Friday, August 5, 2011

உன்னை அறிந்தால்...!

ரபரப்பும் வேகமும் கொண்ட உலகம் இது! உழைத்தால்தான் உயர முடியும் என்பதால், பொருளாதாரத்திலும் பதவியிலும் முன்னேற, எந்நேரமும் உழைக்க வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில், வீட்டுக்கு ஒருவர் அல்லது இரண்டு பேர் வேலை செய்தனர். அவர்கள், அண்ணன் தம்பியாகவோ, அப்பா மகனாகவோ இருந்தார்கள்.  

 பின்னர், பெண்களும் வேலைக்குப் போகத் தொடங்கினர். பெரும்பாலும் ஆசிரியை அல்லது நர்ஸ் உத்தியோகத்தில் ஈடுபட்டனர். காலப் போக்கில், கணவன் மனைவி இரு வருமே வேலைக்குப் போகிற நிலை உருவானது. காலையில் எழுந்ததும் கிழக்குத் திசை நோக்கிக் கணவனும், மேற்குத் திசை நோக்கி மனைவியும் வேலைக்கு ஓட... முன்னதாக டப்பாவில் உணவை அடைக்கிற வேகத்தில், குழந்தைகளை ஆட்டோவில் திணித்து அனுப்புகிற அவலமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

நமது தேவைகளில், அநாவசியம்- அத்தியாவசியம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கால மாற்றத்தில், அநாவசியப் பட்டியலில் இருந்த பலவும், அத்தியாவசியமாகிப் போயின. திசைக்கு ஒருவராக ஓடி ஓடிச் சம்பாதிக்கிற நிலையில், ஒருவரையருவர் பரஸ்பரம் பார்த்து, நல்லதாக நாலு வார்த்தை பேசி, அன்பு பாராட்டிக் கொள்வதற்குக்கூட நேரமில்லாத நிலை. இதில், அவர்கள், அவர்களையே பார்த்துக் கொள்வதில்லை என்பதுதான் கொடுமை! அதாவது, தனக்கு வண்டி- வாகனம் தேவை எனச் சிந்திக்கின்றனர்; ஆபரணங்கள் அவசியம் எனக் கருதுகின்றனர்; நிம்மதியாகத் தூங்கவேண்டும் என்று, உயர்ரகக் கட்டிலையும் மெத்தையையும் வாங்கிப் போடுகின்றனர்; அறை குளுகுளுவென்று இருக்க ஒரு ஏ.சி. மெஷினையும் பொருத்துகின்றனர். இப்படியாக, தங்களைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்களைப் போட்டுக் கொண்டுவிட்டதாக நினைக்கிறார்களே தவிர, தங்களுக்குள் அதாவது தங்கள் உடலுக்குள் பாதுகாப்பு வளையம் அவசியம் என்பதை மட்டும் அவர்கள் உணர்வதே இல்லை.

'உன்னையே நீ அறிவாய்' என்றார் சாக்ரடீஸ். 'நான் யார்' என்று கேள்வி கேட்கச் சொன்னார் ஸ்ரீரமணர். இந்த இரண்டு கேள்விகளையும் மேலோட்டமாகக் கேட்டு, மேலோட்டமாக பதிலையும் சொல்லிக்கொண்டு, மேம்போக்காக வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். அன்பர் ஒருவர், 'உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?' என்று என்னிடம் கேட்டார். 'கடவுள் இருக்க வேண்டுமா, கூடாதா? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். 'நம்மைக் காப்பதற்கும் நமக்கு நல்லது செய்வதற்கும் கடவுள் இருக்கத்தான் வேண்டும்' என்றார் அவர். உடனே நான், 'கடவுள் எங்கே இருக்கிறார், தெரியுமா?' என்றேன். அவர் கோயிலைக் காட்டினார்; ஆகாயத்தைக் காட்டினார்; இயற்கையைச் சுட்டிக்காட்டினார்; அருகில் அமர்ந்திருந்த அவருடைய அம்மாவையும் அப்பாவையும் காட்டி, 'இவர்களே என் தெய்வங்கள்' என்றார். அத்துடன் நிற்காமல், நான்காவது வரிசையில், ஒரு பெண்மணியின் மடியில் இருந்த ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி,  'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்றார். நான் மறுத்தவாறு தலையசைத்துக் கொண்டே இருந்தேன். கடைசியில், அயர்ச்சியும் அலுப்புமாக, 'நீங்களே சொல்லுங்கள் சுவாமி! கடவுள் எங்கேதான் இருக்கிறார்?' என்று கேட்டார். மெள்ளப் புன்னகைத்தபடி, 'கடவுள் இங்கே இருக்கிறார்; அங்கே இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். அவ்வளவு ஏன், உங்களுக்கு உள்ளேயும்கூட இருக்கிறார்!' என்றேன்.

''ஆம். கடவுள் என்பவர், உனக்கு உள்ளே இருக்கிறார்; அவருக்கு உள்ளேயும் இருக்கிறார்; இதோ... இந்த இளைஞனுக்கு உள்ளேயும், அதோ, அந்த மூதாட்டிக்கு உள்ளேயும் என எல்லா மனிதர்களிடமும் இருக்கிறார்; எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார். கடவுள் உனக்குள் இருப்பதுபோல் அவருக்குள்ளும் இருக்கிறார் என்றால், நீ வேறு அவர் வேறு இல்லை. பிரிவினை கிடையாது; ஏற்றத்தாழ்வு இல்லை; நீயும் அவரும் ஒன்றே! நீ உன்னிடம் காட்டுகிற அன்பையும் நேசத்தையும் அவரிடமும் காட்டு. ஏனெனில், அவர்தான் நீ; நீதான் அவர்! உன்னை அவராகவும் அவரை நீயாகவும் பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும், தெரியுமா? உனக்குள் இருக்கிற உன்னை உற்றுப் பார்க்கவேண்டும். அதற்காகத்தான் இந்த எளிய பயிற்சிகள்!'' என்றேன். ஆம் அன்பர்களே, முதலில் நீங்கள் உங்களை உள்ளார்ந்து பார்க்கத் துவங்கிவிட்டால், பிறகு இந்த உலகத்தாரில் உங்களைக் காண்பீர்கள். மனவளக் கலைப் பயிற்சியின் நோக்கம், நீங்கள் அந்த இடத்துக்கு நகரவேண்டும் என்பதுதான்!

ஏழாவது நிலைப் பயிற்சியில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், தெரியுமா? கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

'என்ன இது? என்னுள் இருக்கிற என்னைக் காண வேண்டும் என்கிறீர்கள். ஆனால், கண்களை மூடிக்கொள்ளச் சொல்கிறீர்களே?' என்று கேட்கிறீர்கள்தானே?!

புறக் கண்கள் மூடினால், அகக் கண்கள் திறக்கும் அன்பர்களே! சப்பணமிட்டு அமர்ந்து, முதுகையும் கழுத்துப் பகுதியையும் நேராக்கிக் கொள்ளுங்கள். இப்போது, உங்களின் இடது உள்ளங்கையால் இடது கண்ணையும், வலது உள்ளங்கையால் வலது கண்ணையும் மூடிக் கொள்ளுங்கள். இந்த நிலையில் மூச்சை நிதானமாகவும் அமைதி யாகவும் ஆழ்ந்து உள்ளிழுங்கள்; அப்படியே சீராக வெளியே விடுங்கள். பிறகு உள்ளிழுத்து, வெளியே விட்டு... என ஐந்து முறை செய்யுங்கள்.

அப்படிச் செய்கிற போது, நுரையீரலின் மேற்பகுதி நன்றாக விரிவடைவதை உணர்வீர்கள். இந்த ஏழு நிலைப் பயிற்சிகளும், உங்களுக்கு எல்லா நன்மைகளையும் தரவல்லன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படிப் புரிந்து,  உணர்ந்து, தெளிந்து பயிற்சியில் இறங்கினால், வாழ்வில் மட்டுமல்ல; உங்களின் உள்ளுக்குள்ளேயும் மிகப் பெரிய மாறுதலை அடைவீர்கள். குறிப்பாக, அடிவயிற்றுப் பகுதியில் கனம் நீங்கும்; தொப்பை குறையும்; குடல் பகுதிகளின் இயக்கம் சீரடையும்; பரபரவென சுறுசுறுப்பு பரவும். சுவாசப் பையின் ஒவ்வொரு பகுதியும் நன்றாக விரிவடைவதால், பிராண வாயுவைச் சுமந்த காற்று நன்றாக உள்ளே நுழையும்; எல்லா இடங்களுக்கும் பரவும்; அதனால் சுவாசப் பையின் இயக்கத்தின் சுறுசுறுப்பு அதிகரிக்கும். உடலின் எல்லா செல்களுக்கும் போதிய அளவுக்குப் பிராண வாயு கிடைக்கும்! அடுத்து நுரையீரல். இந்தப் பயிற்சிகளால், காற்றை உட்கொள்கிற திறனானது, நுரையீரலுக்குள் மெள்ள மெள்ள அதிகமாகும். சுவாசப் பையில் பிராண வாயு அதிகரித்தால், ரத்தம் சுத்தமாகும்; சுத்தமான ரத்தம் உயிர்ச் சக்தியைப் பெருக்கும். நரம்பு- தசைநார்ப் பயிற்சி முறையால் இன்னும்கூட நன்மைகள் உண்டு. உடலின் எல்லாப் பகுதிகளுக்கும், அனைத்துச் சுரப்பிகளுக்கும் பிராண வாயுவானது சென்றடைகிறது. இதனால், உடலின் எல்லாப் பாகங்களும், தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல், பிரமாதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்!

இன்னும் நிறையப் பலன்கள்; அடுத்துச் சொல்வதற்கு முன்... ஒரு விஷயம். வீட்டில் வாகனத்தை ஸ்டார்ட் செய்து, அலுவலகம் சென்று இறங்குகிற வரைக்கும், உங்களின் வாகனம் சீராகவும் சிறப்பாகவும் இயங்க வேண்டும்தானே?! அதுபோலத்தான் உடலும்! அதாவது, உடல் என்பது நீங்கள் அல்ல; உங்களின் அன்புக்கும் ஆசைக்கும் உரிய ஒரு வாகனம்தான், உங்களின் உடல்!