Sunday, July 26, 2015

தானத்தில் சிறந்தது அன்னதானம்!

பசி என்று வந்தோருக்கு, புசி என்று கைபிடி அன்னம் அளிக்காதோர் அடையவிருக்கும் துன்பம் எத்தனை கொடுமையானது என்பதை விளக்கும் கதை இது: அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தார் அகஸ்திய முனிவர். அப்போது, ஏரிக் கரையில் அமைந்திருந்த ஆசிரமம் ஒன்று கண்ணில் படவே அங்கே சென்றார். ஆசிரமத்தில் யாரும் இல்லாததால், அங்கேயே தங்கினார்.

மறுநாள் காலையில், ஏரிக்கு சென்றார் அகஸ்தியர். ஏரியில் அழகான இளைஞன் ஒருவனின் பிணம் மிதப்பதைப் பார்த்து, 'இவன் யாராக இருக்கக்கூடும்...' என நினைத்த வேளையில், ஆகாயத்திலிருந்து விமானம் ஒன்று ஏரிக் கரையில் இறங்கியது.

அதிலிருந்து ஒருவன் இறங்கி, ஏரியில் நீராடினான். பின், நீரில் மிதந்த பிணத்தை நெருங்கி, அதை உண்ணத் துவங்கினான். பின், அவன் மீண்டும் விமானத்தில் ஏற முயற்சித்த போது, அதுவரை அதை எல்லாம் பார்த்தபடி இருந்த அகஸ்தியர், அவனை தடுத்து, 'யார் நீ... தேவலோகத்தில் இருந்து வந்த நீ, ஏன் இந்த இழிவான காரியத்தை செய்கிறாய்...' என்று கேட்டார். உடனே அவன், தன் வரலாற்றை கூறத் துவங்கினான்...

'நான் விதர்ப்ப நாட்டு அரசன் சுவேதன்; ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து பிரம்மலோகத்தை அடைந்தேன். ஆனால், அங்கோ, எனக்கு மிகுந்த பசியும், தாகமும் ஏற்பட்டது.

'அதனால், இதற்கான காரணத்தை பிரம்மனிடம் கேட்ட போது, 'பூலோகத்தில் நீ என்ன கொடுத்தாயோ, அதுதான் இங்கும் கிடைக்கும்; ஆனால், நீயோ, பூலோகத்தில் யாசிக்கும் ஏழைக்கு ஒரு பிடி உணவிட்டது கிடையாது. அடுத்தவர்களுக்கு கொடுக்காமல், உன் உடம்பை மட்டுமே போஷித்தாயல்லவா... அதையே, இங்கு தினமும் தின்று உன் பசியை போக்கிக் கொள். 100 ஆண்டுகள் கழித்து, நீ அகஸ்தியரை தரிசிப்பாய். அவர் அருளால் உன் துயரம் நீங்கும்...' என்றார்.

'இதோ... 100 ஆண்டுகள் முடிந்து விட்டன; ஆனால், அகஸ்தியரை தான் இன்னும் தரிசிக்க முடியவில்லை...' என்று கவலையுடன் கூறினான்.

'நீ தேடும் அகஸ்தியர் நான் தான்; இன்றோடு உன் துயரம் நீங்கிற்று...' என்று ஆசி கூறினார் அகஸ்தியர்.

துயரம் நீங்கித் திரும்பினான் சுவேதன். அடுத்தவர் பசியை தீர்ப்பது, ஏழேழு பிறவிக்கும் காக்கும்; மகான்களின் தரிசனம் மாபாதகங்களைத் தீர்க்கும்.