Tuesday, February 4, 2014

திருமண 10 விதப் பொருத்தங்கள் எப்படிப் பார்க்கவேண்டும்

நல்ல மண வாழ்க்கை அமைய, திருமணப் பொருத்தங்கள் ஏன் பார்க்கவேண்டும், எப்படிப் பார்க்கவேண்டும் என்பது பற்றிப் பார்த்தோம். பொதுவாகப் பார்க்கப்படும் தச விதப் பொருத்தங்கள் பற்றிய விவரங்களை இந்த அத்தியாயத்தில் இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

1. தினப்பொருத்தம்

பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக இருந்தால், தினப்பொருத்தம் அமைந்துவிட்டது என்று சொல்லலாம். உதாரணம், அசுவினிக்கு 2-வது பரணி, 4-வது ரோகிணி ஆகியவை தினப்பொருத்தம் உடையவை.

2. கணப்பொருத்தம்

இருபத்தேழு நட்சத்திரங்களையும் தேவ கணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு கணத்திலும் 9 நட்சத்திரங்கள் அடங்கும்.  

தேவ கணம்                மனித கணம்             ராக்ஷஸ கணம்

அசுவினி                         பரணி                                கார்த்திகை

மிருகசீரிஷம்              ரோகிணி                         ஆயில்யம்

புனர்பூசம்                       திருவாதிரை                      மகம்

பூசம்                                   பூரம்                                    சித்திரை

ஹஸ்தம்                       உத்திரம்                           விசாகம்

சுவாதி                              பூராடம்                            கேட்டை

அனுஷம்                       உத்திராடம்                        மூலம்

திருவோணம்               பூரட்டாதி                       அவிட்டம்

ரேவதி                              உத்திரட்டாதி                 சதயம்


ஆண்-பெண் இருவர் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் சிறப்பாக அமையும். ஆண், பெண் இருவர் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் அமையும். தேவகணம், மனித கணம் ஆகிய பிரிவில் அடங்கும் நட்சத்திரங்கள் உள்ள ஆண்-பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனக் கொள்ளலாம்.  ஆண்-பெண் இருவர் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் இருக்காது. தேவ கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருந்தாது. மனித கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருந்தாது.

என்ன காரணம்?

குணங்களில் ஸத்வ, தமோ, ரஜோ என மூன்று வகை குணங்கள் உண்டு என்கிறது வேதம். இவற்றின் பிரதிபலிப்பே தேவ, மனித, ராக்ஷஸ கண நட்சத்திரங்கள்! இவை, தனி மனிதனின் குணாதிசயங்களை ஓரளவு வெளிப்படுத்தும். மிகவும் ஸாத்விகமான ஒரு பெண்ணுக்கு ராக்ஷஸ குணம் உள்ள கணவன் அமைந்தால் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா? குணாதிசயங்கள் முற்றிலும் முரண்பாடாக உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்ந்தால், அவர்களின் வாழ்க்கை மன இறுக்கத்துடன் கரடுமுரடான பாதையில்தான் செல்லும். அதனால், மண முறிவுகூட ஏற்படலாம். இன்றைய சூழலில், மற்ற பொருத்தங்கள் சிறப்பாக அமைந்தால், கணப்பொருத்தத்துக்கு சில விதிவிலக்குகள் தருகிறார்கள். அது ஜோதிடரின் கணக்கீட்டின்படி அமைய வேண்டும்.

3. மாகேந்திரப்  பொருத்தம்!

புத்திர சந்தான பாக்கியத்தைக் குறிக்கும் பொருத்தம் இது. பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி, அந்த எண்ணிக்கை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வருமானால், மாகேந்திரப் பொருத்தம் அமைந்துள்ளதாகக் கொள்ளலாம். இந்தப்பொருத்தம் பார்க்கும்போது, ஆண்-பெண் ஜாதகக் கட்டத்தில் லக்னத்துக்கு 5-ம் இடமான  புத்திர ஸ்தானத்தில் அமையும் கிரகங்களின் பலம் அல்லது பலவீனத்தின் அடிப்படையிலும் முடிவு செய்யவேண்டும்.


4. ஸ்திரீ தீர்க்கம்

ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக வாழும் மாங்கல்ய பாக்கியம் பற்றிய பொருத்தம் இது. இதுவும் நட்சத்திர எண்ணைக் கொண்டு அமைகிறது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி, அந்த  எண்ணிக்கை 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் அமையும். 13-க்குக் கீழ் இருந்தால் இந்தப் பொருத்தம் அமையாது.

உதாரணமாக, பெண் நட்சத்திரம் அசுவினி என்றால், சித்திரை முதல் ரேவதி வரை உள்ள ஆணின் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீதீர்க்கப் பொருத்தம் அமையும். இவை 13-க்கு மேற்பட்டவை. பரணி முதல் அஸ்தம் வரை 13 எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆண் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் அமையவில்லை எனலாம். ஆனால் இது, கண்டிப்பான விதியாகாது! இதற்கும் விதி விலக்குகள் உண்டு. மேலும், பெண் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ம் இடம் அல்லது 8-ம் இடத்தில் அமைந்துள்ள கிரஹங்கள் அல்லது அந்த வீட்டுக்குரிய கிரஹம் அமைந்துள்ள இடம். அதன் வலிமை ஆகியவற்றைத் தெரிந்த பின்பே முடிவு செய்ய வேண்டும். இதை ஜோதிடர்கள் ஆராய்ந்து முடிவு செய்து விதிவிலக்கு அளிப்பார்கள்.


5. யோனிப் பொருத்தம்

திருமணத்தால் ஆண்-பெண் அடையும் தாம்பத்ய சுகம் பற்றியும், அதனால் பிறக்கும் குழந்தைச் செல்வங்கள் பற்றியும் அறிய உதவுவது யோனிப் பொருத்தம். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு விலங்கினத்தைக் குறிக்கிறது என்கின்றன ஜோதிட நூல்கள். நட்சத்திரங்களுக்கு உரிய மிருகங்களை அறிவோமா?

1. அசுவினி - குதிரை

2. பரணி - யானை

3. கார்த்திகை - ஆடு

4. ரோகிணி - பாம்பு

5. மிருகசீரிஷம் - பாம்பு

6. திருவாதிரை - நாய்

7. புனர்பூசம் - பூனை

8. பூசம் - ஆடு

9. ஆயில்யம் - பூனை

10. மகம் - பெருச்சாளி

11. பூரம் - பெருச்சாளி

12. உத்திரம் - பசு

13. அஸ்தம் - எருமை

14. சித்திரை - புலி

15. சுவாதி - எருமை

16. விசாகம் - புலி

17. அனுஷம் - மான்

18. கேட்டை - மான்

19. மூலம் - நாய்

20. பூராடம் - குரங்கு

21. உத்திராடம் - கீரி

22. திருவோணம் - குரங்கு

23. அவிட்டம் - சிங்கம்

24. சதயம் - குதிரை

25. பூரட்டாதி - சிங்கம்

26. உத்திரட்டாதி - பசு

27. ரேவதி - யானை

அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய விலங்குகளின் குணங்கள் அந்த நட்சத்திரம் உள்ளவர்களின் ஒரு பரிமாணமாக உள்ளடங்கியிருக்கும்.

ஆண்-பெண் நட்சத்திரங்களைத் திருமணத்துக்காகச் சேர்க்கும்போது, ஒன்றுக்கொன்று பகையான இயல்புகள் கொண்ட விலங்குகளைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களைச் சேர்க்கக்கூடாது. அவ்வாறு சேர்த்தால் யோனிப் பொருத்தம் அமையாது. பகையான விலங்குகள் எவை என்பதைப் பார்ப்போமா?

விலங்கு                 -            பகை விலங்கு

குதிரை                                   எருமை

யானை                                     சிங்கம்

ஆடு                                       குரங்கு

பாம்பு                                         கீரி

நாய்                                          மான்

பூனை                                      எலி

பெருச்சாளி                       பூனை

பசு                                            புலி

பகையான யோனிகள் சேராது. உதாரணம் ரோகிணி (பாம்பு) உத்திராடம் (கீரி) சேராது. ஒரே யோனிகள் உள்ள நட்சத்திரங்களைச் சேர்க்கலாம். அதாவது அசுவினி- சதயம் (குதிரை); ரோகிணி - மிருகசீரிஷம் (பாம்பு). பத்து வகை திருமணப் பொருத்தங் களில் மற்ற பொருத்தங்கள் பற்றிய விவரங்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.



திருமணத்துக்கான தச விதப் பொருத்தங்களில் தினம், கணம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி ஆகிய பொருத்தங்கள் குறித்து சென்ற இதழில் பார்த்தோம். மற்ற ஐந்து பொருத்தங்களை இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.


ஒருவரது நட்சத்திரம், நட்சத்திர பாதம் வைத்தே அவரவர் ராசி அமைகிறது. இதன் விவரங்களை முந்தைய அத்தியாயங்கள் மூலம் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். பொதுவாக ஜோதிட ரீதியாக தினப் பலனோ, மாதப் பலனோ கணிக்கப்படும்போது, ராசியை வைத்து கணித்துதான் 'ராசி பலன்' என்று சொல்லப்படுகிறது. இந்தப் பலன்கள் மூலம் ஒவ்வொருவருக்குக் கிட்டும் சௌகரியம் (செல்வங்கள்), சௌபாக்கியம் (சுகமான வாழ்க்கை) ஆகியவை பற்றித் தெரிந்துகொள்கிறோம். அதனால் திருமணப் பொருத்தம் பார்க்க ராசிப் பொருத்தம் மிக அவசியம்.


6. ராசிப் பொருத்தம்

பல சமுதாயங்களில், வெறும் ராசிப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அத்தகைய ராசிப் பொருத்தம் பற்றிப் பார்ப்போம்.  ஸ்திரீ ராசியில் இருந்து புருஷ ராசி வரைக்கும் எண்ணினால் வரும் எண்ணிக்கையைப் பொருத்து ராசிப் பொருத்தம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஸ்திரீ ராசியில் இருந்து புருஷ ராசி வரையிலுமான எண்ணிக்கை 2 முதல் 6 வரை இருந்தால் திருமணப் பொருத்தம் இருக்காது.

உதாரணம்: பெண் அசுவினி நட்சத்திரம் எனில் அவளுடைய ராசி மேஷம் ஆகும். எனவே, மேஷத்துக்கு துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு எனக் கொள்ளலாம்.

இனி, ஷஷ்டாஷ்டமம் அதாவது 6- வது  8-வது ராசித் தொடர்பு குறித்து அறிவோம்.

பெண்ணின் ராசிக்கு புருஷ ராசி 6-வதாக வந்தால், புருஷ ராசிக்கு பெண் ராசி 8-வதாக வரும். இதை ஷஷ்டாஷ்டமம் என்பார்கள் (ஷஷ்டம் - 6 அஷ்டமம் 8). பொதுவாக, ஷஷ்டாஷ்டம நட்சத்திரங்களுக்குத் திருமணப் பொருத்தம் சேராது.  இது, புத்திர நாசத்தை ஏற்படுத்தும் என்று எடுத்துக்கொள்வார்கள். இது தவறு. நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒவ்வொரு விதிக்கும் சாஸ்திரம் குறிப்பிடும் விதிவிலக்கு உண்டு. அதுபோலவே ஷஷ்டாஷ்கத்துக்கும் 6 விதி விலக்குகள் உண்டு.


ஷஷ்டாஷ்டம விதிவிலக்குள்ள ராசிகள் விவரம்..

 

இவை, சுப ஷஷ்டாஷ்டமம் அல்லது அனுகூல ஷஷ்டாஷ்டமம் எனப்படும். இந்த விதிவிலக்கின்படி நடக்கும் திருமணம் சிறப்பாக அமையும். பிருஹத் ஜாதகம் (கால விதானம், தேவ கேரளம்) போன்ற நூல்களில் இக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.


ராசி அதிபதி பொருத்தம்:

நவக்கிரகங்களில் உள்ள 7 கிரகங்கள், 12 ராசிகளுக்கு அதிபதிகளாவார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு, சமநிலை, பகை உள்ளவர்களாக இருப்பார்கள்.

* ஆண், பெண் ராசி அதிபதிகளின் உறவு நட்பு - சமம் ஆனால், திருமணப் பொருத்தம் உத்தமம்

* ஆண், பெண் ராசி அதிபதிகளின் உறவு பகை- நட்பானாலும்; சமம் - பகை ஆனாலும் நட்சத்திர அதிபதி பொருத்தம் அமையாது.

ராசி அதிபதிகளின் நட்பு, சமம், பகை நிலை பற்றி கீழேயுள்ள அட்டவணை மூலம் அறியலாம்.

ராசி அதிபதிகள் பொருத்தம் சேர்ந்திருந்தால், ராசிப் பொருத்தமும் சேர்ந்துவிடும். கணவன்- மனைவி ஒருவரையருவர் புரிந்து  ஏற்றுக்கொண்டு,  குடும்பப் பெரியவர்களின் உறவை சுமுகமாக்கி, அமைதியும் செழிப்பும் மிக்க வாழ்க்கை வாழ, ராசி அதிபதிப் பொருத்தம் மிக அவசியம்.


வசியப் பொருத்தம்:

திருமணமான ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு வயப்பட்டு வாழ்தல் வசியம் எனப்படும். இது, ஒருவரையருவர் சார்ந்து வாழும் சுகத்தையும், ஒருவரையருவர் பாராட்டி வாழும் இயல்பையும் தரும். வசியப் பொருத்தம் இருந்தால் சிறப்பான குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு.

இந்த வசியப் பொருத்தமானது ஆண், பெண் ராசிகளை அனுசரித்து கீழ்க்காணும்படி அமையும்.

வசியப் பொருத்தமுடைய ராசிகள்:

பெண் ராசி  -  ஆண் ராசி

மேஷம் - சிம்மம், விருச்சிகம்

ரிஷபம் - கடகம், துலாம்

மிதுனம் - கன்னி

கடகம் - விருச்சிகம், தனுசு

சிம்மம்- மகரம்

கன்னி - ரிஷபம், மீனம்

துலாம் - மகரம்

விருச்சிகம் - கடகம், கன்னி

தனுசு -  மீனம்

மகரம் - கும்பம்

கும்பம் -  மீனம்

மீனம் -  மகரம்

மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி இல்லாமல் ராசிகள் அமைந்தால், வசியப் பொருத்தம் அமையாது.


ரஜ்ஜு பொருத்தம்:

நட்சத்திரங்களை ரஜ்ஜு வரிசையில் குறிப்பிட்டுள்ளனர்.

* மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு (சிரசு, தலை)

* ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், ஸ்வாதி, திருவோணம், சதயம் - கண்ட ரஜ்ஜு (கழுத்து)

3. கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி - நாபி ரஜ்ஜு (உதரம்)

4. பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி - ஊரு ரஜ்ஜு (துடை)

5. அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி - பாத ரஜ்ஜு (பாதம்)

ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இல்லாமல் இருப்பது நல்லது. ஒரே ரஜ்ஜுவானால் கீழ்க்காணும் தீய பலன் ஏற்படலாம்.

1. சிரோ ரஜ்ஜு: கணவனுக்கு அற்ப ஆயுள்

2. கண்ட ரஜ்ஜு: மனைவிக்கு அற்ப ஆயுள்

3. நாபி ரஜ்ஜு: புத்திர தோஷம்

4. ஊரு ரஜ்ஜு: பண நஷ்டங்கள், கடன்

5. பாத ரஜ்ஜு: பிரயாணங்களில் தீமை

பொதுவாக முதல் மூன்று (சிரோ ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு) ரஜ்ஜுக்களை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

வேதைப் பொருத்தம்:

வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதல் அல்லது எதிர்மறை யாக அமைவது என்று பொருள். ஒன்றுக்கொன்று வேதையில் அமையும் நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் அமையாது. எந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

அசுவினி - கேட்டை

பரணி - அனுஷம்

கார்த்திகை -  விசாகம்

ரோகிணி - ஸ்வாதி

திருவாதிரை - திருவோணம்

புனர்பூசம் - உத்திராடம்

பூசம் - பூராடம்

ஆயில்யம் - மூலம்

மகம் - ரேவதி

பூரம் - உத்திரட்டாதி

உத்திரம் - பூரட்டாதி

அஸ்தம் - சதயம்

மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றுக்கொன்று வேதை.

இந்த தசவிதப் பொருத்தங்களையும் ஆராய்ந்து, ஜாதகத்தின் ராசிச் சக்கரம், அம்சகச் சக்கரத்தில் உள்ள கிரக நிலைகளையும் ஆராய்ந்து திருமணப் பொருத்தத்தைத் தீர்மானிக்க வேண்டும்.


பல குடும்பங்களில் ஓரளவு ஜோதிட அறிவும் உள்ள ஒருசிலர் இருப்பார்கள்.  அவர்கள் பார்த்த உடனேயே இது பொருந்தும், இது பொருந்தாது என்று நட்சத்திரத்தை வைத்து முடிவு செய்கிறார்கள். இது தவறு. நமக்கு ரத்த அழுத்தம் ஏற்படும்போது அதன் விளைவுகள் நம் உடலில் தெரியலாம். அதை வைத்து நாம் ரத்த அழுத்தத்தை நிர்ணயிக்க முடியாது. மருத்துவர், ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியை வைத்துப் பரிசோதித்த பிறகே துல்லியமான முடிவு தெரியும். அதுபோல், நமக்கு அனுபவத்தில் ஜாதகப் பொருத்தம் பற்றிய விவரங்கள் தெரிந்தாலும், முடிவு செய்வதற்கு முன்பு அனுபவம் மிகுந்த ஜோதிடரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.