Tuesday, November 8, 2011

குழந்தையின்மைப் பிரச்னை

'உலக அளவில் 100 தம்பதியரில் 12 பேருக்குக் குழந்தையின்மைப் பிரச்னை இருக்கிறது!' என்று அதிர்ச்சிப் புள்ளிவிவரம் தருகிறது, கொலம்பியா மருத்துவப் பல்கலைக்கழகம்.

இந்தத் தகவல் உண்மைதானா, குழந்தையின்மைப் பிரச்னைக்கு நவீன சிகிச்சை முறை என்ன அறிமுகமாகி இருக்கிறது என்று செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜிடம் கேட்டோம்.

''இந்தப் புள்ளிவிவரம் உண்மைதான் என்பதற்கு மருத்துவமனைகளில் வந்து குவியும் கூட்டமே சாட்சி. குழந்தையின்மை என்ற குறைபாட்டை, கடவுள் கொடுத்த தண்டனை என்பதாகவே நம் நாட்டு மக்கள் நினைப்பதால், திருமணம் முடித்துப் பல ஆண்டுகள் கழித்தே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதனால் குழந்தைப் பேறு கிடைப்பதும் தாமதமாகிறது. தம்பதியில் எவருக்கு என்ன விதமான குறைபாடு இருந்தாலும் குழந்தைப்பேறு பெற்றுவிட முடியும் என்ற அளவுக்குத் தற்போது இந்தத் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு, 1978-ம் ஆண்டு ஏற்பட்ட மருத்துவப் புரட்சியே காரணம் எனலாம். அந்த வருடம் லூயிஸ் பிரௌன் என்கிற முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தவுடன், மகப்பேறு மருத்துவத் துறையின் சரித்திரம் மாறத் தொடங்கியது.

1992-ம் ஆண்டு அறிமுகமான இக்ஸி சிகிச்சை முறை குழந்தையின்மை குறைபாட்டுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த சிகிச்சை முறையில், கணவனின் விந்துத் திரவத்தில் உள்ள உயிர் அணுக்களை எடுத்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தி கரு உருவாக்கப்படும்.

இதையடுத்து 2000-ம் ஆண்டு அறிமுகமான 'லேசர் அசிஸ்டெட் ஹெட்சிங்' என்கிற நவீன முறை, வயதான பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. வயதான பெண்களுக்கு கருமுட்டையின் வெளி ஓடு அடர்த்தியாக இருக்கும். இதனால் கருமுட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஆண்களின் உயிர் அணுக்கள் நுழைய முடியாது. இந்த சிகிச்சையில் லேசர் மூலம் நுண்துளையிட்டு, வயதான பெண்களின் கருமுட்டையின் வெளிப்புற ஓட்டை மெலிதாக்குவதால், கருத்தரிப்பு எளிதாகிறது.

முன்பு இக்ஸி முறையில் ஒரு குறைபாடு இருந்தது. அதாவது ஊசி மூலம் செலுத்தப்படும் விந்து அணுக்களில் குறைபாடு இருந்தால்கூட, கண்டறிய முடியாது. குறையுள்ள விந்து அணுவால் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் சிகிச்சை அளித்தும் பயன் இருக்காது. இந்தக் குறைபாட்டைக் களைந்து நவீனத்துவம் பெற்றிருப்பதுதான், இம்ஸி சிகிச்சை. இந்த நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு விந்து அணுவையும் 4,000 மடங்கு உருப்பெருக்கிப் பார்க்க முடியும். அதனால் குறைபாடு உள்ள விந்து அணுக்களை நீக்கிவிட்டு நல்ல ஆரோக்கியமான விந்து அணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து, கருக்குழாயில் செலுத்த முடியும். இதனால் வெற்றி வாய்ப்பும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

ஆண்களில் சிலருக்கு விதைப் பையில் உள்ள அனைத்து விந்து அணுக்களுமே குறையுடன் இருப்பது உண்டு. இவர்களால் என்றுமே குழந்தை உருவாக்க முடியாத நிலை இருந்தது. இதற்கும் தீர்வு வந்துவிட்டது. விதைப் பையில் விந்து அணு உருவாவதற்கு முற்பட்ட நிலையிலேயே, அதனைப் பலமானதாக மாற்றிக் கருவினை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

அதே போன்று பெண்ணின் கருவறையில் இருந்து வெளிவரும் கரு முட்டைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அதில் விந்து அணுக்களை செலுத்திக் கரு உருவாக்க முடியும். ஆனால், இப்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து உறை நிலையில் வைத்து முறைப்படி பாதுகாத்துப் பின்னர் கருத்தரிக்க வைக்கும் அளவுக்கு, சிகிச்சை வளர்ந்துவிட்டது. இது தவிர, வளராத கருமுட்டையைப் பெண்ணின் கருப்பையில் இருந்து எடுத்து, கணவனின் விந்து அணுவுடன் சேர்த்து வெளியில்வைத்து ஒன்றாக்கிய பிறகு, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்தும் 'மெச்சூரேஷன் ஆஃப் ஓசிஸ்ட்' என்ற சிகிச்சை முறையும் இப்போது பயனுள்ளதாக இருக்கிறது.

வயதான பெண்களுக்கு கரு முட்டைகள் இருக்கும் என்றாலும் சிலருக்கு அந்த கரு முட்டைகள், கருவாகும் தன்மையில் இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் வயதான பெண்ணின் கரு முட்டையை எடுத்து, இளம் பெண்ணின் கரு முட்டையில் இருந்து சைட்டோபிளாசம், மைட்டோகாண்டிரியா போன்றவற்றைப் பிரித்து எடுத்து, வயதான பெண்ணின் கரு முட்டைக்குள் செலுத்தி கருவினை உண்டாக்க முடியும். ஒருவேளை கரு முட்டையே உற்பத்தி ஆகாமல் இருந்தால், கரு முட்டைகளை வேறு ஒரு பெண்ணிடம் இருந்து தானமாகப் பெற்று, குழந்தை இல்லாத பெண்ணின் கணவரின் விந்து அணுவோடு சேர்த்தும் கருவினை உருவாக்க முடியும். அதனால் இனி குழந்தையின்மை என்ற குறையே இல்லாமல் போகும் காலம் நிச்சயம் வரும்...'' என்றவர் இந்தப் பிரச்னை தீர வழிவகைகளும் சொல்கிறார்.

''நிறையக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பது, தினமும் குறைந்தபட்சம் 10,000 அடிகளாவது நடப்பது, புகை - மது பழக்கம் இல்லாமல் இருப்பது போன்றவை குழந்தையின்மைப் பிரச்னையை பெருமளவு குறைக்கும். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், உடனே மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். மிக நீண்ட காலம் குழந்தைக்காகக் காத்திருப்பது பல எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும்!'' என்கிறார்.

குழந்தையின்மை என்ற குறைபாடு, இனி இல்லாது போகட்டும்!