Friday, September 11, 2015

புதையல் தேடுவோம்

புதையல் தேடுவோம்

 

பேராசை பெருமாள்சாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் தனக்கு பெரிய செல்வம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அவனது இயல்பு. தனது ஆசையால் சிறுக சிறுக பொருள் சேர்ப்பது அவனுக்கு சரியாக படவில்லை.


அடித்தால் ஒரே அடியில் பெரும் பணத்தை சம்பாதித்து அதை வைத்து வாழ்க்கை மேம்படுத்தவேண்டும் என முடிவெடுத்தான். ஜோதிடர்களிடம் சென்று ஜாதகத்தை காண்பித்து தனது செல்வநிலையை முடிவுசெயலாம் என ஜோதிடர்களை அணுகினான். அவனது ஜாதகம் சிறப்பாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் பெருமாள் சாமிக்கு புதையல் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் நம்பிக்கை ஊட்டினார்கள்.

காய்கறி கடையில் சில ரூபாய் மிச்சம் பிடித்தாலே சந்தோஷத்தில் இரவு தூங்கமாட்டன் பெருமாள் சாமி, இந்த லட்சணத்தில் ஜோதிடர் சொன்னது அவனுக்கு காதில் ரீங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது. 

எப்படி புதையல் கிடைக்கும்? எங்கு இருக்கும்? அந்த புதையல் நமக்கு போதுமானதாக இருக்குமா என பல எண்ணங்கள் சிந்தனையில் வந்தவண்ணம் இருந்தது. 

அந்த ஊரில் இருக்கும் ஓர் ஞானியை பார்த்து கேட்டால் அவர் தனக்கு உதவகூடும் என எண்ணினான். கண்களில் பேராசை மின்ன தன்முன் வந்து நிற்கும் பெருமாள் சாமியை பார்த்தார் ஞான குரு . "ஐயா எனக்கு புதையல் கிடைக்கும் என ஜோதிடர் சொன்னார். நீங்கள் தான் எனக்கு அந்த புதையல் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான் பெருமாள் சாமி. 

பெருமாள் சாமியின் உண்மையான தேவையை உணர்ந்த ஞான குரு... புன்னகையுடன் பார்த்தார் பின்பு...  "பெருமாள் சாமி , நீ ஒரு பக்திமான் கடவுள் நம்பிக்கை மிக்கவன் என்பதால் இந்த துறவியைத்தேடி வந்திருக்கிறாய். நீ உன் குலதெய்வத்தை வழிபட்டபிறகு இந்த ஊரின் மேற்கு பகுதியில் இருக்கும் மலைக்கு அதிகாலையில் செல். இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து இறைநாமத்தை இடையறாது ஜபித்துக்கொண்டே சூரிய ஒளியில் உனது நிழலை கவனித்து தொடர்ந்து செல். உன் நிழலின் அளவு எங்கு முற்றிலும் குறைகிறதோ அங்கு புதையல் இருக்கிறது" இதை கேட்டதும் அவருக்கு நன்றி சொல்ல கூட தோன்றாமல் விரைவாக நடந்தான். 

அதிகாலையில் குளித்துவிட்டு பயபக்தியுடன் மேற்கு மலைக்கு சென்றான். மலையை பார்த்து நின்றான். பின்புறம் இருந்த சூரிய ஒளியால் நிழல் தெரிய துவங்கியது. நிழலை பின்தொடர்ந்தான். உச்சிவேளையில் நிழல் அவனது உடலில் ஐக்கியம் அடைந்து காணாமல் போனது. 

காலை முதல் நிழலை பார்த்த வண்ணம் இறை சிந்தனையுடன் இருந்ததால் மனம் ஒருமுகப்பட்டு தனது உள்நிலையில் தெளிவான நிலையில் இருந்தான். முடிவாக பெருமாள் சாமி புதையல் தனக்குள்ளே இருக்கிறது என்பதை உணர்ந்தான். 


உங்கள் நிழல் உங்களை நோக்கி வந்துகொண்டே கடைசியில் உங்களுள் அஸ்தமித்ததைப் போலவே நீங்கள் உங்கள் பிறப்பின் மூலத்தை காண முயற்சி செய்வீர்களாக. உங்கள் உள்ளே இருக்கும் "உருபொருளை" புதையலாக நினைத்து தோண்டி எடுங்கள், புதைபொருளாக மாறி புதைத்துவிடாதிர்கள். இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.