Wednesday, December 22, 2010

கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன?

கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன?

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

அப்பா கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே.!"

அப்பா ஒருகணம் யோசித்தார்.


"மகனே நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா" என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.


"இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்" என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.


மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். "ஹலோ ராமசாமி இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்"


மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். "சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டிருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல"

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். "அப்பா இதுதான் கோபமா?'

"இல்லை மகனே கொஞ்சம் பொறு" என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.


"ஹலோ ராமசாமி இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்" மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.


"சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க"

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். "அப்பா இதுதான் கோபமா?'

"இல்லை மகனே கொஞ்சம் பொறு" என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.


"ஹலோ ராமசாமி இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்" இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.


"ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா எத்தனை தடவை இதே நம்பருக்கு போன் பண்ணுவீங்க தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க"

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். "மகனே இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற" என்றவர்

இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். "ஹலோ ராமசாமி இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்"


மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. "டேய் அறிவு கெட்டவனே நீயெல்லாம் சோத்தத் திங்கறியாஇல்ல வேற ஏதாவதை திங்கிறியா? அறிவில்ல உனக்கு? இன்னொரு தடவை போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க வைடா போனை!"

மகன் அப்பாவிடம் சொன்னான். "அப்பா கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு கொலைவெறின்னா என்னப்பா.?"

"இப்பக் காட்டறேன்" என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.


"ஹலோ நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா!".