Thursday, April 23, 2015

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?


காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.

இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.

எது மலச்சிக்கல்?
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை 'மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது 'மலச்சிக்கல்'.

அடிப்படைக் காரணம்
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது. அந்தக் காரணங்கள்?

தூண்டும் காரணிகள்
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆகஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.
வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் 'அலுமினியம்', 'கால்சியம்' கலந்துள்ள 'ஆன்டாசிட்' மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், 'ஓபியம்' கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை. இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும்.

காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும். மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், 'டைவர்ட்டிகுலைட்டிஸ்' எனும் குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும்.
இளம் பெண்களுக்குப் பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு 'இடியோபதிக்டிரான்சிட் கோலன்' எனும் நோய் வரலாம். அப்போது அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.

எப்போது கவனிக்க வேண்டும்?
மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்:
1. மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது.
2. மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.
3. குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.
4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.
5. மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.
6. உடல் எடை குறையும்போது.
7. காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.
8. மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால்.
9. வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால்.
10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால்.

சிசிச்சை என்ன?
மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம். இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்கிறது. வயதைப் பொறுத்து, அடிப்படை நோயைப் பொறுத்து, மலச்சிக்கலின் தன்மையைப் பொறுத்து மருந்து தேவைப்படும். ஆகவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிடுங்கள். மலச்சிக்கலுக்குச் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். குறிப்பாக, பேதி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அவை பாதிக்கும். பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். 'எனிமா' தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா' தருவதும் நல்லதல்ல.

தவிர்ப்பது எப்படி?
மலச்சிக்கலைத் தவிர்க்க, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.

நார்ச்சத்து உதவும்!
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com