Friday, April 1, 2011

கணவனும் மனைவியும் தங்களைப் பரஸ்பரம் புகழ்ந்து கொள்வது நல்லதே!

ர் உறவினர் வீட்டுக்குச் சமீபத்தில் சென்றிருந் தேன். டிபன் நேரம். ஆகவே, வழக்கமான காபியுடன், சுடச்சுட வெங்காய பஜ்ஜியும் ஒரு தட்டு நிறையச் சட்னி சகிதம் வந்தது.

பஜ்ஜியின் பொன்னிறமும், சூடும், தோற்றமும், வாசனையும் என்னை மயக்கினாலும், எண்ணெய் மிதந்துகொண்டிருந்ததால், தயங்கினேன். ''நிறைய எண்ணெய் குடிச்சிருச்சு போலிருக்கே!'' என்று என்னையும் மீறிச் சொல்லிவிட்டேன்.

உறவுக்காரர், ''ஸ்ரீமதி!'' என்று குரல் கொடுத்தார். அடடா, இது விஷயமாகத் தன் மனைவியை டோஸ் விடப் போகிறாரோ என்று சங்கடப்பட்டேன்.

அவரின் மனைவி, ''கூப்பிட்டீங்களா..?'' என்றவாறு வந்தாள். உறவினர் சிரித்தபடியே, ''ஸ்ரீமு! சாருக்கு பஜ்ஜி கொடுத்தே! சந்தோஷம்! ஆனா, என்னை மறந்துட்டியேம்மா. வாசனை மூக்கைத் துளைக்கிறது. நாக்குலேர்ந்து ஜலம் கொட்டறது. சீக்கிரம் எடுத்துண்டு வா!'' என்றார். பிறகு என்னிடம் திரும்பி, ''ஸ்ரீமு பஜ்ஜி போட்டாளானால், இந்தத் தெருவே வாசனை பிடிச்சிண்டு வந்துடும். பஜ்ஜி அண்ட் வெங்காய பக்கோடாவில் அவளை யாரும் அடிச் சுக்க முடியாது!'' என்றார்.

சமையலறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீமதி ஒரு கணம் நின்று என்னிடம், ''இவரே ஒரு நளச் சக்ரவர்த்தி! இவர்கிட்டே சர்டிஃபிகேட் வாங் கினா, சமையல் கலையிலே டிகிரி வாங்கினாப்பலே!'' என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றாள்.

அந்த உறவுக்காரரின் வீட்டுக்குப் பல தடவை போயிருக்கிறேன். வீட்டுக்காரி செய்த ஒரு சாதாரண கறிவேப்பிலைத் துவையலைக்கூட ஆகா, ஓகோ என்று புகழ்வார். ''இன்னிக்குச் சமையலிலே ஒரு விசேஷம் பண்ணியி ருக்காள். கண்டுபிடியுங்க, பார்க்கலாம்!'' என்று புதிர் போடுவார்.

ஒன்றும் வித்தியாசமாக இருக்காது. தளதளவென்று தளராக எண்ணெய் விட்டு வதக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான்!

''டிசம்பர் ஸீஸன்லே சபா காண்ட்டீன் ஒன்றிலே, இப்படிப் பண்ணியிருந்தார்களாம். விடாமல் துளைச்செடுத்து, ரகசியத்தைக் கறந்துண்டு வந்துட்டாள்!'' என்பார்.

மனைவியும் சளைத்தவள் அல்ல! ''அவர் ஸ்ரீருத்ரம் படிச்சுட்டுத் தான் தினமும் ராத்திரி சாப்பிடுவார்'' என்று, விட்டுக்கொடுக்காமல் கணவரைப் பற்றிப் பெருமையாக ஒரு தகவலை வெளியிடுவாள்.இப்படியாக மனைவியைக் கணவன் புகழ்வதும், கணவனை மனைவி புகழ்வதுமாக... அந்தத் தம்பதியைப் பார்க்கும்போது மனசில் கொஞ்சம் பொறாமை எழும். சில சமயம், இதென்ன வந்தவர்கள் முன்னால் பரஸ்பரத் தம்பட்டம் என்ற எரிச்சலும் உண்டாகும்.

நண்பன் நாராயணனிடம், என் உறவினர் வீட்டுத் தம்பட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

''அவர்கள் எப்பவாவது சண்டை போட்டுக்கொண்டோ, உர்ரென்ற முகத்துடனோ இருந்து பார்த்திருக்கியா?'' என்று கேட்டான்.

''இல்லை'' என்றேன்.

நாராயணன் சொன்னான்... ''மனிதரும் தேவரும் ஒருவரை யருவர் தாராளமாகப் புகழ்ந்துகொள்ள வேண்டும் என்று பகவானே கீதையில் சொல்லியிருக்கிறார், தெரியுமோ? உன் உற வினர் தம்பதி அந்தக் காரியத்தைத்தான் செய்கிறார்கள். சண்டை சச்சரவில்லாமல் இருக்கிறார்கள்.''

தேவான்பாவயதானேன, தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத

'நீங்கள் தேவர்களைப் போற்றிப் புகழுங்கள்; அவர்களுக்கு வேண்டியதைப் படைத்து மகிழுங்கள். தேவர்கள் உங்களைப் போற்றி, நீங்கள் வேண்டியதை வழங்கி மகிழட்டும். பரஸ்பரம் ஒருவரையருவர் போற்றி, மேலான சுகத்தை அடைவீர்களாக!' என்று பகவான் சொல்கிறார். ஆகவே, ஒருவரையருவர்- முக்கிய மாகக் கணவனும் மனைவியும் தங்களைப் பரஸ்பரம் புகழ்ந்து கொள்வது நல்லதே!