Monday, December 27, 2010

ஜெரால்டு செலன்ட் - Gerald Celente - கருநாக்கு!

ஜெரால்டு செலன்ட் - Gerald Celente -  கருநாக்கு!

2012-ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என்று சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி தீயாகப் பரவியது. அதைப் பற்றி ஒரு படம்கூட எடுத்தார்கள். ஆனால் அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல இன்னொரு குண்டை அமெரிக்கா மீது தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெரால்டு செலன்ட்(Gerald Celente) என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநர். அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன்பாக அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்...

அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரி ஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான் தங்கும்; தானியம் தங்காது' என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டு சொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும். அவர் ஏதாவது சொல்லாமல் இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்! அந்த அளவுக்கு மனுஷனுக்கு கருநாக்கு! அந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!

கருநாக்கு ஜெரால்ட் ஆரூடம் சொன்ன சில விஷயங்களை முதலில் பார்க்கலாம்... 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகும் என்றார். அதைப்போலவே உடைந்ததும் சுக்கு நூறல்ல, ஆயிரம் ஆனதும் அனைவரும் அறிந்ததே! அடுத்து 1987-ம் வருடம் பங்குச்சந்தை சரியும் என்று சாபமிட்டார், அதுவும் அப்படியே ஆனது! ஆசியாவில் நடந்த கரன்சி யுத்தம், சப் பிரைம் மார்ட்கேஜ் பிரச்னை என அனைத்தையும் முன்கூட்டியே சொன்ன முனிவர் (வெள்ளைக்கார!) அவர்.

இவ்வளவு பில்ட் அஃப் கொடுக்கிறீர்களே, அப்படி என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா? இதுதான் விஷயம். ''2012-ம் ஆண்டு டிசம்பருக்குள் அமெரிக்கா இன்னொரு பொருளாதார நெருக்கடியில் மாட்டும். அது 1929-ம் ஆண்டு கிரேட் டிப்ரஷனை விட பயங்கரமானதாக இருக்கும். இப்போது வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா 2012-ல் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும்! அப்போது நடக்கும் சண்டை பெரும்பாலும் உணவுக்காகத்தான் இருக்கும். வேலை இருக்காது, யாரும் வரிகட்டமாட்டார்கள். நிறைய பேர்களுக்கு வேலையில்லாமல் போகப்போவதால் கலவரம் வெடிக்கும். 2012-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்கு யாரும் கிஃப்ட் வாங்கப்போவதில்லை! அப்போது சரியான உணவு கிடைத்தால் அதுவே கிஃப்ட்தான்! டாலர் தன்னுடைய மதிப்பை 90 சதவிகிதம் வரை இழக்கும்'' என்று திகிலூட்டி இருக்கிறார் ஜெரால்டு.

மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.

இதனால் ரியல் எஸ்டேட் பாதாளத்தில் விழும். ஏற்கெனவே நிறைய பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது நாடு முழுவதும் டென்ட் நகரங்கள்தான் முளைக்கும். குற்றச்செயல்கள் தறிகெட்டு அதிகரிக்கும்'' என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஜெரால்டு.

இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல், சி.ன்.பி.சி., யு.எஸ்.. டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதி இருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்' என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இது. அமெரிக்க மார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும். இந்நிலையில் ஜெரால்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால், நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. கடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனி அமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். நம்மால் முடிந்தது அதுதான்!

 

Vikatan.com