Sunday, December 12, 2010

மாமியாரின் ஆசை‏

மாமியாரின் ஆசை

இது எப்போதும் எங்கள் வீட்டில் நடப்பதுதான். என் கணவர், அவருடைய அம்மாவை நான் எப்போதுமே சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்.

கணவர் வெளியூரில் இருக்க, பள்ளிக்குச் செல்லும் குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தபடி, என்னால் மாமியாரை எவ்வளவு கவனிக்க முடியுமோ அதற்கும் மேலே தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், இந்தப் பிரச்சினை அடிக்கடி வந்தபடியே தான் இருக்கும்.

மனதார எந்தத் தவறும் என்மேல் இல்லாதபோது, அவர் குற்றம் சொல்லி... அதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது பிரச்சினை முற்றி சண்டையில் முடிவது போல் தான் அன்றும் நடந்தது. சண்டையின் இடையே என் கணவர் கோபத்துடன் சொன்னார்.

"
எல்லாம் என்னோட தப்புடி. 'படிச்ச பொண்ணக் கட்டிக்காத... படிச்ச பொண்ணக் கட்டிக்காத'னு என் அப்பா தலையால தண்ணி குடிச்சாரு. நான் தான் உன்னையே கட்டிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப அவஸ்தைப் படறேன்..!".

நானும் மிதமிஞ்சிய கோபத்தில் கண்ணீருடன் சொன்னேன். "நானும்தான்... என் அம்மா 'இந்த சம்பந்தம் வேண்டாம்'னு சொன்னப்ப அவங்க சொல்பேச்சு கேட்டிருந்தாக்கூட நான் இப்ப இவ்ளோ கஷ்டப்பட வேண்டியதில்லையே..!".

கோபத்தில் நான் சடாரென்று உண்மையை உளறியதும், அதுவரை சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த என் கணவர் சட்டென்று அமைதியாகிப் போனார்.

முகமெல்லாம் ஒரு மாதிரி மாறிப்போய், யோசித்தபடியே திரும்பிய அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.

"
என்ன சொன்ன... உன் அம்மா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்களா..?".

எனக்கிருந்த கோபத்தில் அப்போதும் என்ன செய்கிறேன் என்பது கூட உறைக்காமல் ஆவேசமாய், 'ஆமாம்..!' என்று தலையாட்டினேன்.

மெல்லிய யோசனையுடன் திரும்பியவர் சொன்னார். "எப்பேர்ப்பட்ட பொம்பள உன் அம்மா.." என்றவர் தொடர்ந்து கிண்டலாய்ச் சொன்னார்.

"
எவ்வளவு நல்லெண்ணம் அவங்களுக்கு ... நான் நல்லா இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டிருக்காங்க... அவங்களைப் போயி நான் தப்பா நெனச்சுட்டேனே..!"..