Saturday, September 1, 2012

தந்தையின் குடிப் பழக்கம் குழந்தையை பாதிக்கும்

''சென்னையில் வசிக்கும் ராமு, மளிகை வியாபாரி. நடுத்தரக் குடும்பம். இரண்டு பெண் குழந்தைகள். 10 வருடங்களுக்கு முன்பு, சளி - காய்ச்சலோடு இருந்த தன் மூன்று வயதுப் பெண் குழந்தை சுதாவைச் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தார் ராமு. உடல்நலம் சரியில்லாமல் போனாலும் அந்தச் சிறுமி சுதா, ஒரு இடத்தில்கூட நிற்காமல் துறுதுறுவென அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருந்தாள். சுதா குட்டி வரும்போதெல்லாம் அவள் சிரிப்புக்கு மருத்துவமனையே அடிமையாகிவிடும். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதாவின் தாய் உடம்புக்கு முடியாமல் சிகிச்சைக்கு வந்திருந்தார். கூடவே வந்திருந்தாள் சுதா. சற்றே வளர்ந்திருந்தாள். ஆனால், அவள் முகத்திலோ சிரிப்பையே பார்க்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் சுதா சிரிக்கவே இல்லை. இதுபற்றி அந்தத் தாயிடம் கேட்டபோது, 'என் கணவருக்கு குடிப் பழக்கம் வந்திடுச்சு டாக்டர். குடும்பம், வியாபாரம், குழந்தைங்கன்னு எதைப் பத்தியும் கவலைப்படாமல், தினமும் குடிக்கிறாரு. பணம் தரலேன்னா, அடி உதைதான். நேத்திக்குக்கூட செவுட்டுல அறைஞ்சிட்டாரு. காது வலில ராத்திரியெல்லாம் துடிச்சுப்போயிட்டேன்' என்று கண்ணீர்விட்டு அழுதார்.

கணவர் ராமுவை நேரில் அழைத்து வரச் சொன்னேன். கணவர் வர மறுப்பதை போனில் சொல்லி அழுதார். இப்படியிருக்க... சில மாதங்கள் கழித்து ஒருநாள் கால் எலும்பு முறிந்த நிலையில் சுதாவை அலறியடித்துக்கொண்டு என்னிடம் தூக்கி வந்தார்கள். எப்படி அடிபட்டது என்று கேட்டபோது, மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துவிட்டாள் என்று சொன்னார்கள். சிறுமி சுதாவுக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்து அவரை ஒரு சில நாட்களில் குணமாக்கினோம்.

இதில் கவனிக்க வேண்டிய அதிர்ச்சியான விஷயம் என்ன என்றால், சிறுமி சுதா ஓடி விளையாடும்போதும் கீழே விழுந்து காலை முறித்துக்கொள்ளவில்லை. சம்பவம்  நடந்த நாளன்று குடிப்பதற்குக் காசு கேட்டு ராமு தன் மனைவியைப் போட்டு அடித்திருக்கிறார். காசு கிடைக்கவில்லை என்பதால், அவரது கோபம் அதிகமாகி சண்டை பெரிதாகி இருக்கிறது. அப்போது மனைவியை வீட்டைவிட்டு வெளியே தள்ளியிருக்கிறார். கோபத்தில் சுதாவின் அம்மா மொட்டை மாடிக்குச் சென்றுவிட, அம்மாவைத் தேடிக்கொண்டு மாடிப்படிகளின் வழியாக கீழே இறங்கி இருக்கிறாள் சுதா. அங்கே அம்மாவைக் காணவில்லை என்பதால்... மீண்டும் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி இருக்கிறாள். ஆனால், குடிகார அப்பா கதவைத் திறக்கவில்லை. அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுதா மாடிப் படிக்கட்டுகளில் உருண்டிருக்கிறாள். அழுத மயக்கத்தினால் குழந்தை கால் இடறி விழுந்துவிட்டதாக அதன் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், குழந்தை தெரிந்தேதான் மாடிப் படிக்கட்டுகளில் உருண்டிருக்கிறது என்பதை அதனிடம் பேசியபோது புரிந்துகொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு அந்த பிஞ்சு நெஞ்சம் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறது. கால் கையை முறித்துக்கொண்டாலாவது அப்பாவின் கவனம் தன் பக்கம் திரும்பும். வீட்டின் கதவு திறக்கும் என நினைத்திருக்கிறாள் சுதா.

தனக்கான அன்பும் அரவணைப்பும் கிடைக்காதபோது ஒரு சிறுமியின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே உதாரணம். தந்தையின் குடிப் பழக்கம் அந்த வீட்டில் உள்ள குழந்தையைத்தான் பெரிதும் பாதிக்கும். அதிலும் மூத்த குழந்தையைத்தான் அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு எந்த உணர்வு மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டியது எல்லாப் பெற்றோர்களுக்கும் கடமை. அன்பு, பாசம், அக்கறையுடன் தேவையான பாதுகாப்பும் உதவியும் கிடைக்கும்போதுதான் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.

சில குழந்தைகள் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில குழந்தைகள் கோபம், ஆத்திரத்தை வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகளோ எப்போதும் கவலையோடு இருப்பார்கள். இப்படி, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாகத் தங்களது மன அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றன. குடும்பத்தில் தொடர் குழப்பங்கள், வாக்குவாதங்கள், குழந்தை - உறவினர்களுடனான நெருக்கத்தில்  ஒரு விரிசல், நட்பில் உண்டாகும் மனவருத்தம், பிரிவால் ஏற்படும் இழப்பு அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள், பள்ளி வட்டாரத்தில் ஏற்படும் தோல்விகள் மற்றும் நோய்கள், பெற்றோரைப் பாதிக்கும் மன உணர்வுகள்... இவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால்கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிவிடுவார்கள் குழந்தைகள். வெகு விரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகிவிடுகிறார்கள். ஆகவே, குடும்பத்தை அமைதியும் அன்பும் தவழும் பூங்காவாக வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.''