Tuesday, June 7, 2011

மூச்சுடன் பேசிப்பாருங்களேன்!

'கோபமோ சந்தோஷமோ எதுவானாலும், அதற் கான உங்களோட எதிர்விளைவை ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடுங்க. ஒரு நிதானத்துக்கு நீங்க வந்ததுக்கு அப்புறம், அந்த கோபத்துக்கோ சந்தோஷத்துக்கோ 'ரியாக்ட்' பண்ணுங்க. அப்ப எடுக்கற உங்க செயல்பாடும் முடிவும் சரியா இருக்கும்!''

- இந்தக் கூற்று, நூற்றுக்கு நூறு சரியே!

சந்தோஷம் என்றால் தன்னிலை மறந்து உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதும், கோபம் வந்துவிட்டால், பூமிக்கும் வானுக்குமாக எகிறிக் குதித்து, ஆர்ப்பாட்டம் செய்து அலறித் தீர்ப்பதும், நம்மில் முக்கால்வாசி பேரின் இயல்பான குணம்.

உற்சாகக் குதியல் போட்டவர்கள், பிறகு ''அடடா..! இன்னிக்கி ரொம்பச் சிரிச்சுட்டேம்ப்பா! இதே அளவுக்கு அப்புறமா எவர்கிட்டயாவது செமடோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டு, அழப்போறேன் போலிருக்கு!'' என்று அலுப்பும் சலிப்புமாகச் சொல்வார்கள்.

அதேபோல், கோபத்தில் கூப்பாடு போட்டவர்களும், ''ஸாரி! கோபம் வந்தா எனக்குக் கண்ணுமண்ணே தெரியாதுன்னுதான் உனக்குத் தெரியுமே?! மன்னிச்சிடு... இனிமே இப்படிக் கோபப்பட்டு உன்னைத் திட்டமாட்டேன்'' என்று சட்டென்று இறங்கிவந்து மன்னிப்புக் கேட்பார்கள்.

இதில் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா? அந்தச் சந்தோஷக்காரரும் சரி, கோபக்காரரும் சரி... அதையடுத்து வருகிற சந்தோஷங்களுக்கும் கோபமான செயல்களுக்கும் மீண்டும் தங்கள் வழக்கம் போலவேதான் நடந்துகொள்வார்கள். எல்லாம் முடிந்ததும். 'ரொம்பச் சிரித்தது தப்பு' என்றும், 'கோபத்துல ரொம்பவே பேசிட்டேன்' என்றும் இயல்பு நிலைக்கு வருவார்கள். கிட்டத்தட்ட இவர்களின் சுபாவமாகவே மாறிவிடுகிறது, இந்தச் செயல்.

இந்தச் செயலுக்கும் நாம் விடுகிற மூச்சுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ... எது வந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு, தன்னையே மறந்து, எதிரில் இருப்பவர்களின் அன்பு, பாசம், நேசம், அவர்களின் ஸ்நேகம் ஆகியவற்றையெல்லாம் மறந்து, அந்தச் செய்திக்குள் அமிழ்ந்து போவது என்பது தவறான நடைமுறை.

பொதுவாகவே நம்முடைய மூச்சு சீராக, அதுபாட்டுக்கு அதன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. உங்கள் சந்தோஷத்துக்கு, நீங்கள் திக்குமுக்காடி ஆடிப்பாடினால், உங்கள் மூச்சின் இயக்கத் தில் சட்டென்று மாற்றங்கள் நிகழும். அதேபோல், கோபப்படும் படியாக சம்பவம் ஏதும் நடந்துவிட்டால், 'ஆய்... ஊய்' எனக் கத்துகிறோம்; 'விட்டேனா பார்; தொலைச்சுப்புடுவேன்; பின்னிப்புடுவேன்...' என்றெல்லாம் சத்தம் போடுகிறோம். இந்த ஆவேசமும் கூச்சலும் நம் மூச்சுக்குச் சத்ரு என்பதை நாம் உணர்வதே இல்லை.

அதனால்தான் கோபப்பட்டுக் கத்துபவர் பலருக்கு மூச்சடைப்பு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியன ஏற்படுகின்றன. மூச்சில் பரவுகிற உஷ்ணம், குழாய்களின் வழியே பாய்கிற ரத்தங்களுக்கும் செல்லும். அது, உஷ்ணத்தை மூளையில் கொண்டு சேர்க்கிறபோது, இன்னும் வேகமாக அனைத்து உறுப்புகளுக்கும் பரவும். நீங்கள் மோட்டார் பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று சடன்பிரேக் போடுகிறீர்கள். வேகமாக ஓடிக்கொண்டிருந்த டயரை, இப்படிச் சட்டென்று நிறுத்தும்போது, உங்களின் மோட்டார் சைக்கிள் ஒரு திருகு திருகி, செல்லும் திசைக்கு மாறாக வேறு திசை நோக்கித் திரும்பி நிற்பது இயல்புதானே?! சீராகச் செல்லும் வாகனத்தில் சட்டென்று வேகம் கூட்டுவதும் தவறு; வேகமாகச் செல்லும் வாகனத்தில் சடன் பிரேக் போடுவதும் தவறு! இதற்காகத்தான் கியர் சிஸ்டம் இருக்கிறது. நாலாவது கியரில் இருந்து, மூன்று இரண்டு, ஒன்று என்றாக்கி பிரேக்கை அழுத்த... வண்டிக்கும் சேதமில்லை; நமக்கும் ஆபத்து இல்லை.

வண்டியில் ஏறி பயணம் செய்வதற்கே இப்படியெனில், வாழ்க்கைப் பயணத்தில் நாம் மூச்சை எப்படியெல்லாம் ஆராதிக்கவேண்டும்; ஆராயவேண்டும்; ஆழ்ந்த ஈடுபாடு காட்டவேண்டும்?! ஆகவே, கோபமோ சந்தோஷமோ... சட்டென்று உணர்ச்சிவசப்படாதீர்கள்; தாம்தூமென்று குதிக்காதீர்கள். ஒரு ஐந்து நிமிடம் மௌனமாக இருங்கள். அந்தக் கால அவகாசம், சிந்தனைக்கு இடம் கொடுக்கும். அப்படிச் சிந்திக்கும்போது, நடந்தவை குறித்து மிகச் சரியாக யோசிக்கமுடியும். அந்த யோசனையின் இறுதியில், தெளிவு பிறக்கும்; நல்லதொரு தீர்வு கிடைக்கும். அப்படித் தீர்வு கிடைத்துவிட்டால்... ஆத்திரமாவது, கோபமாவது! சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் குதிக்கவும் மாட்டோமே?!

ஆக, எது வந்தாலும் ஏற்று, நிதானமாக யோசிக்கத் துவங்கிவிட்டால், மூச்சின் சீரான ஓட்டத்தில் எந்தப் பாதகமும் இல்லை. மூச்சு சீராக இருந்தால்தான், வாழ்க்கையும் சீராக இருக்கும்!

'என்னடா இது, சுவாமி மூச்சுக்கு முந்நூறு தடவை மூச்சு பற்றியே சொல்கிறாரே' என்று அலுத்துக் கொள்ளாமல், நம் மூச்சுக் காற்றை, அதன் இயக்கத்தைக் கவனிப்போம், வாருங்கள்.

தலைவலி, காய்ச்சல், நெஞ்சு எரிச்சல் என ஏதேனும் பிரச்னை ஏற்பட, மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறீர்கள்தானே?! அங்கே, மருத்துவர் உங்களிடம் கேள்விகள் பலவும் கேட்டுவிட்டு, அப்படியே 'ஸ்டெதஸ்கோப்' எனும் உபகரணத்தை எடுப்பார். ஸ்டெத்தின் ஒரு முனையை உங்களது நெஞ்சுப் பகுதியில் வைத்தபடி, அதன் இன்னொரு நுனியில் உள்ள இரண்டு முனைகளைத் தன் காதுகளில் செருகிக்கொள்வார்.

'எங்கே... நல்லா மூச்சு விடுங்க...' என்று சொல்லிவிட்டு, அந்த மூச்சின் தாள லயத்தை, 'லப் டப்'பைக் கேட்டுக்கொண்டே, முதுகுப் பக்கத்துக்குச் செல்வார். 'இன்னும் நல்லா இழுத்து விடுங்க' என்பார்; உற்றுக் கவனிப்பார்.

உங்கள் உடலுக்குள் இருந்தபடி, உங்களை இயக்குகிற மூச்சு எங்கிருந்து புறப்பட்டு, எங்கே முடிந்து, பிறகு எங்கிருந்து துவங்கி, நடுவே எந்தெந்த இடங்களில் பயணித்து, எங்கே முடிகிறது... என்பதான மூச்சின் பயணத்தை உங்கள் டாக்டர் போலவே நீங்களும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தால்தான், மூச்சின் முக்கியத்துவம் தெரியும் உங்களுக்கு!

எப்படிக் கவனிப்பது? ஸ்டெதஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் வேண்டாம். நான் சொல்வது போல் செய்யுங்கள்.

சுகாசனத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். அதாவது, சாப்பிடுவதற்காகத்  தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருப்போமே, அதுதான் சுகாசனம். அப்படி உட்கார்ந்துகொண்டு, முதுகை நேராக்கி, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; தலையை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ சாய்க்காமல், நேர்க்கோட்டில் வைத்திருங்கள். அப்படியே கண்களை மூடி இரண்டு நிமிடம், இரண்டே இரண்டு நிமிடம்... மெள்ள மூச்சு இயங்குகிற பகுதியில் உங்களது கவனம் மொத்தமும் இருக்கட்டும்.

அந்த மூச்சுக்கும் உங்களுக்குமான தொடர்பு மட்டுமே இருக்க வேண்டும். ஆழ்ந்தும் கூர்ந்தும் கவனியுங்கள். அந்த மூச்சுதான் நீங்கள்; அந்த சுவாசம்தான் நீங்கள். கவனம் சிதறாமல், எந்தப் பிரயத்தனமும் செய்யாமல், ஒரு பாட்டு கேட்பதுபோல, புத்தகம் படிப்பதுபோல, குழந்தையைக் கொஞ்சுவதுபோல... மூச்சைக் கவனியுங்கள்.

'என்ன, நல்லா இருக்கியா?' என்று, முடிந்தால் மூச்சுடன் பேசிப்பாருங்களேன்!