Friday, April 1, 2011

'துறுதுறு'குழந்தை...'திருதிரு'வென விழித்தால்...

சுஜ்ஜி குட்டி பார்ப்பதற்கு அத்தனை அழகு. அவளின் பிரகாசமான கோலிகுண்டு கண்களும், துறுதுறு நடையும் எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்துவிடும். மூன்று வயதான அவளின் குறும்புகள்... அழகிய கவிதை. ஆனால்... 'அம்மா, அப்பா, மம்மு' போன்ற சின்னச் சின்ன வார்த்தைகளைத்தான் இன்னமும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறாள்.

'மூணு வயசாகியும் சரியா பேச மாட்டேங்கறாளே...' என்று அவள் அம்மாவுக்கு கவலை தூங்கவிடாமல் துரத்துகிறது.


''மூணு வயசுதானே ஆகுது... போகப் போக சரியாகிடும்... நல்லா பேசுவா, கவலைப்படாதே. எங்க மச்சினர் மகனுக்குக்கூட இப்படித்தான் அஞ்சு வயசு வரைக்கும் சரியா பேச்சு வரல...'' என்று ஆறுதல் சொன்னார் அவருடைய தோழி. ஆனாலும் இவள் மனது ஆறவில்லை; எப்போதும் இதயத்தின் ஓரத்தில் ஒரு பயம் இரவு பகலாக அரித்துக் கொண்டே இருந்தது. பெற்ற தாயல்லவா?!

ஒரு குழந்தைக்கு பேச்சும், அந்தப் பேச்சுக்கான மொழியும் மிக அவசியம். மொழி என்பது நல்லது, கெட்டதை பகுத்தறிய உதவும் அற்புதமான கருவி. அந்த மொழிதான், ஒரு குழந்தையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ''அம்மா எனக்கு பசிக்குது... பப்பு சாதம் தா'' என்று தன் பசியை, தன் தேவையை, தான் நினைக்கும் விஷயத்தை அம்மாவிடமோ... அப்பாவிடமோ சொல்ல உதவுகிறது. மொழி என்பதை, சின்னக் குழந்தை வாய் வார்த்தைகளாகத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. பிறவியிலேயே பேசும் திறனற்ற குழந்தைகள்... கண் ஜாடையாலோ, முக பாவனைகளாலோ, தொட்டுச் சொல்வது போலவும் சொல்லலாம். ஆனால், தான் நினைக்கும் விஷயத்தை... சரியாகவும், முழுமையாகவும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அந்த வயதிலேயே வெளிப்படுத்தும் திறமை வளர்ந்திருக்கிறதா என்பதைத்தான் பெற்றோர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

இங்கே அதைக் கவனிக்கத் தவறினால்...? குழந்தையின் கற்கும் திறனும், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறனும், கருத்துகளைப் பரி மாற்றம் செய்யும் எழுத்தாற்றல், பேசும் திறன் எல்லாம் பாதிக்கப் படலாம். இந்தத் திறன்கள்தானே ஒரு குழந்தையை வெற்றி படிக்கட்டுகளில் ஏற்றி விடும் தாரக மந்திரங்கள்! குட்டிப் பாப்பா ஒரு சிட்டுக் குருவி பறப்பதை தன் மொட்டுக் கண்களால் ரசித்து, அது சிறகை விரித்து படபடவென பறக்கும் ஓசையை காதால் வாங்கி, 'இது எப்படி இவ்வளவு அழகா பறக்குது?!' என்று ஆச்சர்யப்பட்டு சிந்திக்கவும், புரிந்து கொள்ளவும் அந்த அழகுச் செல்லத்தின் மூளையில் இதற்கென 'வெர்னிக்கஸ்' (Wernicke's) என்ற பகுதி இருக்கிறது. இப்படி புலன்கள் ஐந்தும் உணரும் விஷயத்தை, ''நான் சிட்டுக் குருவி பறக்கறதைப் பார்த்தேனே!'' என்று சந்தோஷமாக தன் உணர்வை வெளிப்படுத்துவதற்கு 'புரோக்காஸ்' (Broca's) என்றறொரு பகுதியும் மூளையில் உண்டு.

மேற்சொன்ன இரு பகுதி களும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஒரு குழந்தையின் மொழியும், பேச்சும் சரியாகவும் முழுமையாகவும் அமையும். உதாரணமாக... உங்கள் சுஜ்ஜிம்மாவிடம், ''அண்ணாவோட லஞ்ச் பேக்கை எடுத்துட்டு வாடா செல்லம்'' என்று சொன்ன வுடன் குழந்தை புரிந்து கொண்டு லஞ்ச் பேக் இருக்கிற இடத்துக்கு சென்று பேக்கை எடுத்து வந்து, ''அம்மா இந்தாங்க'' என்று சொன்னால்.... சந்தோஷம். குழந்தைக்கு நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும், 'அம்மா இந்தாங்க' என்று சொன்ன பதிலில் அவளின் மொழியறிவும் சரியாக இருக்கிறது. அதாவது, 'வெர்னிக்கஸ்' மற்றும் 'புரோக்காஸ்' ஆகிய இரண்டு பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாறாக, நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், அந்தத் துறுதுறு குழந்தை திருதிருவென விழித் தால்... குழந்தையின் மொழியறிவு சரியாக இல்லை என்று அர்த்தம்.

குழந்தையின் உள்ளார்ந்த அறிவு... வீடு, அக்கம் பக்கம், அம்மா, அப்பா போன்ற சுற்றுப்புறங்களும்தான் மொழியறிவை வளர்க்கும் காரணிகள். மொழி, பேச்சு போன்றவற்றைத் தூண்டும் விதமாக சுற்றுப்புறம் இருக்க வேண்டியது அவசியம். அது சரியாக அமையவில்லை என்றால், அவளின் பேச்சுத் திறனும் மொழியறிவும் பாதிக்கப்படும். மொழியறிவு பாதிக்கப்படுவதற்கு சுற்றுப்புறம்தான் காரணம் என்றால், அந்த சுற்றுப்புறத்தை சீர் செய்தால், சுஜ்ஜிமாவுக்கு பேச்சு ஒரு தடை இல்லை. சுற்றுப்புறம் மிக நன்றாக அமைந்தும் சுஜ்ஜிம்மாவுக்கு பேசுவது புரியவில்லை என்றால்... அதன் மன  வளர்ச்சி யில் (மூளை வளர்ச்சியில் அல்ல) பிரச்னை என்று அர்த்தம்.

குழந்தையிடம் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், குழந்தை நம்மிடம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாத பெரும் சொத்து. அந்த சொத்தைக் கூர்ந்து கவனிப்பது... குழந்தையை வாழ்க்கை யின் உயரத்துக்கு உந்தித் தள்ளும் மகாசக்தி என்பதால் மழலை சொற் களை, அழகிய கண், கை, முக பாவனைகளை ஆழ்ந்து கவனிப்போம்.


-- குழந்தை மனநல மருத்துவர் ஷெயந்தினி