்டு, அனிமேஷன், கிராஃபிக்ஸ், மீடியா, கேட்டரிங், ஃபேஷன் என்று அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அவர்களை மடை
மாற்றுங்கள். எட்டாம் வகுப்பு ஃபெயிலானவர்தான், சச்சின் டெண்டுல்கர்!''

- குருவி தலையில் பனங்காய் வைக்கும் கல்வி நம்பிக்கைகளை களைந்து பேசினார், விவேகானந்தர்.

இப்போது சொல்லுங்கள், உங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா?!