மனதின் அடிஆழத்தில் ஈரம்
கடும்  மழை. ஒருவர் மருத்துவமனை செல்ல  வேண்டும். எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன.  ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும்  இதுதான் தருணம் என்று முப்பது  ரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார். 
      
  வேறு வழியின்றி அந்த  மனிதர் ஆட்டோவில் ஏறி வேறு ஒரு  இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக  ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்.
      
   Receptionist பாட்டியின் பெயரைக் கேட்க' இவர்.....இது  என்  பாட்டி இல்லை. தெருவில் மயங்கிக்கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து  வந்தேன் " என்றார்.
  
  ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு  நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று  வேதனை அடைகிறார். வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி  ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி  விட்டுப் பணம் வாங்க மறுத்து  விடுகிறார். 
  
  மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.  
  
  1.சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ  அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்
      
  2.தானும் மனிதனாக நடந்து கொள்ள  வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது  நிலை. 
  
  3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப்  படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை. 
      
  ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும்  படிப்படியாகக் காணப்படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம்  ஏற்படுகிறது. 
  
  எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே  செய்கிறது.ஆனால் மனதின் அடிஆழத்தில்  உள்ளது.
      
  ஆழ் துளை [borewell]  மூலம் ஈரத்தை  வெளிக்  கொணர வேண்டியுள்ளது.  இந்த borewell போடும் பணியினைச் செய்வது  தான் நமது பெரியோரின் அறிவுரைகள்,  நன்னெறிப் பாட வகுப்புகள் முதலியன.  குழந்தைகளின் உள்ளத்தில் ஈரத்தை வற்ற விடாமல்  பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
 

 
