Monday, May 9, 2011

உட்காரும் முன் ஒரு நிமிஷம்...


வலி தீர்க்கும் வழிகள்

லுவலக இருக்கையிலேயே கட்டிப்போட்ட கணக்காக உட்கார்ந்து இருப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.

இருக்கையிலேயே அமர்ந்து இருப்பதன் முதல் அபாயம் கழுத்து மற்றும் முதுகு வலி. இத்தகைய  வலிகளில் இருந்து மீள்வதற்கான வழிகளைச் சொல்கிறார் நரம்பு சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எம்.மோகன் சம்பத்குமார்.

''பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்து இருக்கிற தசை நார்கள், சதை, இணைப்பு திசுக்கள் இதில் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் கழுத்தில் வலி வரும். இந்த வலி நான்கு விதமாக இருக்கிறது.  

நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப சிரமம் எடுத்து பணிபுரியும்போது பாதிப்பு ஏற்படும். அப்போது, வலி இருக்கிற மாதிரியான உணர்வு கழுத்து, தோள்பட்டை, பின் தலை இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும். இதை கவனிக்கவில்லை என்றால், பிரச்னைதான். கழுத்தில் லேசாகவோ, குத்துகிற மாதிரியோ வலி இருந்தால் அதுதான் கழுத்து வலியின் ஆரம்பம். கொஞ்ச நேர ஓய்வு எடுத்தால் அது சரியாகிவிடும்.

ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றும்பட்சத்தில் கழுத்து தசை இறுக்கமாகி, மறத்துப் போகும்.

இதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் வலி தொடர்ந்து இருக்கும். ஓய்வு எடுத்தாலும் குறையாது. தசை மறத்துப் போய், கழுத்து தசை இறுக்கம் அதிகமாகும். இந்நிலையை நோய் முற்றிய நிலை என்று சொல்லலாம். கழுத்து மற்றும் முதுகு வலியுடன் கூடுதலாக தலைவலி, கண் வலி, பார்வை மங்குதல் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது!'' என்றவர், நம்மை எப்படி சரி செய்துகொள்வது என்பது பற்றியும் விளக்கினார்.

''கழுத்து வலி முற்றிய நிலையில், சரி செய்ய சிகிச்சை ஒன்றே வழி!  இப்போது எல்லா அலுவலங்களிலும் கம்ப்யூட்டர் முன்னால்தான் வேலை என்றாகிவிட்டது. கம்ப்யூட்டர் முன் சரியான நிலையில் உட்கார்ந்து பணிபுரியாததால் முதலில் கழுத்து வலிப்பதுபோல் உணர்வு இருக்கும். இந்த நிலையில், உட்காருவதை தவிர்த்து, வீட்டில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். இந்தப் பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க கழுத்து தசை நார்கள், நரம்புகள், எலும்பை வலிமைப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் குணம் கிடைக்காவிட்டால் பிசியோதெரபி மூலம் வலி போக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். கழுத்துப் பட்டை, பிரஷர், மஜாஜ், கதிர் இயக்க சிகிச்சைகள் மூலமாகவும் சிகிச்சை எடுக்கலாம்!'' என்றவரிடம், வலிகளைத் தவிர்ப்பதற்கான உடற்பயிற்சி முறைகளைக் கேட்டோம்.

''உடற்பயிற்சி என்கிறபோது கழுத்து தசை எதிர்ப்பு பயிற்சியை செய்ய வேண்டும். அதாவது, கழுத்து வலியால், பாதிக்கப்பட்டவரே கன்னத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு எதிர் திசையில் தலையைத் திருப்ப வேண்டும். மேலும், நெற்றியில் கையை வைத்து அழுத்திக்கொண்டு கழுத்தை முன் பின்னாக அசைக்க வேண்டும். கழுத்து தசையை உறுதிப்படுத்தக்கூடிய கையை மேலே தூக்குதல் - பக்கவாட்டில் தூக்குதல், தோள்பட்டையை அசைத்தல் மற்றும் தூக்குதல், கழுத்தை பக்கவாட்டில், முன் பின் பக்கமாக அசைத்தல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில், சரியாகவில்லை என்றால் பிசியோதெரபி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற வேண்டும்!'' - பயம் நீக்கும் பக்குவங்களை இருக்கைப் பிரியர்கள் இனியாவது மேற்கொள்ளலாமே!