Saturday, February 23, 2013

'பியர்லெஸ் அட் வொர்க்’ - அச்சம் தவிர் !

வாரத்தில் நீங்கள் அதிக நேரத்தை ஆக்டிவாய்ச் செலவிடும் இடம் எது என்று கேட்டால், வேலைக்குச் செல்லும் அனைவரும் சொல்லும் பதில் என்ன? அலுவலகம் என்பதாகத்தானே இருக்கும்! இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் எத்தனை காரியத்தைப் பயத்துடன்  செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயத்தைப் போக்குவது எப்படி? ஃபேஸ்புக் ஜெனரேஷனாகிய நமக்குப் பணியிடத்தில் பயமில்லாமல் செயல்படுவது எப்படி என்று சொல்லித்தருவதுதான் மைக்கேல் கரோல் எழுதிய 'பியர்லெஸ் அட் வொர்க்' எனும் புத்தகம்.
பயமற்ற தைரியம் நிறைந்த கோழைத்தனத்தை தூக்கி எறியக்கூடிய திறமையை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றால், பின்வரும் வாழ்க்கையின் கடுமையான நிஜங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.


மனிதனாய் பிறந்த நாம் துன்பங்களைச் சந்தித்தேயாகவேண்டும் - சில சமயம் தாங்கமுடியாத அளவிற்குக்கூட!


எதுவேண்டுமென்றாலும் எப்போதுவேண்டுமென்றாலும் நடக்கலாம்!


நாமெல்லாம் தனி ஆட்கள் - தனியாகப் பிறக்கின்றோம்! தனியாகத்தான் இறக்கின்றோம்!


யாரும் எதுவும் நம்மை வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற முடியாது!


நாம் இறக்கப்போகின்றோம் - வெகுவிரைவில்!


நம்முடைய இறப்பை 99.99 சதவிகித உலகம் கண்டுகொள்ளப்போவதில்லை!


நம் இறப்பைக் கண்டுகொள்பவர்களும் கூட நம்மை மறந்து போகத்தான் செய்வார்கள்! அடிக்கடி!


இதை நினைத்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா? அப்புறம் எதற்கு பயமும் கோழைத்தனமும்? நெஞ்சை நிமிர்த்தி பிரச்னைகளை

எதிர்கொள்ளவேண்டியதுதானே என்று அதிரடியாக ஆரம்பிக்கின்றார் மைக்கேல்.


ஒருவன் காட்டிற்குள் இருக்கும் வெகுநாட்களாக நிறுத்தப்பட்ட கல் குவாரி ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தான். புலி ஒன்று அவனைத் துரத்தியது. ஒரு காட்டுச் செடியின் கொடியைப் பிடித்து தொங்கி மலையில் ஓரிடத்தில் இருந்து சற்று உயரமான இடத்துக்குப் போனான். மீண்டும் மற்றொரு கொடியைப் பிடித்து அடுத்த உயரத்துக்குப் போனான். புலி அவனை நோக்கி கீழிருந்து மேல் வந்துகொண்டிருந்தது.  மூன்றாவது உயரத்தை அடையும்போது மேலிருந்து ஒரு புலி நாக்கை உதட்டின் மேல் தடவிக் கொண்டு அவனை நோக்கி வருவதைப் பார்த்தான். இரண்டு புலிகளுக்கு நடுவே அவன்.

சிக்கினாயடா என நினைக்கும்போது அங்கே ஓடியாடிக்கொண்டிருந்த இரண்டு முயல்களைப் பார்த்தான். இரண்டும் காட்டில் இருந்த ஸ்ட்ராபெரி பழத்தை, விளையாண்டுகொண்டே தின்றுகொண்டிருந்தது. இரண்டு புலிகள் வந்துகொண்டிருப்பதைப் பற்றி கவலையே இல்லாமல். இதைப் பார்த்த பின்னர் அவனும் எப்படியும் சாகப்போகின்றோம். நாமும் காட்டிலுள்ள பழுத்த ஸ்ட்ராபெரியை சாப்பிடவாவது செய்வோம் என்று சாப்பிட ஆரம்பித்தான். அதன் சுவை அவன் வாழ்நாளில் அறியாததாய் இருந்தது. இந்தக் கதையின் இறுதியில் அவன் புலிக்குப் பலியானானா என்பது கேள்வியில்லை. முயல்களைப்போல் எப்படி சூழ்நிலையை ரசித்தான் என்பதுதான் முக்கியம். எப்படியும் பலியாவது என்றால் அட்லீஸ்ட் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டுவிட்டாவது போவதுதானே சிறந்தது! என்ற குட்டிக்கதையுடன் புத்தகத்தை நகர்த்துகின்றார் ஆசிரியர்.


பயம் என்பது உருவமில்லாதது. உருவமில்லாத ஒன்றை எதிர்கொள்வது என்பது மிகச் சிரமமான காரியம்தானே! ஒரு முக்கிய அப்பாயின்மென்டை மிஸ் பண்ணும்போதோ, உங்களுக்கு கேன்சர் என்று டாக்டர் சொல்லும்போதோ, நீங்கள் பிரியம் வைத்திருக்கும் பெண் உங்கள் நண்பனை காதலிப்பது தெரியும்போதோ உங்கள் உலகமே ஸ்தம்பித்துப் போவதைப்போல் தோன்றுவது உருவமில்லாத இந்தப் பயத்தினால்தான் என்று அருமையான எடுத்துக்காட்டை கூறுகின்றார் ஆசிரியர்.


புத்த மதத்தின் போதனைகளை பெரும்பாலான அலுவலகச் சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கும் ஆசிரியர், புத்தமத போதனைகளை முழுவதுமாக அறிந்தவராக இருக்கிறார். டெக்னாலஜி நம் கையில் இருக்கும் போது உலகில் நமக்கு எல்லா விஷயங்களிலும் கன்ட்ரோல் இருக்கின்றது என்பதை ஆணித்தரமாக நம்புவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. ஸ்விட்சை தட்டினால் பைக் ஸ்டார்ட் ஆவதில் இருந்து ஸ்பீடு டயல் எண்ணை அழுத்தி அடுத்த சில நொடிகளில் அடுத்த முனையில் ஹலோ என்பது கேட்பது வரை டெக்னாலஜி நம்மை உறுதியான பல செயல்பாடுகளிலேயே திளைக்க வைக்க முயல்கின்றது. இதனாலேயே வாழ்க்கையில் எதிர்பார்ப்பது நடக்காமல் போகும்போது மிகவும் திகைத்துப் போகின்றோம் என்கின்றார் ஆசிரியர்.


அதிமுக்கியமாக ஆசிரியர் வலியுறுத்துவது உங்கள் மனது விரும்பும் விஷயத்தையும், உங்கள் உண்மை சொரூபத்தையும் நீண்ட நாளைக்கு மறைத்து வைக்க முயற்சிக்காதீர்கள் என்பதைத்தான். சிறிது சிறிதாகவாவது உங்கள் உண்மை சொரூபத்தையும், ஆசையை பூர்த்தி செய்யும் செயல்களையும் செய்துகொண்டே வாருங்கள் என்கின்றார்.


அலுவலகத்தில் பயமில்லாமல் இரு, பயமில்லாமல் பார், பயமில்லாமல் வேலை செய் என்ற மூன்று செயல்களையும் உங்கள் கொள்கையாய் கடைப்பிடியுங் கள் என்கின்றார் மைக்கேல். இதில் முக்கியமான ஒரு பெண்ணின் மறக்க முடியாத கதையைச் சொல்கின்றார் ஆசிரியர். டிரக் அடிக்ஷனில் ஐந்து குழந்தையைக் கொடுத்துவிட்டு இறந்துபோன கணவன், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன குடும்பத்தினர், ஒரு குழந்தைக்கு தீராத நோய் போன்ற பல பிரச்னைகளை கொண்டிருந்தபோதும், எப்போதும் சிரித்த முகத்துடனும் சீரிய அறிவுடனும் செயல்பட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஆசிரியர் எப்படி இவ்வாறு இருக்க முடிகின்றது என்று கேட்டிருக்கின்றார்.


அதற்கு அந்தப் பெண்மணி, கணவன் இல்லாவிட்டாலும் அன்பு செய்ய ஐந்து குழந்தைகள் எனக்கு இருந்தது. ஆனால், என் கனவு வாழ்க்கை முழுமையாகச் சிதைக்கப் பட்டது. வீடு, வாசல்,  உணவு இல்லாமல் குழந்தைகள் சீரழிந்தன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்ந்தோம். அங்கேதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. கனவுகள் தகர்ந்து என் மேல் விழுந்து அழுத்தியபோதும் வாழ்க்கையை ஓட்ட எதையாவது நிச்சயம் செய்தே ஆகவேண்டும் என்பதுதான் அது. அதனாலேயே அங்கே இருப்பவர்களுக்கெல்லாம் சிறுசிறு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தேன். பின் எனக்கென்று ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தேன். அப்போது அந்த ஆசிரமத்தில் இங்கே வேலைக்கு வருகின்றீர்களா என்றார்கள். பின்னர் அங்கேயே நான் மேனேஜராக பதவி உயர்வை அடைந்தேன்.


அதெல்லாம் சரி, எப்படி இவ்வளவு ஆக்டிவாகவும் சிரிப்புடனும் இருக்கிறீர்கள் என்று கேட்டாராம் ஆசிரியர். அதற்கு அந்தப் பெண் எனக்கு பயம் என்பதே இல்லை. அதனால்தான் என்று சரளமாகச் சொன்னாளாம்.


இறுதியாக ஆசிரியர் சொல்வது சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படுவதைத்தான். உங்கள் அலுவலகம் இருக்கும் ரோடில் காலை பத்து மணிக்குப் போகின்றீர்கள்.  நெரிசலான நேரம். பயத்துடன் சர்வ ஜாக்கிரதையாகச் செல்கின்றீர் கள். சாலையில் செல்லும் அனைவருமே அதே அளவு பயம் கலந்த ஜாக்கிரதை உணர்வுடன் செல்கின்றார்கள். அதே உங்கள் அலுவலகத்தில் ஒரு நாள் லேட் நைட் வரை வேலை செய்கின்றீர் கள். இரவு 11 மணிக்கு ரோட்டிற்கு வருகின்றீர்கள். ரோடு ஃப்ரீயாக இருக்கும். சர்வசகஜமாகப் பயமில்லாமல் ரோட்டில் செல்வீர்கள்! இல்லையா? அந்த நேரத்தில் சாலையில் செல்பவர்களும் அதேபோல் பயம் குறைந்து கேஷ§வலாகச் செல்வார்கள். அதேபோல்தான் வாழ்க்கையும். பயம் என்பது சூழல் சார்ந்தது.


சூழலைப் பிரதிபலிப்பதைப்போல் நடந்து கொள்ளுங்கள். எல்லோரும் பயப்படும் வேளையில் அதே அளவு பயத்துடனும், தைரியத்துடன் செயல்படும்போது அதே அளவு தைரியத்துடன் செயல்படுவதுமே நல்ல ஸ்ட்ராட்டஜியாக அமையும் என்கின்றார் ஆசிரியர்.


கடினமான அலுவலகச் சூழ்நிலையில் வேலையில் இருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

- நாணயம் டீம்