Sunday, December 14, 2014

முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்!

ஒவ்வொரு மனிதனுக்கும் பால்யம், இளமை, முதுமை என்று மூன்று நிலைகள் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் பசி எடுத்தால், அல்லது உடம்புக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் அழுவதும், விளையாட்டு காட்டினால் சிரிப்பதுமாக இருக்கும். கவலையற்ற நிலை. இளம் வயதில் ஆடி, ஓடி, சம்பாதிக்கும் காலத்தில், சுறுசுறுப்பும், துடிதுடிப்புமாகக் காலம் ஓடிக் கொண்டிருக்கும்.

முதுமைக் காலத்தில் உடலும், உள்ளமும் தளர்ந்துபோய், பிரச்சனைகள் தலைதூக்கும். எடுத்ததெற்கெல்லாம் கோபம், தாழ்வு மனப்பான்மை, தான் ஒன்றுக்குமே லாயக்கில்லையோ என்ற மனச்சோர்வு, பயம் என்று இப்படிப் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிக்க நேரிடுகிறது.

முதுமைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் கடைசிப் பயணத்திற்கும் தம்மைத் தயார் செய்து கொள்ளாததே இதற்குக் காரணம். உண்மையில் முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது. இறைவன் தந்த வரமே என்பது எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.

ஆகவே, முதுமையை ஒரு சாபம் என்றோ, சுமையானது என்றோ, வெறுக்கத் தக்கதாகவோ கருத வேண்டாம். நேற்றைய நல்ல நினைவுகளிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நல்ல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளில் ஆழ்ந்திருக்கலாம். இன்று நடப்பதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நாளைய தினத்தைப் பற்றிய கவலையோ, பயமோ இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப் பழகுங்கள்.

சிரிப்பு அருமருந்தாகும். வயதானால் சிரிக்கக் கூடாது. நம்மைப் பிறர் தவறாகப் பார்ப்பார்கள் என்று ஏன் எண்ணுகிறீர்கள். வாய்விட்டுச் சிரியுங்கள். உங்கள் சலிப்பை மட்டுமின்றி, மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய சலிப்பையும் விரட்டலாமே.

சோம்பலைத் தூரத் தள்ளுங்கள். வயதானாலும் மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க முடியுமே. தனிமையைக் கண்டு அஞ்சாமல், அதனை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஏன் உங்கள் பேரப் பிள்ளைகளுடன் உள்ளன்புடன் விளையாடலாமே. அவர்களுக்கு நல்ல நல்ல கதைகளைச் சொல்லுங்கள். குழந்தைகளும் கேட்டு ரசிப்பார்கள். உங்களுக்கும் பொழுது குதூகலமாகப் போகும்.

இளைஞர்களுக்குத் தக்க முறையில் வழிகாட்டுங்கள். உங்கள் கடந்தகால அனுபவங்களைக் கூறி அவர்களை வழிநடத்திச் செல்லுங்கள்.

ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும் ஒரு இனிய சகாப்தம்தான். எத்தனையோ பேர் வயதான காலத்திலும் சாதிக்கவில்லையா? உங்களது உயரிய விழுமங்களை உங்களது வாரிசுகளும் பெற்றுப் பயன் பெற உதவுங்கள்.

விபரிதமான கற்பனையில் ஏன் மிதக்கின்றீர்கள். எதிர்மறையான சிந்தனைகளுக்கு ஆளாகித் தவிப்பானேன். நல்ல விதமாகவே எண்ணுங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் அதனால் சோர்வும், தளர்ச்சியும் அடையந்து தவிப்பதைவிட சற்றுக் காற்றாட வாக்கிங் போய் வரலாம். கோவில்களுக்குப் போகலாம். ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பஜனையில் கலந்து கொள்ளலாம். இப்படி நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள் என்றால், மனச்சோர்வு எப்படி வரும்?

உங்களால் முடிந்த சிறு, சிறு வீட்டு வேலைகளைச் செய்யலாம். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தரலாம்.

உங்களது வயது ஒத்தவர்களிடம் சற்று நேரம் பேசிப் பொழுதைக் கழிக்கலாம். 58, 60 வயதானதும் ஓய்வு பெறுவது உங்கள் பணிக்கு மட்டும்தான். அதற்கு மேல் உங்கள் உடல்நிலை திடமாக இருந்தால் வேலைக்குச் செல்லுங்கள். அதற்காகச் சுமையான வேலைகளை ஏற்றுக் கொண்டு கஷ்டப்பட வேண்டாம்.

வயதாகி விட்டதே என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள். அந்த எண்ணமே உங்கள் முதுமைக் காலத்தில் பெரிதும் உங்களைத் துன்புறுத்தும. உடம்புக்குத்தான் வயதாகி விட்டது. 80, 90 வயதானவர்கள் கூட பெருமளவில் சாதித்திருக்கிறார்கள். மனதில் திடம் இருந்தால் நீங்களும் எதையாவது சாதிக்கலாம். ரிடையரான பின்பு வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்கள் கடந்த கால அனுபவங்களைப் பிறருக்குப் பயன்படும்படி எடுத்துச் சொல்லலாமே. Counselling என்பதை ரிடையரான பின்பும் கூடச் செய்யமுடியும்.

உங்களை நீங்கள் முழுமையான ஈடுபாட்டுடன் வைத்துக்கொள்ளலாம். உங்களை விட வயது முதிர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி உற்சாகப்படுத்தலாம். இளைஞர்களுக்கு உங்களது அனுபவத்தைப் பயன்படும்படி எடுத்துச் சொல்லலாம்.

வயதான காலத்தில்தான் பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அதற்காக நீங்கள் மனம் தளர வேண்டாம். நீங்களே பிரச்சனையாகிவிடாமல், பிரச்சனைகளை நுணுக்கமாக ஆராய்ந்து தீர்க்க உதவலாம். குடும்பத்தில் நீங்கள் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கலாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். எதற்கும் கவலைப்படாமல் அமைதியாக இருங்கள்.

உங்களது இனிய சுபாவத்தாலும், கனிவான பேச்சாலும், பரிவாலும், அன்பாலும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, உற்சாக மூட்டுபவர்களாக இருங்கள்.

உங்கள் மகள், மருமகனுக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு சலசலப்புகள், சங்கடங்கள், பிரச்சனைகளை லாவகமாகத் தீர்த்து, அவர்கள் உங்களிடம் மேலும் பிரியமாக நடந்து கொள்ளும்படி நடந்து கொள்ளுங்கள்.

அமைதியும் கம்பீரமும் உங்கள் முதுமைக்கு மேலும் மெருகூட்டும். ஒரு போதும் சுயப் பச்சாதாபத்துக்கு ஆளாகாதீர்கள் (INFRADIG) அதுதான் உங்கள் முதல் எதிரி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முதுமையில் உங்களது பிரியமான வாழ்க்கைத் துணைவியை இழக்க நேரிடும்போது அதனால் உங்களது வாழ்க்கையே இழந்து விட்டதாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த இயற்கை நிகழ்வை, மாற்ற முடியாத அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

குடும்பத்தினருடைய குறைகளை, அவர்கள் மனம் புண்படாதபடி, நயமாக எடுத்துரைத்து, அதனைக் களைய முற்படுங்கள்.

குடும்பத்தாரின் செயல்கள் உங்களை எந்த விதத்தில் பாதித்தாலும், அதனை பெரிது படுத்தாமல் மறந்து விடுங்கள் "சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோரின் பொறுப்பது கடனே" என்ற மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சங்கடம் ஏற்படும் விதத்தில் குடும்பத்தார் நடந்து கொண்டாலும் இனி நயமாக எடுத்துரைத்து, அவர்கள் இனி அவ்வாறு நடந்து கொள்ளாமல் கவனமாக இருக்க உதவுங்கள். அதாவது உங்களது உணர்ச்சிகளை அப்படியே கொட்டிவிடாமல் நயமாக எடுத்துரைக்கப் பழகுங்கள்.

மனம் பாரமாக இருந்தால், உங்கள் வயதினரான நண்பர்களுடன் சற்று நேரம் மனம் விட்டுப் பேசினீர்களானால் அந்த மன பாரம் குறைந்து விடும். காலத்திற்கேற்றவாறு நீங்களும் மாறிக்கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலையில் உங்களது தேவைகளை உணர்ந்து, அனுசரித்துப் போகும் நிலைமை பெரும்பாலான குடும்பங்களில் இல்லைதான். இந்த நிதர்சனமான உண்மையை புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போகப் பழகுங்கள்.

குடும்பத்தில் இளையவர்களைப் பொறுப்புடன் செயல்பட முழுமனதுடன் அனுமதியுங்கள். ஏதோ நீங்கள் இல்லையென்றால் குடும்பமே நடக்காது என்பது போன்ற தகாத எண்ணங்களை ஒரு போதும் உங்களது மனதில் வளர்த்துக் கொண்டு அவதிப்படாதீர்கள்.

உங்களது அறிவுரையையும், வாழ்க்கை முறையையும் முரண்பாடின்றி இருக்கும் விதமாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது உடல்நலம் பாதிக்கப்படும் பட்சத்தில், அதைப் பெரும் பிரச்சனையாக்கி விடாமல், தக்க சமயத்தில் எடுத்துரைத்து, தக்க சிகிச்சை பெற்று நிவாரணம் பெறுங்கள். உரிய மருந்துகளை நீங்களே சாப்பிடுங்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் கவனம் உங்கள் குடும்ப உறுப்பினரிடமிருந்து கிடைக்கவில்லை என்றால், அவர்கள் உங்களை ஒதுக்கிவிட்டதாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த ஒரு சிறு சலனமே உங்கள் மனதை மட்டுமல்ல, உங்கள் உடல் நலனையும் பெரிதும் பாதிக்கும்.

சிறு விஷயங்களிலும் நீங்கள் திருப்தி அடைவீர்களானால், மனதளவில் நீங்கள் இளமையாக இருப்பீர்கள்.

வயதானவர்கள் உண்மையில் வீட்டுக்குவீடு காவல் தெய்வம் போன்றவர்கள். மூத்தோர் சொல் முதலில் கசப்பாகத்தான் இருக்கும். பின்னர் புரியும்போது அது இனிக்கவே செய்யும். ஆகவே அதைரியப் படாமல் நல்லவற்றை நயமாக எடுத்துச் சொல்லுங்கள்.

உங்களது வாழக்கையை நீங்கள் தவறவிட்டாலன்றி, பிறர் ஒரு போதும் உங்கள் வாழ்க்கையைத் தட்டிப்பறிக்க முடியாது. உங்களது நிம்மதியையும் குலைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

வீணாகும் பொருள்களைக் கொண்டு அரிய கலைப்படைப்புகளைத் தயாரிப்பது போல, நீங்களும், குடும்பத்தாருக்கு ஒரு பெரிய சொத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் எண்ணப்போக்கையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியற்றபோதெல்லாம், உங்களுக்குக் கிடைதக்காததைவிட, கிடைத்தவற்றை எண்ணிப்பார்த்து சந்தோஷப்படுங்கள்.

மரணம் ஒருநாள் வந்தே தீரும் இன்றோ, நாளையோ என்பது தான் பரம ரகசியம். ஆனா, அதற்காக சாவைப்பற்றியோ நினைத்துக் கொண்டிருப்பானேன்.

நீங்கள் இதுகாறும் வாழ்ந்த வாழ்க்கை, செய்த செயல்கள், புரிந்த சாதனைகள் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நேற்று கழிந்த காலம் நாளை நமது கையில் இல்லை. இன்றைய நாளை மட்டும் நிறைவாகச் செலவிடுங்கள்.

ஒருபோதும் உங்களுக்குப் பின் உங்கள் சந்ததியினரை, நீங்கள் இன்றிச் செயல்பட முடியாதவாறு முடக்கி வைத்து விடாமல், அவர்களே பொறுப்பை உணர்ந்து செயல்படும்படிச் செய்யுங்கள். அந்த விஷயத்தில் அவர்களுக்குப் பெரிதும் உதவி செய்யுங்கள்.

நீங்கள் யாருக்கும் பாரமல்ல, பிரச்சனையல்ல. மாறாக உங்களது இழப்பு பெரும் பாரம் என்று எண்ணுங்கள். அதற்கேற்றாற்போல் உங்களது வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்.

நீங்கள் தான் வேர்கள். உங்கள் சந்ததியினர் முளைத்து, அரும்புவிட்டு, துளிர்த்து, பூத்து, காய்த்து, கனியாகும் மரமாக வளரவிடுங்கள்.

Please Don't Grow old. Only when they cease grow they become old. யாரும் முதியவர் ஆவதில்லை. அவர்கள் வளர்வதை நிறுத்திக்கொள்ளும்போது தான் வயதானவர்கள் ஆகிறார்கள் என்று எமர்சன் என்ற தத்துவ ஞானி கூறியதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது முதுமை வாழ்க்கை உங்களுக்கு ஒருபோதும் சுமையாக இராமல், வரமாக, மகிழ்ச்சியாக அமைவதை நீங்கள் உணரலாம்.

தன்னம்பிக்கை