Saturday, December 18, 2010

நம் வீட்டுத் திருமணங்களிலும் மகிழ்ச்சியை சேகரிக்கலாம்

மொய் தவிர்... மகிழ்ச்சி சேர்!

 

உறவினர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் நடைபெற்ற வித்தியாசமான திருமணத்தை நீங்களும் வார்த்தைகளில் உணருங்கள்...

அந்தத் திருமணத்தில் அழைப்பிதழ், பந்தல், பேனர், திருமண மண்டபம், மேளதாளம் என்று எதுவுமே இல்லை. மங்கள இசை சி.டி. பிளேயரில் ஒலித்தது. கூட்டத்தைக் கூட்டாமல், மணமகன் சார்பில் 10 குடும்பங்கள், மணமகள் சார்பில் 10 குடும்பங்கள் என மொத்தமே 40 பேர்தான் வந்திருந்தனர். வீட்டின் ஹாலிலேயே திருமணம் நடந்தது. வந்திருந்த அனைவருக்கும் காபி வழங்கப்பட்டது. பின் வீட்டின் முன் நின்ற பஸ்ஸில் அனைவரும் ஏறிக்கொள்ள, ஒரு அநாதை இல்லத்துக்குச் சென்றது. அங்கிருக்கும் 300 குழந்தைகளுக்கும் மணமக்கள் இனிப்பு வழங்கினர். பிறகு, அந்தக் குழந்தைகள், இல்லப் பணியாளர்கள், திருமண வீட்டினர் என அனைவருக்கும் அங்கேயே காலை உணவு வழங்கப்பட்டது. அனைவரும் மன நிறைவோடும் சந்தோஷத்தோடும் மணமக்களை வாழ்த்தினோம்!

மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடுபவர்களைக் கூப்பிட்டு பந்தி வைத்து, அவர்கள் வைத்துப் போகும் மொய்யையும், சொல்லிப் போகும் குறைகளையும் சேகரிப்பதற்குப் பதில், இதுபோன்ற குழந்தைகளின் மகிழ்ச்சியைக் சேகரிக்கலாம்தானே நம் வீட்டுத் திருமணங்களிலும்!

 

ஆசிட்... அஜாக்கிரதை... அவதி!

 

ஒரு நாள் காலையில் சமையலை முடித்து நிமிர்ந்தபோதுதான் உணர்ந்தேன்... ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த என் மூன்று வயது வாண்டிடமிருந்து வெகு நேரமாக சத்தம் எதுவும் வரவில்லை என்பதை. அவசரமாக ஓடிப் போய் பார்த்தால், தரை துடைக்கப் பயன்படுத்தும் 'ஃப்ளோர் க்ளீனர்'ஐ தரையில் கவிழ்த்து அதில் கையைக் குழைத்து விளையாடிக் கொண்டிருந் தான். பதறிய நான், சோப்பு போட்டு கைகளை நன்றாகக் கழுவிவிட்டேன். மறுநாள் கை, கால் விரல்களில் எல்லாம் அலர்ஜி ஏற்பட்டு, தோல் உரிந்து, குழந்தை வலியால் அழ, டாக்டரிடம் ஓடினேன். மருந்து, மாத்திரை, ஆயின்ட்மென்ட் கொடுத்தவர், ''வீரியமான ஆஸிட் பட்ட இடங்களை தண்ணியில கழுவினதோட வேற எந்த சிகிச்சையும் கொடுக்காம விட்டிருக்கீங்களே...'' என்று எனக்கும் டோஸ் கொடுத்தார். காயங்கள் ஆற பத்து நாட்கள் ஆனது!

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதுபோன்ற ஆசிட் பொருட்களை அவர்கள் கைக்கு எட்டாமல் வைப்பது மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள இப்படியரு விலை!

 

பர்ஸ் இல்லாமல் படி தாண்டாதே!

 

வாக்கிங் போகும்போது, பையனை ஸ்கூட்டியில் அழைத்துச் சென்று ஸ்கூலில் டிராப் பண்ணும்போது, பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் பொடிநடையாகப் போகும்போது என இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் பர்ஸை எடுத்துச் செல்ல மாட்டேன். ''கையில பணம் இல்லாம வெளியே போகாதே... அவசரத் தேவை எதுக்காச்சும் வேணும்...'' என்று அலர்ட் செய்யும் என் கணவரின் வார்த்தை களையும் கண்டுகொள்ள மாட்டேன். அன்று என் பையனை ஸ்கூலில் விட ஸ்கூட்டியில் சென்றபோது, பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றுவிட்டது. முதல் நாள்தான் பெட்ரோல் போட்டிருந்தேன். 'காலையில் வாக்கிங் போனபோது பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த வண்டியில யாரோ பெட்ரோலைத் திருடி இருக்காங்க...' என்று நான் உணர்வதற்குள், ''அய்யோ... லேட்டாச்சும்மா...'' என்று அலறினான் என் பையன். எப்போதும் போல கையில் காசும் இல்லை. நல்லவேளையாக அப்போது அவ்வழி வந்த என் மகனின் ஃப்ரெண்டுடைய அப்பா, எங்களை விசாரித்து, பெட்ரோலுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, மகனையும் ஸ்கூலில் டிராப் செய்தார்.

கையில் பர்ஸ் இல்லாமல் வாசற்படி தாண்டுவதே இல்லை இப்போது!