Sunday, April 3, 2016

தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு!

 
தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு!

வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்
விழிப்புணர்வு தர உதவுங்கள் அதிகம் பகிருங்கள்

கோடை வந்தாலே கூடவே அனல் தணிக்க வந்துவிடும் தர்ப்பூசணி. இனிக்கும் இந்தப் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால், எவ்வளவு வெயிலையும் சமாளிக்கும் உத்வேகம் வந்துவிடும்.

அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்தில். வீதிக்கு வீதி இளநீர்க் கடைகளைவிட தர்ப்பூசணி கடைகள் கோடையில் முளைப்பது இதனால்தான்.ஆனால் வாட்ஸ் அப்பில் வைரஸாகப் பரவிய அந்த வீடியோ காட்சி நிச்சயம் அதிர்ச்சி ரகம்.வியாபாரி ஒருவர் தர்ப்பூசணி பழத்தில் 'எரித்ரோசின் பி' எனும் ஒரு சிவப்பு நிறமியை இன்ஜெக்ஷன் வழியே உட்செலுத்துகிறார். பிறகு, அந்த தர்ப்பூசணியை வெட்டி விற்பனைக்கு வைக்கிறார்.

இப்போது தர்ப்பூசணியின் உள்ளே இருக்கும் பகுதி நல்ல சிவப்பாக பழுத்த பழம் போல் காட்சியளிக்கிறது! வட இந்திய நியூஸ் சேனல் ஒன்றில் வெளியான அந்தக் காட்சி, மொழி புரியாதவர்களையும் பதைபதைக்க வைக்கிறது.அப்படியானால் இப்படித்தான் தர்ப்பூசணிகளை சிவக்கச் செய்கிறார்களா? மாம்பழத்தில் கல் வைத்துப் பழுக்க வைப்பது மாதிரி விற்பனையைக் கூட்டும் வியாபார தகிடுதத்தங்கள் நமக்குப் புதிதல்ல.ஆனால் இந்த வாட்டர் மெலன் மேட்டர் ரொம்பவே சீரியஸ். பழத்தின் சாப்பிடும் பகுதியில் இது சேர்க்கப்படுவதுதான் ஆபத்தே! இதில் சேர்க்கப்படும் அந்த நிறமி புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உடையது என்கிறார்கள் நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள். எனவேதான், இந்தக் காட்சி பரவிய சில நிமிடங்களிலேயே தர்ப்பூசணி வியாபாரிகளை பரிசோதனை செய்தார்கள் தமிழக சுகாதார அதிகாரிகள்.

''ஒரு சில வியாபாரிகள் இப்படிச் செய்றாங்க சார்... அது இப்போ வெளிச்சத்திற்கு வந்திருக்கு!'' - ஆதங்கம் பொங்கினார் பெயர் குறிப்பிட விரும்பாத நுகர்வோர் ஆர்வலர் ஒருவர். அவர் நேரில் பார்த்த காட்சி ஒன்றையும் பகிர்ந்தார். ''வட இந்தியா மாதிரி நம்மூர்ல இப்படி இன்ஜெக்ஷன் வழியா ஏத்துறதில்ல. அதுக்குப் பதில், பழத்தை வெட்டிட்டு இதுக்குன்னே இருக்கிற சில கலர்களை அதுல சேர்க்குறாங்க. தர்ப்பூசணி சைஸ் பெரிசாக பெரிசாக விலை அதிகமாகும்.

சின்ன சைஸா இருக்கறது சரியா பழுத்திருக்காது. ஆனால் விலை குறைவா இருக்கும். இதைத்தான் இப்படி சிவப்பாக்கி விக்க முயற்சி பண்றாங்க. முதல்ல, கலரை ஒரு துணியில நனைச்சு வச்சுக்கறாங்க. அப்புறம், வண்டிக்கு அடியில உட்கார்ந்து பழத்தை வெட்டி அதுல இந்தக் கலரை யாருக்கும் தெரியாம கொஞ்ச கொஞ்சமா தெளிக்கிறாங்க.

இதனால, பழங்கள் நல்லா பழுத்த மாதிரி, பார்க்க கவர்ச்சியா இருக்கும். இந்தப் பழங்களை சாப்பிடுறப்போ சாறு சட்டையில வடிஞ்சா சாயம் போல ஒட்டிக்கும். அதை வச்சே இந்தக் கலப்படத்தை கண்டுபிடிச்சிடலாம்'' என்றவர், ''வெட்டாத முழுப் பழமா பார்த்து வாங்குறதுதான் நம்மூர் மக்களுக்கு நல்லது'' என்றார் எச்சரிக்கை தொனியில்.

சென்னை தரமணியில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வகத்தின் தலைமை அறிவியலாளர் சாய்பாபாவிடம் இதுபற்றிப் பேசினோம். ''தர்ப்பூசணியில கலர் சேர்க்கிறாங்கன்னு சொல்ற செய்தியை இப்பதான் கேள்விப்படுறேன். பொதுவா, கலர்ஸ் எந்த உணவுப் பொருளுக்கு தேவைப்படுதோ, அதுல சேர்த்துக்கலாம்னு அரசே உணவுப் பாதுகாப்புச் சட்டத்துல சொல்லியிருக்கு.
இதற்கு அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்னு பேரு. இதுல எட்டு கலர் இருக்குது. இந்த 'எரித்ரோசின்'னும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்ல ஒண்ணுதான். இதை எந்தெந்த உணவுப் பண்டங்கள்ல எவ்வளவு பயன்படுத்தணும்ங்கிற விஷயமும் சொல்லப்பட்டு இருக்கு. அந்த அளவுக்குள்ள பயன்படுத்தினா உடலுக்கு ஆபத்தில்ல. அதுக்கும் மேலன்னா... அவ்வளவுதான்.

இந்த வண்ணங்களை மிட்டாய், லட்டு, ஜாங்கிரி, கேக், ஜெல் போன்ற இனிப்பு வகைகள்ல பயன்படுத்திக்கலாம். ஆனா, மிக்சர், சேவு போன்ற கார வகைகளிலும், வெட்டப்பட்ட பழ வகைகளிலும் பயன்படுத்தக் கூடாது. தர்ப்பூசணியில கலர் சேர்த்தா, அது நிச்சயம் சட்டப்படி குற்றம். அது உடலுக்கு கேடு விளைவிச்சு, கேன்சருக்கும் வழிவகுக்கும்!'' என்றவர், கலர் சேர்க்காத தர்ப்பூசணியைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் விளக்கினார்.

''கோடையில தர்ப்பூசணி தவிர்க்க முடியாதது. எனவே, இப்படி வர்ற செய்திகளைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். கவனமா பார்த்து வாங்கணும், அவ்வளவுதான். இயல்பா பழுத்த பழத்துக்கும், வண்ணம் போடப்பட்ட பழத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. செயற்கை கலர் பளிச்னு ரொம்பவும் ரத்தச் சிவப்பா இருக்கும். பார்த்தாலே வித்தியாசம் தெரியும். அதே மாதிரி, பழத் தோல் மேலிருக்கும் முதல் வெள்ளை அடுக்கிலும் சிவப்பு நிறம் இருந்தா, தர்ப்பூசணியில கலர் கலந்திருக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாம்.

ஏன்னா, ஸ்பிரே அடிச்சாலோ, ஊசி வழியா செலுத்தினாலோ அதிலும் அந்த நிறம் சேர்ந்திடும். பொதுவா, பழங்களை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் சாப்பிடறதுதான் நல்லது. கடைகள்ல கட் ஃப்ரூட்ஸ் சாப்பிடறதா இருந்தா வலை போட்டு மூடியிருக்கிறது பெஸ்ட் சாய்ஸ்'' என்கிறார் அவர். இதில் சேர்க்கப்படும் 'எரித்ரோசின் பி' என்ற அந்த நிறமிபுற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உடையது.

நீங்களும் விழிப்புணர்வு கொடுக்க நினைத்தால் உதவுங்கள் அதிகம் பகிருங்கள்