Saturday, July 9, 2016

நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல




ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.

கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை கூப்பிட்டாள்.

ஆனால் கிருஷ்ணனோ கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தான்.
கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.

கிருஷ்ணனோ திரும்பிகூட பாராமல் போய்விட்டான்.

ஒருவழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தன் வீடு வந்தவள் அதிர்ந்தாள்.

அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான்.கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான்.
உடனே கோபிகை 

கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்தபோது நீ திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாய்.ஆனால் இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே ஏன் என்று கேட்டாள்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் இப்படி கூறினான்.
" நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல."