Saturday, November 1, 2014

பெண்ணிற்கு வரன் பார்துக்கிட்டு இருந்தீங்களே..! என்ன ஆச்சு.....?

அப்பா..! எனக்கு பெங்களூருவில் பெரிய கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு. மாத சம்பளம் ரூ 35,000 கிடைக்கும். நாம் எல்லொரும் அங்கே சென்றுவிடலாம் அப்பா. வீடு மாற்றுவதற்கு கூட அவர்களே ரூ 30,000 ஆயிரம் தருகிறார்கள்.

சரிம்மா உன் ஆசைப்படியே செய்.

2 வருடங்கள் செல்கின்றன.......

ஏம்பா.. புரோக்கர்....! என் பெண்ணிற்கு 28 வயது ஆகிறது. இப்பொழுது கம்பெனியில் சீனியர் எக்சிகியூட்டிவாக மாதம் ரூ 50,000 ஆயிரம் சம்பாதிக்கிறாள். அவளுக்கு ஏற்றபடி நல்ல வரனா.... குறைந்தது... ரூ.1,00,000 சம்பாதிக்கும் பையன் யாராவது இருந்தால் சொல்லுப்பா.

ஐயா, எனக்கு தெரிந்த பையன் சேலத்தில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். ஆனால் மாதம் ரூ 30,000 தான் சம்பளம். உங்களுக்கு சம்மதமானால் நான் போய் பேசிப்பார்க்கிறேன். ஏம்பா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்..? நீ என்ன சொல்ற? அந்த பையன் சம்பளம் என்ன என் மகளின் சம்பளம் என்ன?

3 வருடங்கள் கழித்து.....

அப்பா....! இந்த பையன் கருப்பு; அந்த பையன் வயிறு அதிகம்; இந்த சம்பந்தம் வேண்டாம்பா. வேறு ஸ்மார்ட்டான பையனாக பாருங்கள்.

5 வருட ஓட்டத்திற்குபின்.....

ஏன்ங்க புரோக்கர் சார் எப்படி இருகிறீர்கள். நன்றாக இருக்கிறேன் சார். உங்களின் பெண்ணிற்கு ஏற்ற ஒரு வரன்பையன் இருக்கிறார் சார். மாதம் ரூ.1,50,000 தனியார் கம்பெனியில் மும்பையில் உள்ளான். உங்களுக்கு சம்மதம் என்றால்.......!

என்னங்க புரோக்கர்....?! இப்போ என் மகள் அந்த கம்பெனியில் சீனியர் மேனேஜராக மாதம் ரூ.2,50,000 மாதம் வாங்கிக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு ஏற்ற பையன் அவளின் சம்பளத்தைவிட கொஞ்சம் அதிகமா.. இந்த ஊரிலேயே இருந்தால்........

ஏங்க...! அந்த பெண்ணிற்கு வரன் பார்துக்கிட்டு இருந்தீங்களே..! என்ன ஆச்சு.....? அடியே, மங்களம்., உனக்கும் எனக்கும் எந்த வயதில் கல்யாணம் ஆச்சு? ஏங்க எனக்கு 22 வயதிலேயும் உங்களுக்கு 27 வயது இருக்கும் போது. ஏன், நமக்கு 12 வது படிக்கும் பையனும், காலேஜ் முடிக்கும் வயதில் இருக்கும் பெண் இருப்பதும் உங்களுக்கு மறந்துடுச்சா? இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? பதில் சொல்லுங்கள்.

அதில்ல மங்களம். நானும் அந்த பெண்ணின் வீட்டிற்கு விதவிதமான பையன்களின் விபரத்தை கொடுத்தேன். ஆனால் அவர்களுக்கு பையன் நன்றாக இருந்தாலும் சம்பளம் சரியில்லை என்கின்றார். சம்பளம் சரியாக இருந்தாலும் பையன் கருப்பு, உயரம் கம்மி என்று தட்டி கழிக்கிறார். அவரின் பெண்ணிற்கு இப்பொது வயது 36 ஆகிறது. அவர்களின் வீட்டில் அவளுக்கு வயது ஆகிறது என்கின்ற கவலை இல்லை. அந்த பெண்ணின் தந்தை அவளின் கல்வித் தகுதியையும் மகளின் மாத சம்பளத்தையும் வைத்துக்கொண்டு வரன் பார்த்து பார்த்து திருப்தி அடையாமல் பெண்ணின் வயதில் கோட்டை விட்டு விட்டார்.

இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் முப்பது வயதுக்குள் உள்ள பெண் விபரத்தை கொடுங்கள் என்று ஜாதகத்தை திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். அவருக்கு நான் எப்படி பதில் சொல்வது என்று தெரியால் முழிக்க வேண்டியுள்ளது. இவர்களைப் போல ஆட்களுக்கு ஆண்டவன்தான் நல்ல தெளிவான புத்தியை கொடுக்க வேண்டும். சரி அதை விடு நம் பெண்ணிற்காவது கவனத்துடன் 28 வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும்.