வெல்லிங்டன் : அளவுக்கு அதிகமாக டிவி பார்க்கும் குழந்தைகள், அதிகப்படியான   குற்றச் செயல்களில் ஈடுபடவும், வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில் ஈடுபடவும்   வாய்ப்புக்கள் அதிகம் என நியூசிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஓடாகோ பல்கலைக்கழகம், 1970 களில் பிறந்த   5 முதல் 15 வயது வரையிலான 1000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்காண்டு வந்தது.   இவர்கள் 26 வயதுடையவரைப் போன்று செயல்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பது   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பீடியாட்ரிக்ஸ் என்ற பத்திரிக்கை   வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், குழந்தை பருவத்தில் டிவிக்கு   அடிமையானவர்களுக்கும், இளம் வயதில் சமூக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும்   நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அதிகளவில் டிவி பார்க்கும்   குழந்தைகள் தங்களின் வளரும் இளம் பருவத்தில் அதிக குற்றங்கள் செய்கின்றனர்   எனவும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை   ஒவ்வொரு மணிக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வில்   கண்டறியப்பட்டுள்ளதாக கட்டுரையை எழுதிய இணை எழுத்தாளர் பாப் ஹான்கோக்ஸ்   தெரிவித்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக டிவி பார்ப்பவர்களுக்கும்   கொடூரமான விசித்திர நடவடிக்கைகள் மற்றும் எதிர்மறையான உணர்ச்சிகளை   வெளிப்படுத்தும் திறனை அதிகம் கொண்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும்   ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இத்தகையவர்களிடம் புத்திகூர்மை, சமூக   பார்வை மற்றும் பெற்றோருக்கு கட்டுபடுதல் உள்ளிட்டவைகள் எதிர்மறையாக   இருக்கும் என தெரிய வந்துள்ளது. அதிகபடியாக டிவி பார்க்கும் பழக்கமே சமூக   குற்றங்களை அதிகரிக்கவும், இளம் குற்றவாளிகள் உருவாவதற்கும் காரணமாக   இருப்பதாகவும், டிவி பார்க்கும் பழக்கத்தை குறைத்தாலே சமூக குற்றங்கள்   குறையும் எனவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. குழந்தைகள் ஒரு நாளைக்கு   ஒன்று முதல் 2 மணி நேரம் டிவி பார்ப்பதே உகந்தது என அமெரிக்க கழகத்திற்கு   பீடியாட்ரிக்ஸ் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 
சமூக விரோதமான   செயல்களை டிவி மூலமாகவே குழந்தைகள் கற்றுக் கொள்வதாகவும், அதிகளவில்   உணர்ச்சி வசப்பட வைப்பது போன்ற பழக்கங்களையும் அவர்கள் டிவி மூலமாகவே   கற்றுக் கொள்ளவதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்கள் சமூக   ஒழுக்கம் பாதித்தல், கீழ்படிதல் இல்லாமை, கல்வி தரம் குறைவது, அதனால்   வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட விளைவுகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1970 ம் ஆண்டுகளின் பிற்பகுதி மற்றும் 1980   ம் ஆண்டுகளின் முற்பகுதியில் பிறந்த குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில்   இந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்துள்ளது. இருவரும் காலங்களில்   கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடு தனிமனித   வாழ்வை எவ்விதம் பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.   கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் விளையாடுவோரிடம் வன்முறை குணமும்,   துப்பாக்கியால் சுடும் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் நியூசிலாந்து வானொலி   ஒன்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
(Source: Dinamalar 19/2/13)
  
 

 
