Tuesday, February 28, 2017

மகாபெரியவரின் பெருமை

மகாபெரியவரின் பெருமை

" ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது"

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.

இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை. மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.

அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள். எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்...! எனப் பணிந்து வேண்டினர்.

மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன்.

ஒரு சன்னியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது என்றார். ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.