Tuesday, April 9, 2013

சேப்பங்கிழங்கு சாப்ஸ், தயிர் வெண்டைக்காய்

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, கசகசா - 3 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி - பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட... சுவை அசத்தலோ அசத்தல்!


தயிர் வெண்டைக்காய்

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.

இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.