Friday, August 5, 2011

'ஆனந்தம் விளையாடும் வீடு' வேண்டுமா ?

'பள்ளிகள் மற்றும் வீடுகளில் குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற கொடும் நிகழ்வுகள் அடியோடு அழிய வேண்டும்' என்று சமீபகாலங்களாக வலியுறுத்தப்படுகிறது. இதற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் வகையில், உலக அளவிலான கருத்தரங்கம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.


''ஒவ்வொரு வீட்டிலும் 'நேர்மறை ஒழுக்கம் (Positive Descipline)  என்பதை நடைமுறைப்படுத்தினால், குழந்தைகளை அடிக்காமல்... துன்புறுத்தாமல் வளர்க்க முடியும்!'' என்று அந்த மாநாட்டில் அழுத்தமாக பதிந்துவிட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணரும், 'போதி' இன்ஸ்டிடியூட் மேலாண் இயக்குநருமான முனைவர். ராஜ்மோகன்.

'' 'ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்... அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது' என்பது போன்ற வழக்கு மொழியும், வழக்கமும் உள்ள நம் கலாசாரத்தில் இது சாத்தியமாகுமா?'' என்ற கேள்வியுடன் ராஜ்மோகனைச் சந்தித்தோம்.

''இங்கு எல்லோருக்குமே அப்பா, அம்மாவிடம் அடி வாங்கி வளர்ந்த பால்யம்தான் கிடைத்திருக்கும். அப்படி அடிவாங்கும்போது, எதிர்த்து நின்று இருப்போம். அல்லது அடித்தவரிடம்இருந்தோ அல்லது அடி வாங்கிய விஷயத்திலிருந்தோ விலகி இருப்போம். அடித்துத் துன்புறுத்துவதால் இதுதான் நடக்கும்!'' என்று அவர் சொன்னபோது 'வெயில்' சினிமாவில் வரும் பசுபதி கேரக்டர் நம் நினைவிலாடியது.

''உண்மைதான்... அடியும், தண்டனையும் 'வெயில்' சினிமாவில் வரும் 'பசுபதி'களைத்தான் உருவாக்கும்!'' என்று ஆணித்தரமாக சொன்ன ராஜ்மோகன், பிள்ளைகளை 'பாஸிட்டிவ் டிஸிப்ளி'னுடன் வளர்க்க வேண்டிய அவசியத்தைப் பேசினார்...

''ஒரு குழந்தையை அடிக்கும்போது, அக்குழந்தைக்கென்று இருக்கும் சுயமரியாதையும் அடிபடும். சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு பிறகு எப்படி அக்குழந்தை எல்லா விஷயங்களிலும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும், கம்பீரமாக இயங்கும்? குழந்தையை அடிக்காமல், உதைக்காமல், வார்த்தையால் துன்புறுத்தாமல் 'பாஸிட்டிவ் டிஸிப்ளின்' அணுகுமுறையைச் செயல்படுத்தி பாருங்கள்... உலகின் சிறந்த குழந்தையாக உங்கள் குழந்தை வளரும்; நிம்மதி வாழ்வில் தங்கும்!'' என்றவர், அந்த வளர்ப்பு முறைக்கான வழிமுறைகளை அடுக்கினார்...

''எந்த ஒரு விஷயத்தையும் நாம் குழந்தைகளுக்காக செய்வதைவிட, குழந்தைகளுடன் சேர்ந்து செய்தால், அதன் பலன் பன்மடங்காக இருக்கும். ஆனால், இதை பல பெற்றோர்கள் செய்வதில்லை. உங்கள் குழந்தையை சுயமரியாதை மிகுந்த குழந்தையாக வளர்த்தாலே... அது எந்தத் தவறும் செய்யாது. தவறு செய்யாவிட்டால்... தண்டனைக்கான வாய்ப்புஇல்லாமல் போகும். அதற்கு, பெற்றோர்கள்தான் குழந்தைக்கு உதாரணமானவர்களாக இருக்க வேண்டும். 'அப்பாவோட நேர்மையாலதான் என்னை எல்லாரும் மதிக்கறாங்க. அதேபோல, நீயும் பொய்யெல்லாம் எதுவும் சொல்லாம நேர்மையா இருந்தா, உன்னையும் எல்லாருக்கும் பிடிக்கும்' என்று சொல்லி வளர்த்தால், அக்குழந்தை தன் சுயமரியாதையைக் காக்க விரும்பி, பொய் சொல்லாமல் வளரப் பழகும்'' என்று புரிய வைத்த ராஜ்மோகன்,

''முக்கியமான விஷயம்... குழந்தைகள் அம்மா, அப்பா என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில்லை; அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் மனதால் கேட்கிறார்கள். குழந்தையிடம், 'ஆறு மணிக்கு எழுந்து படிப்பா' என்று சொல்லிவிட்டு, அப்பாவும் ஆறு மணிக்கு எழுந்தால்... நாளாக ஆக குழந்தைக்கும் அந்தப் பழக்கம் தானாக வரும். ஆனால், அம்மா, அப்பாவின் சொல்லும் செயலும் வேறாக இருந்தால்... அவர்களே குழந்தைக்கு நெகட்டிவ் ரோல் மாடல் ஆகிவிடுவார்கள். 'பொய் சொல்லக் கூடாதுப்பா' என்று சொல்லிய அடுத்த நிமிடம் வீட்டில் இருந்துகொண்டே, 'அப்பா வீட்ல இல்லேனு சொல்லும்மா' என்று சொல்வது, குழந்தையின் மனதை பாழ்படுத்தும்.

'கூட விளையாடற பசங்களை எல்லாம் அடிக்கறா...' என்று வருத்தப்படும் பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி... சூதுவாது தெரியாத ஒரு குழந்தைக்கு யார் வன்முறையை கற்றுக் கொடுக்கிறார்கள்? வீட்டில் முதலில் யார் அந்தக் குழந்தையை அடிக்கிறார்களோ அவர்கள்தான். ஒரு காரியம் நமக்குச் சாதகமாக நடக்க வேண்டுமென்றால், ஒருவர் நமக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால் வன்முறையில இறங்கு, அடி, உதை என்று அவர்களுக்கு வன்முறையின் மீது நம்பிக்கையை உருவாக்குவது குழந்தையை கண்மூடித்தனமாக அடிக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். எனவே, இதற்கெல்லாம் தீர்வான 'பாஸிட்டிவ் டிஸிப்ளினை' பெற்றோர்கள் மட்டுமல்ல, பள்ளியில் ஆசிரியர்களும் பின்பற்றினால், அது குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!'' என்று நம்பிக்கையுடன் கூறியவர்,

''உங்க குழந்தையை தினமும் கொஞ்ச நேரம் அருகில் அமர வைத்து, அவர்களின் கண்களைப் பார்த்து, தோள் தொட்டு சிநேகமாகப் பேசுங்கள். அதற்காக நேரம் ஒதுக்குங்கள். இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால்தான் டீன் ஏஜில் பல குழந்தைகள் குடி, சிகரெட் என்று தடம் மாறுகிறார்கள். மாதத்தில் ஒரு நாள் 'என்மேல் என்ன தப்பு இருக்கு, நான் எதில் திருந்தணும்னு சொல்லுங்க..?' என்று குடும்பத்தலைவர்/தலைவி கேட்க, அதற்கு வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மேல் உள்ள குற்றம் குறைகளை தைரியமாக சொன்னால்... அந்த வீட்டில் வன்முறையின் சுவடே இருக்காது. இதையெல்லாம் ஒரு குடும்பத்தில் நடைமுறைப்படுத்தினால்... அது அந்த வீட்டில் உள்ள குழந்தைக்கு அம்மா, அப்பா மேல் மிகப் பெரிய நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கை குடும்ப நிம்மதியின் ஆதாரமாக இருக்கும். பிறகென்ன 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்று குடும்பப் பாட்டு பாடலாம்!'' என்றார் மகிழ்வுடன்.

நம் வீட்டிலும் பிராக்டீஸ் பண்ணலாமா 'பாஸிட்டிவ் டிஸிப்ளின்'? ரெடி... ஸ்டார்ட்!


 குழந்தைகளை அடிக்காதீர்கள்!

 'குளோபல் சம்மிட் ஆன் எண்டிங் கார்போரல் பனிஷ்மென்ட் அண்ட் புரமோட்டிங் பாஸிட்டிவ் டிஸிப்ளின் (Global summit on ending corporal punishment and promoting positive discipline) என்பதுதான் கருத்தரங்கின் தலைப்பு. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள 'எஸ்எம்யூ' பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குழந்தை நல சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். உலகில் 29 நாடுகளில் குழந்தைகளைத் தண்டிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்!.