Sunday, January 22, 2012

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


வேலை தேடுகிற பலபேருக்கு நேர்முகத் தேர்வு என்றாலே சிம்ம சொப்பனம்தான். பல தடை கற்களைத் தாண்டி வந்துவிட்டு நேர்முகத் தேர்வில் இடறி விழுந்தவர்கள் நிறைய பேர். தேவையான கல்வித் தகுதிகள், திறன்கள் இருந்தும் அதை நேர்முகத் தேர்வில் சரியாக பிரதிபலிக்க முடியாததே இதற்கு காரணம். ஆனால், நாம் நினைக்கிற மாதிரி இன்டெர்வியூவில் தேர்ச்சி அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை.

வேலைக்கு நேர் முகத் தேர்வு நடத்துவதன் நோக்கம் சிக்கலான கேள்விகளுக்கு சமயோசிதத்துடன் எப்படி பதில் தருகிறீர் கள், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகளைச் சமாளிக்கும் சாதுர்யம்

(smartness), அறிவு முதிர்ச்சி உங்களிடம் உள்ளதா? நீங்கள் தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் நோக்கும் (Attitude) உடையவரா? போன்ற வற்றைத் தெரிந்து கொள்ளத்தான். அதனால் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்தாலே பெரும்பாலான சமயங்களில் நேர்முகத் தேர்வை எளிதாகச் சமாளித்துவிடலாம். இனிவரும் சில வாரங்களில் இந்த அடிப்படை விஷயங்கள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நேர்முகத் தேர்வு பற்றி மனதில் நினைக்கும் போது நமக்குத் தோன்றும் காட்சி ஒரு பெரிய அலுவலக அறையில் அலுவலரும், அவர் மேஜைக்கு எதிரே ஒரு நாற்காலியும் இருக்கும் என்பதுதானே! இது ஒரு வகையான இன்டெர்வியூ முறைதான். இதுதவிர வேறு விதங்களிலும் இன்டெர்வியூ நடத்தப்படலாம். அதனால் வெவ்வேறு விதமான நேர்முகத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்று இப்போது பார்க்கலாம்.

நடத்தைச் சார்ந்த (Behavioural) இன்டெர்வியூ: இது மேலோட்டமாக இல்லாமல் உங்கள் திறன்களை சரியாக மதிப்பிட பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான, சவாலான சூழல்களில் உங்கள் ரியாக்ஷன் என்ன? உங்களிடம் உள்ள திறன்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்துகிறீர்களா? என்பதை தெரிந்து கொள்வதே இந்த இன்டெர்வியூவின் நோக்கம். இந்த முறையில் கேட்கப்படும் சாம்பிள் கேள்விகள் சில:

உங்கள் தலைமைப்பண்பைப் பயன் படுத்திய சூழல் பற்றி சொல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தோல்வி என்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?


இதுபோன்ற கேள்விகளைப் புரிந்து கொண்டு யோசித்து தெளிவாக பதில் தருவது மிகவும் அவசியம். முடிந்தவரை மிகவும் பெர்சனலான விஷயமாக இல்லாமல் வேலை, கல்விச்சூழல்களில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், வேலை விளம்பரத்தில் எதிர்பார்க்கப்படும் திறன்கள் (தலைமைப்பண்பு, குழு உணர்வு போன்றவை) பற்றி சொல்லியிருந்தால் அவை தொடர்பான உங்கள் அனுபவங்களை முன்பே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் கற்பனை பதிலைத் தரவேண்டாம்.

ஸ்ட்ரெஸ் (Stress) இன்டெர்வியூ: எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் உங்களை இன்னும் பயமுறுத்துவதே இந்த முறையின் நோக்கம். இதில் இன்டெர்வியூ நடத்துபவர் வேண்டுமென்றே உங்களிடம் பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை தூண்டக்கூடிய கேள்விகளை அடுத்தடுத்து கேட்பார். அதுபோன்ற தருணங்களில் எதிர்கேள்வி கேட்காமல், உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடும் புன்னகையோடும் பதில் சொல்லுங்கள். இதுவே வெற்றிக்கான வழி.

குழு (Panel இன்டெர்வியூ: இது ஒரு நபரை பல பேர் இன்டெர்வியூ செய்யும் முறை. சிலருக்கு இன்டெர்வியூ அறையில் நுழைந்து பல பேர் எதிரில் அமர்ந்திருப்பதைப் பார்த்த வுடன், சிங்கக் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ஆட்டுக்குட்டியைப் போல நடுக்கம் வந்துவிடும். எதிரில் அமர்ந்து இருப்பவர்களும் மனிதர்களே என்பதை நினைவில் வைத்துக்கொண்டாலே இந்த பயம் போய்விடும்.

பெரும்பாலான சமயங்களில் முதல் கட்ட இன்டெர்வியூவுக்குப் பின் பேனல் இன்டெர்வியூ நடத்தப்படும். இதில் பல்துறை சார்ந்தவர்கள் இருப்பார்கள். சில சமயம் உளவியல் நிபுணர்களும் இருக்கலாம். சில சமயம் ஸ்ட்ரெஸ் இன்டெர்வியூ போல இதிலும் உங்களை நோக்கி சரமாரியாக கேள்விக்கணைகள் வீசப்படலாம். அதைக் கண்டு பதறாமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தரவும்.

லன்ச்/டின்னர் இன்டெர்வியூ: பன்னாட்டு நிறுவனங்களில் சில பதவிகளுக்கு அப்ளை செய்யும்போது அவர்கள் உங்களை ரெஸ்டாரன்டிலோ, காபி ஷாப்பிலோ சந்திக்க அழைக்கலாம். உணவு அருந்தும் போது சாதாரணமாகப் பேசுவதுபோல உங்களை இன்டெர்வியூ செய்வார்கள். இதன் நோக்கம் பொது இடத்தில் ரிலாக்ஸான மனநிலையில் உங்கள் நிஜ குணம்/நடத்தை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான். இத்தகைய இன்டெர்வியூக்கு அழைக்கப்பட்டால் சரியான நேரத்துக்குச் சற்று முன்பே சென்றுவிடுவது நல்லது. ரெஸ்டாரன்ட் என்பதால் ஜிகுஜிகு உடைகளை அணியாமல் செமிஃபார்மல் அல்லது நல்ல ஸ்மார்ட் கேசுவல் (Smart casual) உடைகளை அணியவும். மேஜை கரண்டி, முள் கரண்டி, கத்தி, நாப்கின் போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை முன்பே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். டேபிள் மேனர்ஸை கடைப்பிடியுங்கள். பீர், ஒயின் போன்ற விஷயங்களைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். வெயிட்டர்களிடம்கூட பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.

டெலிபோன், ஸ்கைப் (Skype) இன்டெர்வியூ: பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி நம் நாட்டு நிறுவனங்களும் தற்போது இம்முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு கலாசாரமாக இருந்தால் நம் நாட்டிற்கும் அவர்களுக்கும் உள்ள காலவேறுபாட்டை சரியாக கணக்கிடவும். முடிந்தவரை லேண்ட் லைன் போனை பயன்படுத்துவது நல்லது.

சத்தம், குறுக்கீடு இல்லாத அறையில் பேசுவது அவசியம். உங்கள் போனில் உள்ள கால் வெயிட்டிங் ஆப்ஷனை துண்டித்துவிடவும். கேட்கப்படும் கேள்விகளைக் குறுக்கிடாமல் முழுமையாக கேட்டபின் பதில் தரவும். பேப்பர், பேனா, உங்கள் ரெஸ்யூம் போன்றவற்றை எதிரில் வைத்திருப்பது அவசியம். ஸ்கைப் இன்டெர்வியூ (வீடியோ கான்பரன்ஸ்) என்றால் தடைபடாத, வேகமான இன்டெர்நெட் தொடர்பை பயன்படுத்தவும். லேப்டாப் பயன்படுத்தினால் பேட்டரி முழுசார்ஜில் இருக்கட்டும். டெலிபோன் இன்டெர்வியூ இருந்தால்கூட ஃபார்மல் உடையில் புன்னகையோடு பதில் சொல்லுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும்.


சி.ஏ. படிப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐ.சி.டபிள்யூ.ஏ.?

காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி. இந்த படிப்பு எங்கு படிப்பது? வேலைவாய்ப்பு எப்படி? என்ற கேள்விகளுக்கு எக்ஸலன்ட் கோச்சிங் சென்டரின் ஆசிரியர் ஜி.பி.ஸ்ரீவத்சன் எஃப்.சி.ஏ., எஃப்.ஐ.சி.டபிள்யூ.ஏ. கூறுகிறார்.

''இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா' என்பது கொல்கத்தாவில் இருக்கிறது. இதன் மூலமாகத்தான் இந்த படிப்பை படிக்க முடியும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இந்த இன்ஸ்டிடியூட்டில் விண்ணப்பித்து படிப்பைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் மட்டும் தேர்வு நடைபெறும். வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் இந்த படிப்பை படிக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், ஜூன் மற்றும் டிசம்பரில்தான் தேர்வு எழுத முடியும்.

இந்த படிப்பில் மூன்று நிலை உள்ளன. ஃபவுண்டேஷன், இன்டெர்மீடியேட், ஃபைனல் ஸ்டேஜ் என இந்த மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். சி.ஏ. படிப்பில் வரக்கூடிய காஸ்டிங், அக்கவுன்ட்ஸ், வரி மற்றும் சட்டப் படிப்புகள் இந்தப் படிப்பிலும் இருக்கிறது. பி.எஸ்.சி., இன்ஜினீயரிங் என எந்த இளநிலை பட்டம் முடித்தவர்களும் இந்த காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பை படிக்கலாம். இளநிலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக இன்டெர்மீடியேட் நிலைக்குப் போகலாம். அவர்கள் ஃபவுண்டேஷன் நிலை படிக்க வேண்டியதில்லை.

இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் மாணவர்கள் இந்த படிப்பை படிக்கிறார்கள். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி அடைகிறார்கள். காரணம், இந்த படிப்பின் கடினமான தன்மையே. இன்டெர்மீடியேட் நிலையில், இரண்டு குரூப் இருக்கிறது. இந்த குரூப்பில் மூன்று பேப்பர்கள் இருக்கும். இந்த மூன்று பேப்பர்களிலும் தலா 40 மதிப்பெண் குறைந்தபட்சமாகவும், மூன்று பேப்பரின் மதிப்பெண்னை கூட்டினால் 150 மதிப்பெண்களும் வர வேண்டும்.

இந்த இரண்டு கண்டிஷனில் ஒன்று தவறினாலும் அந்த குரூப் பேப்பர்கள் அனைத்தையும் எழுத வேண்டும். இப்படிதான் ஃபைனல் நிலையும் இருக்கும். இந்த தேர்வை ஏன் இப்படி கடினமாக வைத்திருக்கிறார்கள்? ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடிய திறன் படைத்தவர்களால்தான் திறமையான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்-ஆக பணிபுரிய முடியும். அதற்கு தகுந்த வகையில் மாணவர்களை தயார்படுத்துகின்றனர். இந்த தேர்வுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்ஸ்டிடியூட் மூலமாகவும், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இறுதித் தேர்வு முடிந்து தேர்ச்சியடைந்த பின்பு ஐ.சி.டபிள்யூ.ஏ. உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு!

இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், குறைந்தளவிலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்டுகள் இருக்கிறார்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் வேலைக்கும் போகலாம் அல்லது சொந்தமாக காஸ்ட் அக்கவுன்டிங் பிராக்டீஸ் செய்யலாம். வேலைக்குப் போக நினைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் ஃபைனான்ஸ், டிரஷரி, பட்ஜெட்டிங், காஸ்டிங், ஃபாரக்ஸ் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் ஆடிட்டிங் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம்.

இந்த படிப்பில் நல்ல ரேங்க் ஹோல்டர், கிரேடு வாங்கியவர்கள் எனில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மாதம் நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்!'' அம்மாடியோவ்!

-