Saturday, June 15, 2013

இணைந்து திட்டமிடுங்கள் !

இரண்டு வருடங்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து முப்பது வயது பெண்மணி ஒருவர் என்னை சந்தித்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை அவர் இருந்தது அமெரிக்காவில். அவர் கணவருக்கு அங்கே ஐ.டி. கம்பெனியில் வேலை. இரு குழந்தைகள். குதூகலமாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவர் குடும்பம்.

திடீரென அவர் கணவர் இறந்துபோக, அந்தப் பெண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கணவர் சம்பாதித்தப் பணம் எந்த வங்கியில் உள்ளது, யாரிடம் எவ்வளவு பணம் தந்திருக்கிறார், இன்ஷூரன்ஸ் ஏதாவது உள்ளதா... இந்த மாதிரி எந்த கேள்வியையும் அந்தப் பெண்மணி தன் கணவரிடம் கேட்டதில்லையாம். அவருக்குத் தெரிந்ததெல்லாம், பெங்களூருவில் தன் கணவர் வாங்கிய ஒரு வீடு மட்டுமே.

ஒரே நாளில் அவருக்கு உலகமே தலைகீழாக மாறிப்போனது. ஆறுதல் சொல்லக்கூட பக்கத்தில் யாருமில்லை. உடன் வேலை பார்த்த அன்பர்கள் அனைவரும் கூடி அவருக்கு முறைப்படி கிடைக்கவேண்டியதை எல்லாம் கிடைக்கச் செய்தனர். அவற்றில் முக்கியமானது, வேலை செய்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டாலர் பணம் டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்தது.

அந்தப் பணத்தை ஆதாரமாக வைத்துதான் இந்தியா விற்கு குடிபெயர்ந்து, இன்று தனது குழந்தைகளுடன் ஒரு புதிய வாழ்வை நடத்தி வருகிறார் அந்தப் பெண்மணி. தன் குடும்ப நிதி நிர்வாகத்தைப் பற்றி ஆரம்பம் தொட்டு அக்கறை எடுத்துக்கொள்ளாததே தான் செய்த பெரிய தவறு என்று சொல்லி வருத்தப்பட்டார் அந்தப் பெண்.

இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். கும்பகோணத்தில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண்மணி ஒருவர். அவருக்குத் திருமணமாகி, சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவந்த அவர் கணவருடன் செட்டிலாகி விட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கொடிய விபத்தில் அவரது கணவர் திடீரென இறந்துவிட, அவருக்கு இன்ஷூரன்ஸ் செட்டில்மென்ட் தொகையாக 50 லட்சம் ரூபாய் கிடைத்தது.

அந்தப் பெண்மணிக்கு இந்தப் பணம்தான் வாழ்வாதாரம். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கப் புறப்பட்ட அந்தப் பெண்ணுக்கு திடீரென்று குழப்பம். தனக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்த பணம் பாவப் பணம். தன் கணவன் இறந்ததினால்தானே கிடைத்தது? அந்தப் பாவப் பணம் தனக்கு வேண்டவேவேண்டாம் என்று முடிவு செய்து, தனது சொந்தபந்தங்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார்.

இப்போது வேறு எந்த ஆதரவும் இல்லாமல், ஒரு சிறிய வேலை செய்துகொண்டு தனது வாழ்வை நடத்தி வருகிறார். நிதி சார்ந்த விஷயங்களை அவர் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், அந்த இன்ஷூரன்ஸ் பணத்தைப் பாவப்பணம் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார்.

ஆக, எதிர்கால வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க நீங்கள் என்ன திட்டம் போட்டாலும், அதை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் (கணவன்/மனைவி) சேர்ந்து செய்தால், பிற்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப் பதற்கும், உங்களது வாழ்க்கைத் துணை தனது சொந்தக்காலில் நிற்பதற்கும் ஒவ்வொரு கணவன் - மனைவி கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.  

1. கணவன் - மனைவி இருவருக்கும் பான் கார்டு, தேர்தல் ஆணைய அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. ஒவ்வொரு வங்கி அல்லது நிதி சார்ந்த கணக்கையும் கணவன் - மனைவி இருவரின் பெயரிலும், அதேசமயத்தில் எந்த ஒரு நபர் வேண்டுமானாலும் 'ஆபரேட்' செய்யும்படி அமைத்துக்கொள்ளுங்கள். வருமான வரி அல்லது வேறு காரணங்களுக்காக தனித்தனியாக வங்கி மற்றும் நிதி சார்ந்த கணக்குகளை வைத்துக்கொண்டால், ஒருவர் மற்றொருவரை நாமினியாக தேர்வு செய்துகொள்ளலாம். ஒருவர் கணக்கை மற்றொருவர் பார்க்கும்படி இருப்பதும் முக்கியம்.  யூஸர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டை தயவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்வது அவசியம்.  

3. உங்கள் வாழ்க்கைத் துணை, ஹவுஸ் ஒய்ஃப் அல்லது ஹவுஸ் ஹஸ்பென்ட் என்றால், அவரை வங்கிக் கணக்குகள் போன்ற நிதி சார்ந்த செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். வங்கிக்குச் சென்று காசோலையை டெபாசிட் செய்வது, ஏ.டி.எம்.-க்கு சென்று பணத்தை எடுத்து வருவது போன்ற வேலைகளைச் செய்ய ஊக்குவியுங்கள்!

4. இன்றைய இன்டர்நெட் உலகில், கணக்குகளுக்கு பேப்பர் ஸ்டேட்மென்ட் வாங்குவது பாவம் என்றாகிவிட்டது. ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது, நமது வாழ்க்கைத் துணை எங்கு, எதில் கணக்கு வைத்திருக்கிறார் என்பது தெரியவேண்டும். அதற்கெல்லாம் ஆரம்பம் வங்கிக் கணக்கு தான். ஆகவே, வங்கி கணக்கிற்கு பேப்பர் ஸ்டேட்மென்ட் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு நிதி சார்ந்த முடிவுகளையும் கணவன் - மனைவி என இருவரும் சேர்ந்து எடுங்கள் - அது வீட்டுக் கடனாக இருக்கட்டும் அல்லது டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆகட்டும், இருவரும் இணைந்தே செய்யுங்கள்.

6. சிலர் சொந்தபந்தங்களுக்கு / நண்பர் களுக்கு எழுத்துமூலமாக அல்லாமல், வெறும் வாய்வார்த்தையாகப் பேசி கடன் தருவார்கள். அப்படி ஏதேனும் தந்தால், அதை ஒரு டயரியில் தேதிவாரியாக எழுதி வைத்துவிடுவது அவசியம். பிராமிஸரி நோட்டின் அடிப்படையில் கடன் ஏதேனும் தந்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அவற்றிற்கு நகல் எடுத்து ஃபைலில் வையுங்கள்.

7. மியூச்சுவல் ஃபண்ட்/ பங்குகள்/ ஆர்.டி/ டெபாசிட் போன்ற முதலீடுகளை இருவர் பெயரிலும் தனித்தனியாகவோ (50:50) அல்லது ஜாயின்டாகவோ வைத்துக்கொள்ளுங்கள். அந்த முதலீடு பற்றிய ஆவணங்களை ஃபைல் செய்வதோடு, உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரிவியுங்கள்.  

8. உங்களது நிதி ஆலோசகர், ஆடிட்டர், வங்கி மேலாளர் மற்றும் நிதி சம்பந்தமான தொடர்புகளின் முகவரி மற்றும் எண்களை வாழ்க்கைத் துணைக்கு தெரிவியுங்கள்.

9. வங்கி, இ-மெயில் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளுக்கு உண்டான யூஸர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை இணையதள முகவரியோடு சேர்த்து ஒரு மைக்ரோசாஃப்ட் வேர்டு அல்லது எக்ஸெல் டாக்குமென்டில் பதிவு செய்துவையுங்கள். அந்த டாக்குமென்டை உங்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைத் துணை மட்டும் பார்க்கிற மாதிரியான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

10. உங்கள் முதலீடு, இன்ஷூரன்ஸ், வங்கி மற்றும் நிதி சார்ந்த அனைத்து பேப்பர் டாக்குமென்டுகளை யும் ஒரே ஃபைலில் வைத்திருப்பதுபோல, கம்ப்யூட்டரிலும் ஒரே ஃபோல்டரில் போட்டு வையுங்கள். இதை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தெரியப்படுத்துவதோடு, அதை அடிக்கடி உபயோகிக்க ஊக்குவியுங்கள்.

11. இருவரும் தனித்தனியாக கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வது நல்லது. இருவருக்கும் சிபிலில் கிரெடிட் ஸ்கோர் தனித்தனியாக பதிவாகும். அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கடன் வாங்கச் செல்லும்போது இது மிக உதவியாக இருக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது, உங்களது பார்ட்னருக்கு இது நிச்சயம் உதவும்.

12. வீடு வாங்கும்போது இருவரும் ஜாயின்டாக வாங்குவது நல்லது. இருவரும் தனித்தனியே வரிச் சலுகை (டாக்ஸ் கிரெடிட்) பெறலாம். தவிர, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வீடு பற்றிய அறிவும் கிடைக்கும்.

ஆக மொத்தத்தில், கணவனும் மனைவியும் இணைந்து செய்யும் நிதி தொடர்பான விஷயங்களை செய்யும்போது அது சரியான முதலீடாக அமைவதோடு, ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் எப்போதும் பயன்படும்!