Saturday, March 22, 2014

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பயிற்சி

undefined

ள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் குழந்தை, படிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி, எழுதச் சொன்னால், 'அம்மா டாய்லெட் போகணும்', 'கை வலிக்குது', 'தண்ணி குடிக்கணும்...' என்று ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி தவிர்க்கிறார்களா? 'எழுத மாட்டேன்' என்று அடம் பிடிக்கிறார்களா? அப்படியானால் அந்தக் குழந்தை கவனிக்கப்பட வேண்டிய குழந்தை! 

''இதுபோன்ற குழந்தைகளுக்கு 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia) எனப்படும் 'கற்றலில் குறைபாடு' (Specific Learning Difficulty) இருக்கக்கூடும். இளம் வயதிலேயே இந்தக் குறைபாட்டைக் கண்டுபிடித்து உரிய பயிற்சி கொடுத்தால், இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும்'' என்கிறார், கிளினிக்கல் நியூரோ சைகாலஜிஸ்ட் டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன். அதீத சுறுசுறுப்பு மற்றும் கவனக்குறைவு, கற்றலில் குறைபாடு துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்துவருபவர். அந்தக் குழந்தைகளுக்காக, சென்னையில் சிறப்புக் கல்வி மற்றும் ஆலோசனை மையங்களை நடத்தி வரும்இவரிடம் பேசியபோது.....

''கற்றலில் குறைபாடு என்பது, பிறப்பிலேயே மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் 'நரம்பியல் செயல்திறன் குறைபாடு' (Neuro biological disorder). பிரசவத்தின்போது குழந்தையை ஆயுதம் போட்டு எடுத்தல் அல்லது கொடி சுற்றிப் பிறத்தல், வளர்ச்சியில் பின்தங்குதல் (அதாவது தவழ்தல், நடத்தல் போன்ற அந்தந்த வயதுக்குரிய செயல்பாடுகள் தாமதம் ஆவது), பேறுகாலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், மரபணு சார்ந்த கோளாறுகள் போன்ற காரணங்களால், குழந்தைக்கு 'டிஸ்லெக்ஸியா' ஏற்படுகிறது.

இதில், கர்ப்பமான 3, 4-வது மாதத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. இரு வேறு மொழிகளைத் தத்தம் தாய்மொழியாகக்கொண்ட தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு, இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அறிகுறிகள் என்ன?

 முதலில் எழுதுவதில் சிரமம் ஏற்படும்.

 பள்ளியில் போர்டைப் பார்த்து எழுத மாட்டார்கள்.

 ஹோம்வொர்க் முழுமையாகச் செய்ய மாட்டார்கள்.

 சற்றுப் பெரிய குழந்தைகளுக்கு, பள்ளிப் பாடங்களில் விடைகள் முழுமையானதாக இருக்காது. மேலும் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை அதிகம் இருக்கும்.

 'எழுது' என்று சொன்னாலே, ''அப்பா, போன் வந்திருக்கு'', ''மம்மி, பசிக்குது'' என்று பெற்றோரின் கவனத்தைத் திருப்புவார்கள்.

 பள்ளியில் பென்சில், நோட்டு, ரப்பர் என்று எதையாவது விட்டுவிட்டு வருவார்கள்.

 தொடர்ச்சியாக ஓர் எழுத்தைத் தவறாகவோ, தலைகீழாகவோ எழுதுவார்கள். விட்டுவிட்டு எழுதுதல், வரிசை மாற்றி எழுதுதல், ஆங்கிலத்தில் பெரிய, சிறிய எழுத்துகளை மாற்றி மாற்றி எழுதுதல், கண்ணாடியில் தெரிவதுபோல, இடம் வலமாக மாற்றி எழுதுதல் போன்றவை.

இந்த அறிகுறிகள் தெரிய வந்தாலும், பெற்றோர்கள் மிகச் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கின்றனர். மதிப்பெண் குறையும்போதுதான் தெரியும், பிள்ளையிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று. எப்போதுமே பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை வைத்துப் பார்க்க வேண்டும். மதிப்பெண்களை வைத்து மட்டுமே பார்ப்பதில் பலன் இல்லை.

'பள்ளிக்கூடம் போக மாட்டேன்' என்று அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளின் மேஜர் பிரச்னையே இதுதான். எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகள் அப்போதுதான் எழுத ஆரம்பிப்பதால், விரல்களை ஒருங்கிணைக்கும் பயிற்சி மெதுவாகத்தான் வரும். அதனால், 2-ம் வகுப்புப் படிக்கும்போது இதைக் கண்டுபிடித்துவிடலாம். நம் நாட்டில் இப்போது கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள் மூன்றில் ஒரு பங்கு இருக்கின்றனர்.

இந்தப் பிரச்னையை 12 வயதுக்குள் கண்டுபிடித்தால், சுலபமாகச் சரிசெய்யலாம். ஏனெனில் மூளையின் வளைந்துகொடுக்கும் தன்மை (neuro plasticity) இந்த வயதில்தான் அதிகமாக இருக்கும். 12 முதல் 16 வயது வரை, ஓரளவு சரிசெய்யலாம். ஆனால் 25 சதவிகிதம்தான் வெற்றி வாய்ப்பு உண்டு. இந்தக் குறைபாடு இருக்கும் பல குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். ஐ.க்யூ.விற்கும் இந்தக் குறைபாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் குறைபாட்டுக்கு ஏற்ப, தனித்தனிப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது' என்றார் டாக்டர் விருதகிரிநாதன்.

12 ஆண்டுகளாக, கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பயிற்சியும்                       கவுன்சிலிங்கும் வழங்கி வரும் ஈரோட்டைச் சேர்ந்த கவிதா கூறுகையில்,                                           'தங்கள் பிள்ளையின் படிப்பு மீது பெற்றோர்கள் மிகுந்த கவலைகொள்வது இயற்கை. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளையின் படிப்பு மந்தமானதற்கான உண்மையான காரணத்தை அறியாதவர்களாக, ''வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்காமல் கோட்டைவிட்டு விடுகிறான். ஏனோதானோவென்று தேர்வு எழுதுகிறான்' என்று கோபப்படுகின்றனர். மேலும், விடைத்தாள்களில் கையெழுத்திட மறுப்பதோடு, பிள்ளையை அடித்து, உதைக்கவும் செய்கின்றனர். இதைத் தவிர்த்து, படிப்பில் பின்தங்கிய பிள்ளைகளிடம் கனிவாகப் பேசி, கலந்துரையாடி, அவர்களது நடவடிக்கைகளை நிதானித்துக் கவனித்து உண்மையான காரணங்களை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

டிஸ்லெக்ஸியா என்பது நோய் அல்ல. மூன்று முதல் ஏழு வயது வரையுள்ள குழந்தைகளிடம் காணப்படும், கற்றலில் குறைபாடுள்ள ஒரு பாதிப்பு. இந்தப் பாதிப்புள்ள குழந்தைகளை உயர்கல்விச் சேவை அளிக்கும் பள்ளியில் சேர்த்து, அங்கு அவர்களுக்கான தனியான கவனிப்புடன் பாடங்களை நடத்தினால் குறுகிய காலத்துக்குள் இயல்பான நிலைக்குக் கொண்டுவர முடியும்.

இந்தப் பாதிப்புடைய குழந்தைகள் கற்றல் திறனில் வேறுபடுவர். இவர்கள் எழுத்துக்களின் வித்தியாசம் மற்றும் அவற்றின் ஒலி அமைப்பை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் குழப்பமடைவர். வகுப்பில் சக மாணவர்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண்கள் பெறும்போது, தாழ்வுமனப்பான்மைக்கு உள்ளாவர்; அதனால், தனித்திருக்கவும் விரும்புவர். நமது மாநிலத்தில் டிஸ்லெக்ஸியா பற்றிய விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை. சில வருடங்களாகத்தான் அதுபற்றி ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்துள்ளனர். பல காலமாக இந்தக் குறைபாடு இருந்தாலும், தங்கள் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு உள்ளது என்பதை ஏற்க மறுக்கின்றனர். அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அதன் மருத்துவ செலவுகள் தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாகவே உள்ளது. எனவே, அரசு இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்' என்கிறார் கவிதா.

பெற்றோர்களும் படிக்கலாம்!

கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஓர் ஆண்டு டிப்ளமோ படிப்பும், 3 மாதச் சான்றிதழ் பயிற்சியும் இருக்கின்றன. அதில் மொழியின் அடிப்படை மற்றும் கற்பிக்கும் விதங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இடக்கைப் பழக்கமா...

சில குழந்தைகள் ஆரம்பத்திலேயே இடது கையால் எழுதுவார்கள். அப்படி இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை, சிலர் வற்புறுத்தி வலது கைப் பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பார்கள். அது தவறு. ஏனெனில், இடதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு, வலது மூளைதான் மொழி அறிவுக்கானது. அதை மாற்ற முயற்சிக்கும்போது, மூளையில் குழப்பம் ஏற்படும். அவர்களாகக் காலப்போக்கில் மாற்றிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால், கட்டாயப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டால் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

டாக்டர் மணி, மன நல மருத்துவர், கோயம்புத்தூர்

''இந்தக் குழந்தைகள் மற்றவர்களைப் போன்று சராசரியான அல்லது மேம்பட்ட நுண்ணறிவுபடைத்தவர்களாக இருப்பார்கள். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளையும், டிஸ்லெக்ஸியா பாதித்த குழந்தைகளையும் ஒப்பிட முடியாது.  இவர்கள், முற்றிலும் மாறுபட்டவர்கள். பள்ளி மாணவ, மாணவியரில் 10 முதல் 15 சதவீதப் பேருக்கு ஏதோ ஒரு விதத்தில் டிஸ்லெக்ஸியா இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற பாதிப்புடைய மாணவ, மாணவிகள் உள்ளனர். டிஸ்லெக்ஸியா பாதிப்புக்கு எவ்விதமான மருந்து, மாத்திரைகளும் இல்லை. இந்தப் பாதிப்புடைய குழந்தைகளைப் பராமரிப்பதில் பெற்றோர் அதிகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாதிப்பில் இருந்து குழந்தையை மீட்டெடுக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், உடனடியாக உளவியல் ஆலோசகர்களை அணுகுவது அவசியம்!'

டாக்டர் லட்சுமணன், மருத்துவ உளவியல் ஆலோசகர்

'குழந்தை டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய, இரண்டு மணி நேரம் தேவை. முதலில், குழந்தையின் அறிவுத்திறன் பரிசோதிக்கப்படும். அதன் பின், என்ன காரணத்தினால் இந்தக் குறைபாடு உள்ளது என ஆராயப்படும். சில குழந்தைகளுக்கு எழுதுதலில்கூட பிரச்னை இருக்கும்; இந்தப் பாதிப்பை, 'டிஸ்கிராபியா' (Disgraphia) என்கிறோம். சில குழந்தைகள் கணக்குப் போடுவதில் பின்தங்கியிருப்பார்கள். இதை 'டிஸ்கால்குலியா' என்போம்.  இது எல்லாவற்றாலும் பொதுவாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு பெயர்தான் டிஸ்லெக்ஸியா. டிஸ்லெக்ஸிக்ஸ் மாணவர்களுக்கு தேவையான படிப்பு நடத்தும்முறை முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகளின் பார்த்தல், கேட்டல் முறைகளோடு, தொடுதல், வாசனை, சுவை போன்ற புலன் சம்பந்தப்பட்ட போதனை முறைகளை கையாண்டு கற்றல் திறனை அதிகப்படுத்துகிறாம்.   தொடுமணல் முறையிலும் பாடம் நடத்துகிறோம். அதாவது, கூடையில் மணல் பரப்பி எழுத்துக்களை அதில் எழுதிக் காட்டியும் பாடம் நடத்துகிறோம். தீவிர பாதிப்புடைய மாணவர்களுக்கு சிறப்புப் பாட வகுப்புகளையும் நடத்துகிறோம்.